தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ
அன்றும் யாதவி கல்லூரியில் காலை வகுப்பை தவிர்த்துவிட்டு கேண்டினுக்கு போக, இன்று ஒரு தோழி மட்டுமே அவளை போல் வகுப்புக்கு போகாமல் அவளுடன் இருந்தாள். மற்றவர்களெல்லாம் வகுப்புக்கு சென்றிருக்க, வழக்கமாக இருக்கும் அரட்டைக் கச்சேரி இல்லாமல் இருவர் மட்டுமே ஏதேதோ பேசியப்படி அமர்ந்திருக்க,
“ஹேய் யாது சாத்விக்கோட மூவிக்கு டீஸர் யூட்யூப் ல ரிலீஸ் ஆயிருக்கு டீ.. இன்னைக்கு என்னோட அண்ணாக்கிட்ட இருந்து மொபைலை ஆட்டைய போட்டுட்டேன்.. அவன் ஒரு மாசத்துக்கு நெட் ரீசார்ஜ் செஞ்சுருக்கான்.. யாருமே இல்லாம போர் அடிக்குது.. வர்றீயா பார்க்கலாம்..” என்று அந்த தோழி சொல்ல,
எப்போதும் ஒரு அலைபேசி அதில் நாலைந்து பேர் சூழ்ந்து தான் இதுபோல் காணொளிகளையோ இல்லை வேறு ஏதாவதோ பார்ப்பார்கள். அப்படி கூட்டத்தோடு கூட்டமாக பார்க்க தான் அவளுக்கும் ஒருமாதிரி இருக்கும், இன்று இருவர் மட்டும் தானே இருக்கிறோம், பார்த்தால் என்ன? என்று யாதவிக்குமே தோன்ற, சரி என்று ஒத்துக் கொண்டாள்.
“அன்னைக்கு ஹெச். ஓ. டி ரூம்க்கு ஒரு விஷயமா போயிருந்தப்போ அனு, சக்தின்னு ஒரு க்ரூப்பே சாத்விக்கோட ஒரு வீடீயோவை பார்த்துட்டு என்னை வெறுப்பேத்தினாங்க தெரியுமா? இன்னைக்கு இந்த டீஸரை பார்த்துட்டு நாம அவங்களை ஓட்டணும் வா வா..” என்று சொல்லிய தோழி காணொளியை காண விடவும்,
அதில் வந்த சாத்விக்கை பார்த்து ஒன்றுக்கு இரண்டு முறை யாதவி கண்களை கசக்கிக் கொண்டாள். அவள் கண்கள் காண்பது கனவா? நிஜமா? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
தோழியிடம் இன்னொரு முறை காட்ட சொல்லி பார்த்த போது தான், அதில் நடித்திருப்பது சது அதாவது சாத்விக் என்பதை உறுதியாக தெரிந்துக் கொண்டவளுக்கு,
“ஏன் அவன் சொல்லவில்லை, தெரியாதது போல் இது என்ன பாட்டு, படம்? சாத்விக் யாருன்னுல்லாம் கேட்டான் இல்ல.. அவனுக்கு இருக்கு..” என்றவளுக்கு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க வேண்டும் என்பது போல் இருந்தது.
பின்னே கல்லூரியில் முக்கால்வாசி பேர் சாத்விக் சாத்விக் என்று அவனுக்காக உருகிக் கொண்டிருக்க, அவன் இவளின் தோழனல்லவா? அது அவளுக்கு எத்தனை பெருமை, அவளுக்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை, இதை தோழிகளிடம் சொல்லாமல் எப்படி?
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“ஹேய் இந்த சது.. ச்சீ சாத்விக் என்னோட ப்ரண்ட் டீ.. நேத்து கூட அவனோட பேசினேன்.. அதான் சதுன்னு உன்கிட்ட கூட அன்னைக்கு சொன்னேனே.. அவன் தான் இந்த சாத்விக்..” என்று குதுகலமாக கூறினாள்.
“ஹேய் என்னடி சொல்ற.. நீ சொல்றது உண்மையா? இல்லை யாரையோ சாத்விக்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா?”
“இல்லடி நிஜமா தான் சொல்றேன்.. நேத்து வரை எனக்கு சாத்விக்கை தெரியாது.. ஆனா இன்னைக்கு இந்த போட்டோ பார்த்தா அவன் சாத்விக்னு கூடவா தெரிஞ்சிக்க மாட்டேன்.. அவன் தான் டீ..
உனக்கு தெரியுமா.. அன்னைக்கு அப்பாக்கூட ஒரு ப்ரொட்யூஸரை பார்க்கப் போனேன் இல்ல.. அது சாத்விக் நடிக்கிற புதுப்படத்துக்கான ஹீரோயின் செலக்ஷன்க்கு தான் போல.. ஆனா அப்பா அப்போ சொன்னதை நான் சரியா கவனிக்கல.. எனக்கு தான் அதுல இன்ட்ரஸ்ட் இல்லையே.. அந்த வீட்டுல வச்சு தான் நான் சாத்விக்கை பார்த்தேன்.. எனக்கு அவனை தெரியாததால நான் அவன் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவன்னு நினைச்சேன்.. அவன்கிட்டேயும் அப்படியே பேசவும், அவனும் அப்படியே இருக்கட்டும்னு நினைச்சுக்கிட்டான் போல, அதான் அவனைப் பத்தி என்கிட்ட சொல்லவே இல்லை..” என்று பெருமையாக கூறினாள்.
“ஹே சாத்விக்கோட நடிக்கிறதுக்கான செலக்ஷன்க்கா நீ போன.. அடிப்பாவி இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிருந்தா நான் மிஸ் பண்ணாம பெஸ்ட்டா நடிச்சுக் காட்டணும்னு நினைச்சுருப்பேனே, இப்படி சான்ஸ கோட்டை விட்டுட்டியே டீ..” என்று அந்த தோழி குறைப்பட்டுக் கொள்ள,
“அதனால என்ன அப்படியும் சது.. ச்சீ சாத்விக் எனக்கு ப்ரண்டா ஆகிட்டான் இல்ல..” என்றாள்.
அதற்கு அந்த தோழியும் ஆமாமென்று தலையாட்டினாள். மதிய சாப்பாட்டு நேரம் யாதவி தோழிகளின் மத்தியில் மிகவுமே பிரபலமாகிவிட்டாள். அவளிடம் சாத்விக்கை பற்றி கேட்டு அவளை ஒரு வழி செய்துவிட்டனர். சாத்விக்கை அவர்களும் சந்திக்க வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவளை மன்றாடிக் கொண்டிருந்தனர்.
“இருங்க அவன் தான் சாத்விக்னு என்கிட்ட அவன் சொல்லலல்ல.. அதுக்கு அவனை ஒருவழி பண்ணிட்டு அப்புறம் இதுக்கெல்லாம் ஏற்பாடு செய்றேன்..” என்று அவர்களிடம் கூறினாள்.
அன்று மாலையே அவனை சந்திப்பதற்காக சென்றாள். அவர்கள் இப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அவள் வைத்திருக்கும் சாதாரண அலைபேசியில் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருவருமே பேசிக் கொள்வார்கள்.
அவன் சாத்விக் என்று அறிந்ததிலிருந்தே அவனை காணும் ஆர்வத்தில் இருந்தவள், கொஞ்சம் முன்னதாகவே அங்கு சென்றவள், அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.