தொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ
அன்புள்ள கிபி
உன் கடிதம் கண்டு மகிழ்ச்சி.
உன் கணிப்புபடி சரவணன்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளான் அல்லவா?
ஒரு சின்ன கைஎழுத்தை மட்டுமே வைத்து முடிவுக்கு வர வேண்டாம். ஒருவரின் கைஎழுத்தை அப்படியே அச்சு பிசகாமல் வேறு ஒருவரால் எழுத முடியும்.
ஆதலால் சரவணன் வந்ததும் சட்டென சண்டைக்கு போகாதே. நிதானமாக அவனிடம் பேசு பின்னர் முடிவுக்கு வரவும்.
ஏனெனில் தவறு செய்தவன் வேறு ஒருவனாய் இருந்து பழி இவன் மேல் வரக் கூடாது. இதனால் உண்மையான குற்றவாளி எளிதாக தப்பிவிடுவான். இருப்பினும் சரவணனை சந்தேகப்படாமலும் இருக்க முடியவில்லை.
சரவணனை சந்திக்க செல்கையில் உன் தம்பி அல்லது உனது தோழி உடனோ செல்.
கடந்த சில வாரங்களாக இந்த கடிதத்தால் நீ எத்தனை மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பாய் என்பதை நன்றாக உணரமுடிகிறது.
கிபி உண்மையில் உன் மனோதிடத்துக்கு ஒரு சல்யூட் போட வேண்டும். குழப்பங்கள் சூழ்ந்தாலும் உன் கடிதத்தில் அதிகமாக பிரதிபளிக்கவில்லை. பிரச்சனைகளை நகைச்சுவையான கண்ணோட்டத்தில் அனுகினாய்.
உன் புலம்பல்கள் கூட புன்னகைக்க வைத்தது. அதுவே உன் மிகப் பெரிய பலம். பதட்டமும் கோபமும் மனதை தவறாக வழி நடத்திச் செல்லும். நீ தொடக்கத்தில் பதட்டம் அடைந்தாலும் பின்னர் நிதானித்து தீர்வை நோக்கி நகர்ந்தாய்.
யாரோ ஒரு ரோட் ரோமியோவின் கிறுக்கல் உன்னை இந்த பாடுபடுத்துகிறது. அவன் கூலாக மற்ற பெண்களுக்கு இப்படி கிறுக்கிக் கொண்டிருக்கலாம். ஒரு தவறும் செய்யாத நீயோ பிரச்சனைகளை எதிர்க் கொள்கிறாய்.
“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” அது போலதான் இந்த தருதலைகளும் தானாக தன் தவறை உணர வேண்டும். அது நடக்க்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
பஸ் அல்லது பொது இடங்களில் பெண்களை சீண்டுவது பின்னர் அவளின் தவிப்பை ரசிப்பது.
இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள்? என்ன ஒரு மனம்.?
இவர்கள் பத்து தலை, நான்கு கை, தலையில் கொம்பு, கோர பற்கள், பத்தடி உயரம் இல்லாத நவீன அரக்கர்கள். பெண்களின் துக்கத்தை கண்டு இன்புரும் கயவர்கள்.
எத்தனையோ இடத்தில் இப்படி பல பேர் திட்டி தீர்த்துவிட்டார்கள். ஆனால் ஒரு பலனும் இல்லை.
இனி இளம்தாய்மார்கள் தங்கள் ஆண் மகனை நன்றாக வளர்க்க வேண்டும். உன் அன்னை மற்றும் சகோதரி போல மற்ற பெண்களையும் மதிக்க வேண்டும் என குழந்தையிலிருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக இருக்க முடியும்.
சரவணனை சந்தித்த பின் பதில் எழுதவும். இங்கு அடுத்த வாரம் ஆண்டு விழா நடக்க உள்ளது. அதற்கென பணிகள் உள்ளதால் இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன்.
இப்படிக்கு
கிமு
17/08/2018
கடிதங்கள் இணைக்கும் . . .