தொடர்கதை - காணாய் கண்ணே - 13 - தேவி

கிருத்திகா அன்று இரவில் தூங்கவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தபோது அவளுக்கு வீட்டில் இருந்து போன் வந்தது. போனில் அவள் அம்மா. போன் எடுத்தவள்,
“மா, “ என்று அழைக்கவும், அவளின் அம்மா திகைத்தார்.
அந்தக் குரல் அவளுக்குப் பிரச்சினை என்றால் மட்டுமே வரும் குரல். அவள் அப்பா ஸ்ட்ரிக்ட். பெரியப்பா இவளுக்கு விவரம் தெரிந்த பின் தான் இவர்களோடு வசிக்கிறார். எப்போதும் அழுத்தமாக அம்மா என்று சொல்பவள், ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டுமே மா என்று குழைவாள். அதுவும் அவளின் பெரியப்பா வந்தபின் செல்லம் கொடுக்கா விட்டாலும், அவளின் விருப்பம், தேவை இரண்டும் உணர்ந்து அதைச் சரியாகச் செய்து விடுவார்.
அதே போல் அவள் டிரஸ் விஷயத்திலோ , வெளியே செல்வதிலோ எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் அனைத்திலும் அவளின் பாதுகாப்புப் பற்றிய எண்ணங்களை அவளையே உணர வைத்தார். அதனால் சரியான இடங்களுக்கு தகுந்த பாதுகாப்போடு செல்ல பழகி இருந்தாள். அதே போல் வெளியே சுற்றுவது அவள் இஷ்டம் என்றாலும், அவள் எங்கே செல்கிறாள் என்பதைக் கண்டிப்பாக சொல்லி விட்டே செல்வாள். முடிந்த வரை தனியாக செல்ல மாட்டாள். பிரெண்ட்சோடு கும்பலாக செல்பவள், பிரச்சினை என்றால் தயங்காமல் தட்டிக் கேட்பாள். அதனால் சிறு வயதிற்குப் பின், அவள் அம்மாவை வம்பு இழுப்பாளே தவிர, அம்மாவிடம் ஆதரவு தேட மாட்டாள். அவள் தான் அம்மாவிற்கே ஆதரவாக இருப்பாள். அவளைப் பற்றிக் கவலைப் படும்போது எல்லாம் அவரைத் தேற்றுவாள்.
அப்படிப்பட்டவள் கீழே விழுந்தால் அம்மாவைத் தேடும் குழந்தை போல் பேசவும், அந்த தாயின் மனம் பதைத்தது. ஆனால் காட்டிக் கொள்ளாமல்,
“அட.. என்ன இது நம்ம வீட்டு சிங்கம் இன்னைக்கு சாதுப் பசுவாக மாறிட்டுதே” என்று கேலி செய்தார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அவளின் அம்மாவின் நக்கலில் சிலிர்த்துக் கொண்ட நம் பெண் சிங்கம்,
“ஹலோ மாதாஜி, யாரு பசு? நாங்க எப்போவும் ரோரிங் லயன் தான்“ என்றாள்.
“அப்புறம், என்னவோ மா ன்னு ஒரு குரல் கேட்டதே. அது யாரோடது மா. உன்னோட போன்லே வந்த கிராஸ் டாக்கா இருக்குமோ?
“ஹி.. ஹி.. அது .. “ என்று சமாளித்தவள், “ஏதோ பார்த்து ஐஞ்சு நாளைக்கு மேலே ஆகிட்டுதே, நீங்க என்னைத் தேடுவீங்களேன்னு ஒரு ப்ளோலே சொல்லிட்டேன். அதுக்கு என்னைப் பசுன்னு சொல்லுவீங்களா?” என்று வேகமாகக் கேட்டாள்.
“ஓகே.. ஓகே.. சிங்கம் இஸ் பாக்” என்று அவள் அம்மா கூறவும்,
“அது” என்றாள் கிருத்திகா.
பிறகு வீட்டில் உள்ள எல்லாரைப் பற்றியும் விசாரிக்க, அவள் அம்மா துர்கா பதில் சொன்னார். அவரும் பதிலுக்கு அவள் ட்ரிப் பற்றிக் கேட்க, கிருத்தியும் பதில் சொன்னாள்.
அவள் சென்ற இடம் பற்றி எல்லாம் சொன்னவள், ப்ரித்வியுடன் வம்பு வளர்ப்பதையும் சொன்னாள். ஆனால் அவளை சிலர் ட்ரெயினில் வம்பு செய்தது, அவளை மயக்க முயற்சித்ததுப் பற்றி எல்லாம் கூறவில்லை. அவளின் உற்சாகமான பேச்சைக் கேட்டப் பின்பே சற்று சமாதானமானார் துர்கா.
கடைசியில் அவளிடம் என்னப் பிரச்சினைன்னு கேட்கலாமா என்று நினைத்தவர், பிறகு அவள் அதை மறந்தார் போல் பேசியதில் மீண்டும் நினைவுப் படுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
துர்காவிற்கு மகளின் மேல் நம்பிக்கை இருந்தது. அவள் தன்னைக் காத்துக் கொள்வாள் என்பதோடு அவளால் சமாளிக்க முடியாவிட்டால் தன் பெரியப்பாவிடம் சொல்லி விடுவாள் என்றும் தெரியும். இன்றைக்கு அவள் தன்னைத் தேடியது போல் தான் இருந்ததே தவிர, பிரச்சினைக்கு உண்டான கலக்கம் தெரியவில்லை. அதனால் தான் அவளிடம் மீண்டும் அதைப் பற்றிக் கேட்காமல் விட்டார்.
ஆனால் மகளிடம் தான் கேட்கவில்லையே தவிர, தன் கணவரிடமும், அவர் சகோதரிடமும் சொல்லி விட்டார்.
சாப்பிட்டு முடித்து முன் வரண்டாவில் நின்று கிருத்தியிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் உள்ளே வந்தபோது , அண்ணனும் தம்பியும் ஹால் சோபாவில் அமர்ந்து நியூஸ் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
துர்காவின் முகத்தைப் பார்த்து விட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பிரதாப் சக்தியிடம் கண்ணசைக்க, அவரும்
“துர்கா” என்று அழைத்தார். கிருத்திப் பற்றிய யோசனையில். இருந்தவர், கணவர் அழைக்கவும் அவரை என்ன என்பது போல் பார்த்தார்.
“உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு? என்ன சொன்னா கிருத்திகா? “ என்று கேட்டார் சக்தி.
“எப்போவும் போலே தான் பேசினா. ஆனால் முதலில் பேசும்போது குரல் ஒரு மாதிரி இருந்தது” என, பிரதாப்
“எப்படி இருந்தது?” என்று கேட்டார்.
“சொல்லத் தெரியல. எதுவும் பிரச்சினையா இல்லை நம்மள மிஸ் பண்றாளான்னு தெரியல?
பிரதாப் ஏதோ யோசிக்க, சக்தியோ துர்காவை சமாதானம் செய்தார்.