தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 13 - மது

கடல் தேன்மொழியை பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் என்று தாத்தா நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார் தான். எனினும் அல்டாப்ரா அடோல் பகுதிகளில் சூறாவளிக் காற்றும் கடல் கொந்தளிப்பும் அதிகம் காணப்பட்டதால் மீட்புக் குழுவினர் கடலுக்குள் சென்று தேன்மொழியை தேட முடியாமல் போனது.
“நாங்க அவ்வளவு தூரம் போயிருக்க கூடாது” ஆதி நிலைகுலைந்து போனான்.
அவன் தண்ணீர் பருகக் கூட மறுத்துக் கொண்டு பட்டினியாகக் கிடந்தான்.
“அக்கா எங்கேனும் கரையில் ஒதுங்கி இருப்பாளா. ஏதேனும் சாப்பிட்டு இருப்பாளா” புலம்பிக் கொண்டே இருந்தவனை அதட்டி மிரட்டி உண்ணச் செய்தனர் அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களும் தாத்தாவும்.
“நீ பட்டினி கிடந்தால் தேன்மொழி என்னைத் தான் கோபித்துக் கொள்வாள். அதனால் சிறிதேனும் உணவு அருந்திவிடு ஆதி. விடியலில் கடலின் சீற்றம் சற்று அடங்கி விட்டால் நீ தான் கடலில் படகை செலுத்த வேண்டும்” தாத்தா அவனிடம் எடுத்துக் கூறீனார்.
நடுக்கடலில் விபத்துக்கு உள்ளாகும் விமானங்கள், கப்பல்களில் இருந்து தப்பித்து மீள்பவர்கள் ஏதேனும் ஆளில்லா தீவில் வருடக் கணக்கில் வசித்து வந்த கதைகளை எல்லாம் தேன்மொழி சொல்ல கேட்டிருக்கிறான் ஆதி.
“அவங்க உயிரோடு இருக்காங்களா இல்லையான்னு யாருக்குமே தெரிய வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் நம் இருப்பை உலகத்திற்கு தெரிவிக்க முயற்சி செய்துட்டே இருக்கணும்” தேன்மொழி சொன்னது ஆதியின் நினைவில் பசுமையாக இருந்தது.
ஆராய்ச்சி கூடத்திலிருந்து மாஹே தீவிற்கு தகவல் அளித்து விட்ட போதிலும் வானிலை காரணமாக அங்கே படகின் மூலமோ, வான் வழியோ மீட்புக் குழுவினர் வந்து சேர இயலாத சூழ்நிலை.
“இதே சீதோஷண நிலை நீடித்தால் என்ன செய்வது” என்று ஆராய்ச்சிக் குழுவினர் கேட்க தாத்தாவிற்கு சற்று அச்சம் பிறந்தது.
குடும்பத்தினர் யாருக்குமே இது வரை தகவல் தெரிவிக்கவில்லை.
குடும்பத்தினர் அனைவருமே பாரீஸில் இருந்தனர்.
அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த ‘சிறந்த ஆடை வடிவமைப்பளார்’ போட்டியில் கயல்விழி வானதி இருவரும் கலந்து கொள்ள அவர்களுக்குத் துணையாக அனைவரும் சென்றிருந்தனர்.
ஆரம்ப கட்ட சுற்றுகளில் வெற்றி பெற்று டாப் ஐம்பதில் வந்திருந்தனர்.
“இன்னும் ரெண்டே ரவுண்ட் தான். டாப் டென் டாப் த்ரீ. எல்லோரும் அத்தையோட டிசைன் பத்தி தான் பேசிட்டு இருக்காங்க” வானதி இரு தினங்களுக்கு முன் சொல்லியிருந்தது