தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 54 - சித்ரா. வெ
கதிரவனும் எழிலும் வீட்டுக்கு வந்த போது புவி தான் வந்து கதவை திறந்தான். “அக்கா எங்கடா?” என்று எழில் கேட்க,
“அக்காவும் நானும் சீக்கிரமே சாப்பிட்டோம் ம்மா.. அக்காக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு போய் படுத்துட்டாங்க.. நீங்க யாரும் இல்லாததால எனக்கு தூக்கம் வரலையா? அதான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன்..” என்று புவி பேசி முடிக்கும் முன்பே, கதிர் சுடரொளியின் அறையை நோக்கிச் சென்றார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“அம்மா.. அக்கா ரூம்க்கு அப்பா போறாரு..” என்று வியப்பாய் புவி கேட்க,
“போய்த்தான் ஆகணும் புவி.. இதுக்கும் மேல உங்கப்பா அமைதியா இருந்தா, அவரோட இந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லடா..” என்றவள்,
“சரி அருள் அக்கா உனக்கு கேக், ஸ்னாக்ஸ்ல்லாம் கொடுத்து அனுப்பியிருக்கா.. சீக்கிரம் சாப்பிட்டல்ல.. அதனால பசிக்கும், இதை சாப்பிட்டு படு, அண்ணா மாமா வீட்டுக்கு போயிட்டான்.. நீ தனியா படுப்பல்ல..” என்று அவனைக் கேட்க,
“படுப்பேன் ம்மா..” என்றவன், “அக்காவுக்கு கேக் இல்லையாம்மா..” என்றுக் கேட்டான்.
“அக்காவுக்கும் இருக்கு.. அவளுக்கு காலையில் கொடுத்துக்கிறேன்.. நீ போய் சாப்பிட்டு தூங்கு..” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
அவள் புவியிடம் பேசிக் கொண்டிருந்த அதே நேரம் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சுடரின் அருகே அமர்ந்த கதிர், அவளை பார்த்தப்படி தன் கையால் அவளது தலையை கோதிக் கொண்டிருந்தார்.
உறக்கத்தில் மகிழ் தொட்டதையே தன் தந்தை தொட்டதாக நினைத்தவளுக்கு, இப்போது தந்தையே தொடும்போது அமைதியாக இருப்பாளா?
“அப்பா..” என்று உறக்கத்திலேயே அவரை அழைக்க, அதை கேட்டவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
அந்த நேரம் அங்கு வந்த எழில் கதிரின் தோளை தொடவும், “தூக்கத்துல கூட என்னை உணர்ந்து அப்பான்னு சொல்றா.. ஆனா அது கூட தெரியாம கல் நெஞ்சக்காரனா நான் இருந்திருக்கேன் எழில்..” என்றவரின் நெஞ்சில் அந்த நேரம் சுருக்கென்று வலி வந்து போனது.
“இப்போ தான் தெரிஞ்சிக்கிட்டீங்களே விடுங்க.. இப்போ சுடர் இங்க தானே இருக்கா.. காலையில் அவக்கிட்ட பேசிக்கலாம்.. வாங்க இப்போ வந்து தூங்குங்க..” என்று எழில் அவரை அழைக்க,
“எழுந்திருக்கும் போது மேசை மேல் கைப்பட்டு அங்கிருந்த ஒரு டைரி மட்டும் கீழே விழுந்தது.
சுடர் விழித்துக் கொண்டாளா? என்று பதட்டத்தோடு அவர் பார்க்க, ஒருமுறை அவளோ நெளிந்து பின் திரும்பி படுத்துக் கொண்டாள்.
பின் அந்த டைரியை மூடலாம் என்ற போது தான் அதிலிருந்த தன் ஓவியத்தை பார்த்தார். அந்த நேரம் ஆனந்தி சொன்னது நினைவில் வர, அங்கிருந்த அத்தனை டைரிகளையும் கையில் எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
எழிலோடு தங்கள் அறையின் கட்டிலில் அமர்ந்தவர் ஒவ்வொரு டைரியாய் எடுத்து அதிலுள்ள புகைப்படங்கள் மட்டும் அல்ல, அதில் எழுதி இருந்ததையும் படிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் சுடர் அவளது டைரியில், அப்பா எப்போ என்னைப் பார்க்க வருவீங்க.. எனக்கு உங்க ஞாபகமாகவே இருக்குப்பா.. நான் அம்மாக் கூட இருப்பேன்னு சொன்னா தான் நீங்க என்னையும் அம்மாவையும் தேடி வருவீங்கன்னு பாட்டி சொன்னதால தான் கோர்ட்ல அப்படி சொன்னேன்ப்பா.. ஆனா இங்க வந்ததுல இருந்து எனக்கு இங்க இருக்க பிடிக்கவே இல்ல.. சீக்கிரம் வந்து என்னை கூட்டிட்டு போயிடுங்கப்பா.. அம்மாவும் பாட்டியும் வேணா இங்க இருக்கட்டும்..” என்று சில கடிதங்களில் அவளை வந்து அழைத்துப் போக சொல்லி தான் எழுதியிருந்தாள்.