யானைகளுக்கு முக்கியமாக பாகனின் கட்டளைகளுக்கு ஏற்ப அசையவும், அவைகள் மரக் கதவுகளை உடைக்கவும் மட்டுமே உபயோகபடுத்திக் கொண்டனர்.
யானைகளின் தும்பிக்கையில் உறையோடு கூடிய வாள் ஒன்று சொருகப் பட்டு, அது செல்லும் இடம் எல்லாம் கட்டளைக்கு ஏற்ப இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்தது. இவை சரியாக போரில் உபயோகப் படுத்தப் பட்டால் போகும் வழி எல்லாம் வீரர்களின் அலறல் சத்தம் நிச்சயம் என்று புரிந்தது.
ஆனால் ஒட்டகங்களை கிட்டத்தட்ட குதிரைகளைப் போல் பயன்படுத்திக் கொண்டனர். முன்னே, பின்னே திரும்ப, முன்னங்கால்களை தூக்கி எதிரில் இருப்பவரைத் தாக்க எல்லாம் பயிற்சிக் கொடுத்தனர்.
அதைத் திருப்தியுடன் பார்த்த ரானா, பிகானர் தலைவரிடம்,
“இந்தப் பயிற்சிகளைக் காண்பதில் என்னுடைய மனமானது மிகவும் பூரிப்படைகிறது தலைவரே. தங்களின் இந்த உதவியும், ஆதரவும் நம் வெற்றி இலக்கான சித்தூரை மீண்டும் அடைவோம் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது” என்று கூற,
பிகானர் தலைவரோ “ தங்களின் முயற்சி மிக உன்னதமானது மகாராஜ். இதில் என்னுடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதே எனக்கு மிகவும் கவுரவம்” என்று பதில் அளித்தார்.
அப்போது இவர்கள் பக்கத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் வேறு விதமான ஒலிகள் கேட்கவே, ரானா அங்கே சென்றார்.
அங்கே ப்ரித்விராஜ் தலைமையில் பயிற்சி நடந்து கொண்டு இருந்தது. அந்த முறையில் அவர்கள் உபயோகித்த வாள் வழக்கமான மேவாரின் வாளாக இல்லாமல் இருந்தது.
மேவாரின் வாள் இருபுறமும் கூறாகவும், அடியில் கைப்பிடி ஒன்று வளைந்தும் உருவாக்கப் பட்டு இருக்கும்.
ஆனால் ப்ரித்விராஜ் உபயோகித்த வாள் அதே போல் உயரம் இருந்தாலும், வாளின் முனை கூறாக இருந்தது. கைப்பிடியும் வித்தியாசமாக வளைந்து கையில் இருந்து நழுவாமல் இருக்கும் வகையிலும் இருப்பதைப் பார்த்து வியந்தார்.
ப்ரித்விராஜை அழைத்து விசாரிக்கக்,
“மகாராஜ் , இது வெளிநாட்டவர் உபயோகப் படுத்தும் வாள். இந்த ஆயுதம் நாம் உபயோகிக்கும் காண்டாவை விட எடைக் குறைவாகவும், அதே சமயம் முனை எந்த இடத்தில் பட்டாலும் அந்த நரம்புகளைக் கிழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. வாள் வீசுவதும் எளிது” என்று கூறினான்.
“பலே.. இதனால் நம் வீரர்கள் எளிதில் சோர்வுறாமல் அதிகம் வாள் வீசுவார்கள். பிகானர் வீரர்கள் மட்டுமில்லாமல், மேவார் வீரர்களுக்கும் இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.”
“ஆகட்டும் மகாராஜ்” என்றார்.
பிறகு வீரர்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பெரியத் திடலில் அமர சொல்லி கொம்புகள் மூலம் உத்தரவு போடப் பட்டது.
அனைவரும் அமர்ந்ததும், வீரர்களுக்குக் குறைகள் ஏதும் இருக்கிறதா என்று விசாரித்தார் ரானா.
எல்லோரும் நலமாக இருப்பதாகவும், வேண்டியது பிகானர் தலைவர் செய்து தருவதாகவும் கூறினார்கள்.
ஒரு வீரன் மட்டும் எழுந்து “ஒரே ஒரு குறை தான் மகாராஜ்” என,
“என்ன விஷயம் சொல்” என்றார் ரானா.
“தங்களின் வாள் சண்டைப் பார்த்து வெகு நாட்களாகி விட்டது மகராஜ். எங்களுக்காக ஒரு முறை தாங்கள் சண்டையிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் “ என்று கூறவும், ரானா பெரிதாக சிரித்தார்.
பின் “ஹ்ம்ம்.. ஆகட்டும் “ என்று உபதளபதிகளைப் பார்க்க, அவர்களளில் இருவர் மைதானத்தில் இறங்கினர். இருவரும் உக்கிரமாக சண்டைப் போட, ஒருவரின் ஆயுதம் கீழே விழவும், அடுத்தவர் இறங்கினர். இப்படியே பத்து பேர் வரை சண்டைப் போட்டனர்.
போர் வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
கடைசியில் நிற்பவரோடு மகாரானா சண்டை போட, இப்போது வீரர்கள் ஆரவார ஒலி விண்ணைத் தொட்டது.
ஏழடி உயரமும், அதற்கேற்ற உடலும் கொண்ட ராணாவின் முன்னால், சற்று நேரம் முன் வரை மற்ற தளபதிகளை வீழ்த்தியவர் சிறியதாகத் தெரிந்தார். ஆனாலும் அவர் தைர்யமாக நிற்கவே, அதைப் பார்த்து மிகப் பெரிதாகப் புன்னகை செய்தார் ரானா. சற்று நேரம் வெகு மும்முரமாக சண்டை நடக்க, ரானா தற்காப்பு மட்டுமே செய்து கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த தளபதியின் வாள் கீழே விழுந்து விட, அவரும் வெளியேறினார்.
“வேறு யாரேனும் போரிட வருகிறீர்களா?” ரானா வினவ, ப்ரித்விராஜ் முன் வந்தான்.
பிகானர் தலைவர் ரானா மரியாதைக் குறைவாக என்னுவாரோ என்றுத் தடுக்க நினைக்க, ரானாவோ விழிகளில் பளிச்சிடலோடு அவனை வரவேற்றார்.
ரானா எப்போதும் தன்னிடத்தில் இரு வாள்கள் வைத்து இருப்பார். எதிராளி ஆயுதம் இல்லாமல் நிற்க நேர்ந்தால், தன்னிடத்தில் உள்ள மற்றொரு வாளைக் கொடுத்து போரிடச் சொல்வார்.