“ஆனால் மூன்று அரசர்களுக்குமே உங்களை எதிர்த்துபோர் புரியுவதற்கு அழைப்பு வந்திருக்கிறது.அனுப்பியது யாரென கேட்டதில் மூவரின் பெயரிலும் மாற்றி மாற்றி மற்றவருக்கு ஓலை சென்றிருக்கிறது.
இருந்தும் தங்களின் மீதிருந்த அச்சத்தால் அதை செயல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கின்றனர்.இப்போது தனித்தனியாக மூவரையும் விசாரிக்கும் போது இதை கூறினார்கள்.”
இவையனைத்தையும் கேட்டவனின் முகத்தில் குழப்ப ரேகைகள்.
“இது எவ்வாறு நடக்க இயலும் ரஹீம்!!அன்று சிவகங்காவதியை கொல்ல முயன்றவர்களும் இறுதிவரை எந்த அரசரின் பெயரையும் குறிப்பிடவில்லையே.எங்கிருந்தும் கட்டளை வராமல் எதற்காக அவர்கள் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்?”
“உசூர் அவர்கள் ஏதோ ஒரு பெயரைக் கூறினார்கள்.தாங்கள் அரசியாரை சந்திக்கச் சென்றிருந்த நேரம் ஒருவன் கூறினான் அது..அது..ஆஆ காசிம்!!”
“காசிம்??!”
“ஆம் உசூர் இந்த பெயரைக் கூறினான் நன்றாக நினைவிருக்கிறது.ஆனால் அந்த பெயரில் நமக்குத் தெரிந்தவர் யாருமில்லை என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர்கள் பொய் உரைக்கிறார்கள் என்று எண்ணிவிட்டேன்.”
“இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டேன் ரஹீம்!!”,என்றவன் தன் ஆள்காட்டி விரலால் தன் நெற்றியை யோசனையாய் தேய்த்தான்.
“இன்றுகாலை குடிமக்களில் ஒருவர் கூறக் கேட்டேன்.!!”
“என்ன??!”
“ஆம் நான் இன்று காலை நகர்வலம் சென்றிருந்தேன்.அப்போது ஒருவர் இவன் பெயரைக் கூறி மதபோதனை என்றப் பெயரில் வீண் சண்டைகளை விளைவிப்பதாய் கூறினார்.
எனோ மனம் அதையும் இதையும் ஒப்பிட்டு பார்க்கிறது.எதற்கும் ஒரு முறை அவனை அழைத்து விசாரிக்கலாம்.அவன் யார் என்னவென்பதை பற்றிய செய்திகளை சேகரித்து வரச் சொல்.விசாரிப்போம்”
“அப்படியே ஆகட்டும் உசூர் நாளை சூரியன் உதிக்கும் வேளையில் தேவையான விவரங்களோடு வருகிறேன்.”
அங்கிருந்து சென்றவன் தனதறைக்குச் செல்லும் முன் சிவகங்காவதியின் இடத்தை தற்செயலாய் பார்ப்பதற்காக திரும்பினான்.அவனைப் போலவே அவளும் அவன் மேலிருந்து விழியகற்றாமல் பார்த்திருந்தாள்.
கால்கள் அதுவாய் அவள்புறம் நகர வெளியிலிருந்த தோட்டத்திற்கு வருமாறு கையசைத்தான்.
“எப்படியிருக்கிறாய் கங்கா?”
“இப்போது பூரண நலம்பெற்றுவிட்டேன்.தங்களின் இன்றைய நாள் எவ்வாறு கழிந்தது.”
“உண்மையை கூறினால் மிகுந்த குழப்பங்களுடனேயே முடிந்திருக்கிறது “,என்றவன் நடந்த அனைத்தையும் கூறினான்.
“இதில் என் பிழை எங்கு என்று நிச்சயம் தெரியவில்லை.வெகு நேரமாய் இந்த எண்ணம் தான் என்னை குழப்பிக் கொண்டிருக்கிறது.
“தாங்கள் தவறாக எண்ணவில்லை என்றால் எனக்குத் தோன்றுவதை நான் கூறலாமா?”
“நிச்சயம் கூறலாம் கங்கா சொல் நீ இதுபற்றி என்ன நினைக்கிறாய்?”
“தாங்கள் மனதளவில் மதங்களுக்கிடையே பேதம் பார்க்கவில்லை குடிமக்களிடமும் அப்படி நடந்துகொள்ள நினைத்ததில்லை.ஆனால் உங்களால் குடிமக்களை தினமும் சந்திக்க இயலாது அல்லவா?”
“உண்மைதான்.அவர்களுக்கு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் அரச பிரதிநிதிகளான நம் அமைச்சர்களே”
“ம்ம் அப்படியென்றால் அரசவையில் தான் பேதம் இருக்கிறது என்பது என் கருத்து”,என்று அவள் முடித்தபோது நஸீமின் முகத்தில் மெச்சுதலாய் ஒரு உணர்வு.
“எப்போதும் உனக்கு நிகர் நீயே கங்கா!!நொடிப் பொழுதில் என் கலக்கத்தைப் போக்கி விட்டாய்.என் பிழை இப்போது நன்றாகப் புரிகிறது.கூடிய விரைவில் அதை சரி செய்கிறேன்.”,என்றவன் மனநிறைவோடு தன்னவளை தோள் சாய்த்துக் கொண்டான்.
தொடரும்...