(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 19 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

த்னாவிற்கு பணம் தருவதாக மஞ்சுளா சொல்லியிருந்தார் தான், ஆனால் விபாகரனுக்கு அவன் வேலை செய்யும் இடத்திலிருந்து சம்பளம் வர தாமதமானதால், தன்னிடம் இருந்த பணத்தை வீட்டு செலவுக்கென போட்டிருந்தார். இப்போது கையில் பணம் இல்லாமல் ரத்னாவிற்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை,

விபாகரன் இன்னேரம் வீட்டுக்கு வந்திருப்பான், அவனிடம் பணம் இருந்தால் கேட்டு வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்தப்படி தான் ரத்னாவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். ஆனால் அவர்கள் வந்த நேரம் விபா இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை, எதற்கும் அரச்சனாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து கேட்டுப் பார்த்தார்.

“என்னமோ நாம இங்க ராஜ வாழ்க்கை வாழறது போல, நீ இன்னொருத்தருக்கு கடன் கொடுப்பீயா? இது உனக்கு தேவையா..?” என்று அறைக்குள் இருந்தவள், வெளியில் ரத்னா காதில் படும்படி பேசினாள்.

“அம்மா தாயே தெரியாம உன்கிட்ட கேட்டுட்டேன்.. நான் ஏதாவது பார்த்துக்கிறேன்.. நீ வாயை திறக்காம இரு..” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

என்னவோ ரத்னாவுடன் மஞ்சுளா பழகுவது அர்ச்சனாவிற்கு பிடிப்பதில்லை, தன் அன்னையிடமும் அதைப்பற்றி சொல்லிப் பார்த்து விட்டாள். இப்படி எப்போதாவது ரத்னா காதில் படும்படியும் பேசுவாள்.

அதை கேட்டு ரத்னாவும் இனி மஞ்சுளாவோடு இங்கு வீட்டுக்கு வரக் கூடாதென்று தான் நினைப்பார். ஆனால் மஞ்சுளா இனிமையாக பழகும் போது ரத்னாவால் மஞ்சுளாவோடு இருக்கும் நட்பை விட்டுவிட முடிவதில்லை, அதனால் அர்ச்சனா பேசுவதை கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுவார்.

இப்போதும் அர்ச்சனா சொன்னது காதில் கேட்க, “பரவாயில்ல அக்கா.. நான் வேற எங்கேயாச்சும் கேட்டுப் பார்க்கிறேன்..” என்று சொல்லி கிளம்ப பார்த்தார்.

“இரு ரத்னா அர்ச்சனாவை பத்தி தான் உனக்கு தெரியுமில்ல.. இப்படி தான் வாய் துடுக்காக ஏதாவது பேசுவா.. விபு வீட்ல இருப்பான்னு நினைச்சு தான் உன்கிட்ட பணம் தர்றதா சொன்னேன்.. ஆனா அவன் இன்னும் வரல..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இப்போ என்ன நாளைக்கு யாதவி காலேஜ் போகும் போது தானே பணம் கட்டணும், விபு நாளைக்கு வேலைக்கு போறதுக்குள்ள வீட்டுக்கு வந்து கொடுக்க சொல்றேன்..” என்றார்.

“என்ன இருந்தாலும் அர்ச்சனா சொல்றதும் சரி தானே அக்கா.. நமக்கு வச்சிக்கிட்டு தான் அடுத்தவங்களுக்கு கொடுக்கணும்.. நீங்களே கஷ்டப்பட்றப்போ உங்கக்கிட்ட நான் எதிர்பார்க்கிறது தப்புக்கா..”

“நீ என்ன சும்மாவா எதிர்பார்க்கிற.. கடனுக்கு தானே கேக்குற.. அப்பப்போ சம்பளம் வந்ததும் திருப்பியும் கொடுத்துட்ற.. இப்போ வரும்போது தானே இதெல்லாம் பேசினோம், திரும்ப என்ன அதையே சொல்லிக்கிட்டு..” என்றவர், ரத்னாவுக்கும் அவருக்கும் பருக காபி கொண்டு வந்தார்.

காபி குடித்துக் கொண்டிருக்கும் போது, “நான் முன்ன சொன்னதை மறந்துட்டியா ரத்னா.. யாதவி படிச்சு முடிச்சதும் அவ எங்க வீட்டு மருமகன்னு சொல்லியிருக்கேனா இல்லையா? அவளோட படிப்புக்கான பொறுப்பு எனக்கும் இருக்கு.. இதை அவளுக்கு நாங்க சும்மாவே செய்யலாம்.. ஆனாலும் உனக்கு உறுத்தலா இருக்கக் கூடாதுன்னு தான் இப்படி பணம் தேவைப்படும் போது கடனா கொடுக்கிறேன்..”

“நீங்க சொன்னதை எப்படிக்கா மறக்க முடியும், முன்னல்லாம் யாதவியை நினைச்சு அடிக்கடி கவலைப் படுவேன், ஆனா இப்போ நீங்க சொன்ன வார்த்தை தான்க்கா எனக்கு நம்பிக்கையை கொடுக்குது.. ஆனா அந்த மனுஷன் யாதவியை சினிமாவுல நடிக்கிற விஷயம் பத்தி பேசற சமயம் தான் திக்கு திக்குன்னு இருக்கு..”

“எனக்கு புரியுது அப்படி எதுவும் நடக்காது.. அப்படியே எதுன்னாலும் நாங்கல்லாம் சும்மா இருந்துடுவோமா.. அதனால தேவையில்லாம கவலைப்படாத..” என்று சமாதான வார்த்தைகள் பேசி,

“நாம சம்மந்திங்க ஆகப் போறோம், இன்னும் என்ன அக்கான்னு கூப்பிட்டுக்கிட்டு..” என்றுக் கேட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்னமோ ஆரம்பத்துல அப்படியே கூப்பிட்டு பழகிடுச்சு.. கல்யாணம் முடிவாகட்டும் அப்புறம் மாத்திக்கிறேன்..” என்றவர்  நிம்மதியோடு வீட்டுக்குச் சென்றார்.

அவர் போனதும் மஞ்சுளா அருகில் வந்த அர்ச்சனா, “அம்மா கடன் கொடுக்கிறதே தப்புன்னு சொன்னா, நீ என்னடான்னா அந்த பொண்ணை மருமகளா ஆக்கிக்க ஆசைப்பட்ற..

அந்த யாதவி இருக்காளே, சரியான திமிறு பிடிச்சவ, எங்கேயாச்சும் வழியில் பார்த்தாக் கூட தெரிஞ்சவங்கன்னு நின்னு கூட பேசமாட்டா.. அவ நம்ம குடும்பத்துக்கு சரிப்பட மாட்டாம்மா.. ஏதோ அவங்க மேல இரக்கப்பட்டு உதவி செய்றதை கூட ஏத்துக்கலாம், ஆனா அதே இரக்கத்தால அந்த பொண்ணை அண்ணனுக்கு கட்டி வைக்கிறது நல்லதுக்கில்லை..” என்று சொல்ல,

“இது ரத்னாவுக்காக நான் எடுத்த முடிவுன்னாலும் யோசிக்காம எடுக்கல அர்ச்சனா.. யாதவி இப்போ சின்ன பொண்ணு, கொஞ்சம் பக்குவமில்லாம தான் இருப்பா.. ஆனா போக போக சரியாகிடுவா.. நாம ஒன்னும் கல்யாணத்தை இப்பவே நடத்தப் போறதில்லையே, அதனால எதையாவது நினைச்சு குழப்பிக்காத..” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அர்ச்சனா யாரையும் விட்டு வைக்காமல் படபடவென்று பேசுபவள் தான், ஆனால் சில சமயம் அவள் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்று மஞ்சுளா யோசித்திருந்தால், பின் வரவிருக்கும் துன்பங்களை தவிர்த்திருக்கலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.