அவனும் சற்று நேரத்தில் வந்துவிட்டான். எப்போதும் போல் கண்களில் கூலர், தொப்பி, முகத்தில் கர்சிப் என்று வந்தான். எப்போதும் “இப்படி ஏன் வருகிறாய்?” என்று அவனிடம் கேட்பாள்.
“சினிமால நடிக்க ட்ரை பண்றேன் இல்லையா? வெயிலில் அடிக்கடி போக வேண்டியிருக்கும் போது ஸ்கின் ஸ்பாயில் ஆயிடும் இல்லையா?” என்று சமாளிப்பான்.
இப்போது தானே அவன் எதற்காக இப்படி வந்தான் என்று தெரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டவள், அவளை பார்த்துக் கொண்டே அவன் வரவும், “மகா கணம் பொருந்திய சார்மிங் ஸ்டார் சாத்விக் அவர்களே வருக வருக..” என்று வரவேற்க,
அவளுக்கு தெரிந்துவிட்டதை அறிந்து கண்களில் வியப்பை காட்டியவன், அது அதிக கூட்டமில்லாத இடமாக இருந்தாலும் யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்தப்படியே அருகில் வந்தவன்,
“தெரிஞ்சிடுச்சா..” என்று புன்னகையோடு கேட்கவும்,
“தெரிஞ்சுடுச்சா எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சா..” என்று காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் சொல்வது போல் சொல்லிக் காட்டியப்படி சிரித்தாள்.
“ஆமாம் நீ தான் சாத்விக்னு ஏன் என்கிட்ட சொல்லல.. போ உன்மேல கோபமா இருக்கேன்..” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“உனக்கு என்னை தெரியவே இல்லையா? அதான் தெரியவரைக்கும் அப்படியே மெயிண்டெயின் செய்வோம்னு நினைச்சேன்.. ஆமாம் உனக்கு எப்படி தெரிஞ்சுச்சு?” என்று அவன் கேட்டதற்கு கல்லூரியில் நடந்ததை சொன்னவள்,
“சது என்னோட ப்ரண்ட்ஸ்ல்லாம் உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க.. எல்லோரும் உன்னோட ஃபேன் தெரியுமா? நான் உன்னோட ஃப்ரண்ட்னு தெரிஞ்சதும் எல்லாம் என்னை அப்படியே கொண்டாடினாங்க தெரியுமா? அதனால ப்ளீஸ் சது, எனக்காக அவங்களை ஒருமுறை பார்க்கணும்..” என்று அவனிடம் மன்றாடிக் கொண்டிருக்க,
அவன் சாத்விக் என்று தெரிந்த பின்பும் சது என்று அவள் அழைத்ததில் விழுந்தவன், அவள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டான். அதை நிறைவேற்றியும் வைத்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் " உயிரில் கலந்த உறவே " - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அதன்பின்பும் அவர்கள் அவளுக்கு கல்லூரி முடிந்ததும் சந்தித்துக் கொண்டார்கள். அலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பேசிக் கொண்டார்கள்.
ரத்னா மாலை தாமதமாக தான் வீட்டுக்கு வருவதால் யாதவியும் கல்லூரி முடிந்தும் தாமதமாஜ வருவது அவருக்கு தெரியவில்லை. பன்னீர் வீட்டில் இருந்தாலும் அவர் அதையெல்லாம் கண்டுக் கொள்ள போவதில்லை. இப்படியாக சில நாட்கள் செல்ல, மகளின் நடவடிக்கை ரத்னாவிற்கும் ஒருநாள் தெரிய வந்தது.
அவர்கள் தெருவில் உள்ள இன்னும் சில பெண்கள் யாதவி படிக்கும் கல்லூரியிலேயே படிக்க, யாதவியும் அவள் தோழிகள் கூட்டம் என்று ஒரு பட்டாளமே சாத்விக்கை சந்தித்து அவனுடன் புகைப்படமெல்லாம் எடுத்துவிட்டு வந்தது கல்லூரி முழுவதுமே பரவியிருக்க, அதுவும் அதற்கு காரணம் யாதவி என்பது தெரிய வர, அதிலும் ஒன்றிரண்டு பேர் அடிக்கடி அவளை வெளியில் பார்க்கவும்,
பன்னீர் யாதவியை சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருவது அங்குள்ளவர்களுக்கும் கொஞ்சம் தெரியும் என்பதால், “பொண்ணை சினிமாவில் நடிக்க வைக்கிறதுக்காக இப்படியெல்லாமா செய்வாங்க.. பொண்ணை ஏதோ சினிமாக்காரன் கூட சுத்த விட்ருக்கானே, இது வெறும் நடிப்புக்கான வாய்ப்பா.. இல்லை பொண்ணை வச்சு வேற வழியில் பணம் சம்பாதிக்க முடிவுப் பண்ணிட்டானா? அப்பன்காரன் இப்படி செய்றதெல்லாம் ஆத்தாக்காரிக்கு தெரியுமா? அவளும் பணம் கிடைக்குதுன்னு அமைதியா இருக்காளா?” என்று தவறாக ரத்னாவின் காதுபடவே பேச ஆரம்பிக்க,
முதலில் ரத்னாவிற்கு ஒன்றும் புரியவில்லையென்றாலும் பின் அவளுக்கு நெருக்கமான சிலர் நடந்த விஷயங்களை கூறி, யாதவியை இங்கு பார்த்தோம் அங்கு பார்த்தோம் என்று அந்த இடங்களையும் கூறவும், கோபம் கொண்ட ரத்னா ஒருநாள் இருவரும் சந்திக்கும் இடத்திற்குச் சென்று அவர்களை நேரில் கண்டும் விட்டார்.
யாதவியை சாத்விக்கோடு ஒன்றாக பார்த்ததும், “படிக்கணும்னு காலேஜ் அனுப்பினா, இப்படி ஊர் சுத்திக்கிட்டு இருக்கியா? இதுக்கு தான் நான் கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறேனா? ஏன் டீ இப்படி செய்ற?” என்று சொல்லி யாதவியை நன்றாக அடித்தவர், அவரது செயலை தடுக்க முடியாமல் நின்ற சாத்விக்கை பார்த்து,
“தம்பி உங்களுக்கே நல்லா இருக்கா.. இவ இப்போ தான் காலேஜ் முதல் வருஷம் படிக்கிற பொண்ணு.. இன்னும் 18 வயசு கூட முடியல.. அவளை இப்படி வெளியே கூட்டிட்டு சுத்தறீங்களே..
சினிமால நடிக்கிற நீங்க இப்படி சாதாரண பொண்ணான இவக் கூட சுத்தினா அவளை தப்பா பேச மாட்டாங்களா? அதனால அவளுக்கு கெட்டப்பேரு உருவாகாதா? சினிமால நடிக்கிறது போக மத்த நேரம் உங்க பொழுதை போக்கிக்க உங்களுக்கு என்னோட பொண்ணு தான் கிடைச்சாளா? விட்டுவிடுங்க தம்பி.. அவ படிக்கிற பொண்ணு, அவளை படிக்க விடுங்க.. இப்பவே தெரிஞ்சவங்க தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா? தயவுசெஞ்சு இனி இவளை பார்க்காதீங்க..” என்று அவனை கைகூப்பி கெஞ்சியவர், யாதவியை கைப்பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றார்.