தொடர்கதை - சிவகங்காவதி - 18 - ஸ்ரீ
“குறிஞ்சித் திணை – கிள்ளைப் பத்து
கிளிகள் மிகுந்த மலையின் தலைவன் தலைவியின் காதலன்.
கிளியின் செயல்கள் தலைவனின் செயல்களோடு ஒப்புமை உடையனவாக, - உள்ளுறை உவமையாக – காட்டப்பட்டுள்ள பத்துப் பாடல்கள் இதில் உள்ளன.
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய, பலவே ஒள் இழை
இரும் பல் கூந்தல் கொடிச்சி
பெருந் தோள் காவல் காட்டியவ்வே.281
தலைவியை விரும்பும் தலைவன் சொல்கிறான்.
வெள்ளம் என்னும் எண்ணின் அளவு ஊழிக் காலமாகக் கிளிகள் வாழ்கின்றன.
இந்தக் கிளிகள் வாழ்க.
இவை விளைந்திருக்கும் தினையைக் கவர்வதால் தானே அந்தக் கிளிகளை ஓட்டும் பொருட்டு என் காதலி கொடிச்சி தினைப்புனம் காவலுக்கு வந்துள்ளாள்.
அவளது பருத்த தோள் எனக்குக் கிடைப்பதாயிற்று.
சிவகங்காவதியிடம் மனம் விட்டு பேசிய பிறகு தான் நஸீமின் மனம் சற்றே அமைதி கொண்டது.அடுத்து அவனுக்கிருக்கும் கடமை சற்றே சவாலானது.முகத்திற்கு எதிர் நிற்கும் எதிரியை வெல்வதை விட கொடுமை முதுகிற்குப் பின் இருக்கும் துரோகியை கண்டறிந்து பாடம் புகட்டுவது.
கங்கா கூறிய அனைத்தையும் யோசித்துப் பார்த்தவனுக்குத் தெளிவாய் புரிந்தது இங்கிருக்கும் ஒருவரின் உதவியின்றி இவையனைத்தும் சாத்தியமில்லை என்பது.அவன் பேரரசரை சந்திக்கச் சென்றது முதல் அங்கு அவரிடம் பேசியது வரை அனைத்தும் தெரிகிறதென்றால் அத்துனை நெருங்கிய நிர்வாகி யார் என யோசிக்கலனான்.
தளபதி ரஹீமை அழைத்து விடயத்தைத் தெரிவித்தவன் முதலில் அவன் உயிருக்கு ஆபத்து விளைவிக்க எண்ணும் மற்ற அரசர்களை என்ன செய்வது என சிந்திக்கலானான்.
“கடந்தமுறை என்னை கொல்ல வந்தவனுக்கு தண்டனை நிறைவேற்றிய நேரம் கூறினானே ரஹீம் அவன் மட்டுமல்லாது என் உயிருக்கான குறி நிறைய பேரிடம் இருக்கிறது என்று.அவர்களில் முதன்மை இடத்தில் இருப்பவர்கள் யாரென உனக்கு தோன்றுகிறதோ அவர்களின் பெயர்களை என்னிடம் பட்டியலிடு.”
“உசூர் எனக்கு இரண்டு மூன்று பேர் மேல் தான் சந்தேகம் வலுவாக இருக்கிறது.அவர்களை சிறை செய்து நம் முறையில் விசாரனை செய்தால் நிச்சயம் இங்கிருந்து யார் மூலம் அவர்களுக்கு தகவல் செல்கிறது என்பதை கண்டுபிடித்து விட முடியும்.”
“அப்படியென்றால் தாமதம் எதற்கு மூவரையும் ஒரே நேரத்தில் கைது செய்.ஒருவரைப் பற்றிய செய்தி மற்றவருக்குத் தெரிந்து தப்பித்து விடக் கூடாது.என் துரோகியை இனம் கண்டு கொண்டே ஆக வேண்டும் புரிந்ததா?”
“அப்படியே செய்கிறேன் உசூர்.இன்று இரவு நேரத்திற்குள் நல்ல செய்தியோடு வருகிறேன்.”
நஸீமின் மனம் பலவாறு சிந்தனையில் உழன்றது.எனினும் இரவு வரை காத்திருப்பதன்றி வழியில்லை என்று உணர்ந்தவனாய் பொறுமை காத்தான்.
இதற்கிடையில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்று வர முடிவெடுத்தான்.யாரிடமும் எதுவும் கூறாமல் தன் வீரர்களில் சிறந்தவன் ஒருவனை அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே சென்றான்.
அவனின் சாதாரண உடையில் அத்தனை எளிதாய் யாராலும் அவனைக் கண்டு கொள்ள முடியவில்லை.வியாபாரிகளின் இடத்திற்குச் சென்றவன் பொருட்களின் விலைகளைக் கேட்டறிந்தான்.
மக்களால் அத்தியாவசிய உணவுகளை வாங்கும் நிலைதான் இருக்கிறது என்பதை உறுதி செய்த பின்பு அங்கிருந்து நகார்ந்தவன் தொழுகைக்கான நேரம் நெருங்கியதை உணர்ந்து அருகிலிருந்த மசூதிக்குள் நுழைந்து மக்களோடு மக்களாய் தன் கடமையை முடித்து அங்கேயே மற்றவர்களோடு சிறிது நேரம் அமர்ந்தான்.
“ஏனய்யா உனக்கு விடயமே தெரியாதா நம் அரசரின் மனைவியை கொல்வதற்காக ஏதோ சதி வேலைகள் நடந்திருக்கிறதாம்.இறுதி நேரத்தில் நம் உசூர் சென்று மீட்டு வந்து விட்டாராம்.”
“ம்ம் நானும் கேள்விப்பட்டேன் அந்தப் பெண் இந்து மதத்தை சார்ந்தவள் என்பதால் இந்த முயற்சி நிகழ்ந்திருக்கலாம்.நம்மில் பலருக்குத் தான் மனிதத்தை தாண்டிய மதவெறி தலை தூக்கியிருக்கிறதே”
“எல்லாம் அந்த காசிம் தான் தேவையற்ற மத போதனைகளை மக்களுக்குள் திணித்து வேற்றுமையை விளைவித்து சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துகிறான்.”
“ஒரு விதத்தில் அவன் கூறுவதனைத்தும் சரிதான் ஐயா,இஸ்லாம் கொள்கைகளை இத்துனை வருடம் பின்பற்றி வரும் ஒருவனால் எப்படி வேற்று மதத்தை தன் இல்லறத்திற்குள் கொண்டு வர முடியும்?”
“இஸ்லாம் மட்டுமல்ல எந்த ஒரு மதத்திற்கும் அடிப்படை பிற உயிர்களுக்கு அன்பு செய்வது என்பதே.அதை விடுத்து நீ பெரிதா நான் பெரிதாவென போர் புரிய தொடங்கினால் அழிவு தான் மிஞ்சும்.