தொடர்கதை - காணாய் கண்ணே - 47 - தேவி
அக்பரின் வருகையை ரானாவும், ப்ரித்விராஜ்ஜும் சேர்ந்து அனுப்பிய வீரர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் இருப்பிடத்தை யாரும் அறிய முடியாது என்று நினைத்து இருக்க, அக்பரோ மிகச் சரியாகத் தேடி வந்து இருந்தார்.
சில நொடிகள் திகைத்து நின்றாலும், தங்களால் இயன்ற வரை ராணி கிரண் தேவியைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதத்தில் அமைந்த இந்த சம்பவம் அவர்களை நிலை குலையச் செய்தது.
ராஜபுத்திர வீரர்களை அக்பரின் படைகள் சிறைப் பிடித்து வைத்து இருந்தனர். கிரண் தேவியின் செயலில் திகைத்த அக்பர் எதுவும் கூறாமல் அந்த இடத்தை விட்டுச் சென்று இருக்க, அந்த படைப் பிரிவின் தளபதி அவர்களை அங்கேயே ஒரு பக்கமாகக் கட்டி வைத்து விட்டு அங்கிருந்து அக்பரின் பின் தன் படைகளோடு செல்ல ஆரம்பித்தான்.
அக்னிக் கொழுந்து விட்டு எரியும் இடத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த ஒவ்வொரு வீரர்களின் கண்களிலும் கண்ணீரும், கோபமும் இருந்தது. அவர்களின் இயலாமையை எண்ணிக் கண்ணீர் விட்டனர்.
நேரம் செல்லச் செல்ல எப்படி இந்தத் தகவலை ராணாவிற்குச் சொல்வது எனத் திகைத்தனர்.
அங்கே ராணாவோ போர்க் களத்தில் இருந்து மற்றவரின் வேண்டுதலுக்கு இணங்கி பின் வாங்கி இருந்தாலும், அவரின் உபதளபதிகள் யாரும் பின் வாங்கமால் போரிட்டுக் கொண்டு இருப்பதை எண்ணி வேதனைக் கொண்டு இருந்தார்.
காயம் பட்டப் புரவி சேத்தக்கால் சில நாழிகைக்கு மேல் நடக்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தது. ராணா காட்டில் இருந்த மருத்துவ மூலிகைகளை வைத்துக் காயத்திற்கு வைத்தியம் பார்த்தும், போரில் அதன் சாதனையும், அதனால் பட்டக் காயங்களும் அதன் இயக்கத்தை நிறுத்தியது.
ராணா கண் கலங்கியபடி அதன் அருகில் அமர்ந்து , தான் முதன் முதலில் சேட்டக் மேல் ஏறிய நிகழ்வை எண்ணிப் பார்த்தார். தன் வாழ்நாளில் முக்கியமான கட்டங்களில் எல்லாம் தன்னோடு கூடவே தன் நிழல் போல் வாழ்ந்த அதன் காலம் தன் முன்னே முடிவதைக் கண்டு வருந்தினார்.
சற்று நேரம் செல்ல, புரவிகளின் ஓசைக் கேட்கவும் நிமிர்ந்துப் பார்த்தார். அவரின் உபதளபதிகள் மற்றும் படைகளின் ஒரு பகுதி அனைவரும் அங்கே கூடி இருந்தனர்.
சேட்டக்கின் முடிவைக் கண்டு அனைத்து வீரர்களும் வருந்தினர். அப்போது உபதளபதியிடம் ராணா பேச ஆரம்பித்தார்.