தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய்
மூவரையும் இறக்கி நடத்தி அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்து கால்களையும், கைகளையும் நாற்காலியுடன் சேர்த்து வைத்து கட்டியபின் அவர்களின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது....
திடீரென்று வந்த வெளிச்சத்தால் கண்கள் கூச இரண்டு நிமிடம் தடுமாரியவர்கள் பின் தங்களை கடத்தி வந்தவர்கள் யார் என்று பார்த்தார்கள்....
அவர்கள் முன்னே முகம் முழுக்க தாடியுடன் மூன்று இளைஞர்கள் நின்றிருந்தார்கள்....
அந்த இடத்தை சுற்றி பார்க்க அது ஒரே ஒரு ஜன்னல் மட்டும் கொண்ட அறைபோல இருந்தது.... அவர்கள் அமர்திருந்த நாற்காலி தவிர வேறு எந்த பொருட்களும் அங்கு இல்லை.... அந்த ஜன்னலும் சாற்றி இருந்ததால் வேறு எதையும் அவர்களால் கணிக்க முடியவில்லை... அது வெறும் அறையா இல்லை வீடா என்பது கூட தெரியவில்லை....
“டேய் யாருடா நீங்கள்லாம்... எதுக்குடா எங்களை கடத்திட்டு வந்திருக்கீங்க....”
“மாப்பு கேட்ட கேள்வியே கேப்பியா... பதில் சொல்லணும்ன்னா மொதல்லையே சொல்லி இருப்போம் இல்லை... அப்பறம் மாமியார் வீடு எப்படி இருக்கு.... வசதிலாம் போதுமா.... வேற எதாச்சும் வேணுமா.... கூச்சப்படாம கேளு மாப்பு....”
“இங்க பாருங்கடா எங்களை கடத்தி வந்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க... இந்த நேரத்துல நாங்க ஹாஸ்பிடல்ல இல்லைன்னு அங்க இருக்கறவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்... ஸோ எங்களைத் தேட ஆரம்பிச்சு இருப்பாங்க... இன்னைக்குள்ள நீங்க மாட்டலைன்னா பாருங்க.... எங்க ஆளுங்க கொடுக்கற ட்ரீட்மெண்ட்ல ஏண்டா இவங்களை கடத்தினோம்ன்னு அலறப் போறீங்க....”
“டேய் பாருடா... மாப்பி டாக்டர் அப்படிங்கறத நிரூபிக்கறாரு... அவங்க ஆளுங்க நமக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பாங்களாம்...”, முதலாமவன் இரண்டாமவனிடம் கையைத் தட்டி சிரித்தான்....
“ட்ரீட்மெண்ட் எப்படி மாப்பு கொடுப்பாங்க... எங்க கிட்னியை சட்னிக்கு மெயின் டிஷ்ஷா எடுத்தா... இல்லை நல்லா இருக்கற எங்களை உடம்பு சரியில்லாம இறந்துட்டோம்ன்னு சொல்லி எங்க உடம்புலேர்ந்து எல்லா உறுப்புகளையும் கழட்டி எடுத்தா....”
கடத்தி வந்தவன் பேசப்பேச அங்கிருந்த மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டார்கள்....
“நீங்க என்ன சொல்றீங்கன்னே எங்களுக்கு புரியலை.... ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இந்த கடத்தலை பண்ணி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... நீங்க சொல்ற விஷயத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை....”