தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவை
சென்ற பகுதியில், பரமசிவன் பூமிக்கு விஜயம் செய்துள்ளதை பார்த்தோம். இப் பகுதியில் பார்வதியின் விஜயத்தை பார்ப்போம்
நெடுநேரம் இளைஞனா, அல்லது முதியவனா என ஆலோசித்துவிட்டு, இறுதியில் நடுத்தர வயது ஆணாக, பார்வதி, பூமியில் உருவம் தாங்கி, சென்னை அடையாறில் உள்ள அமைச்சர் நாத்திகனின் பங்களாவுக்குள் நுழைந்தாள்.
செக்யூரிடி, கேட் அருகே, நிறுத்தி விசாரித்தான்.
" எங்கே வந்தீங்க? நீங்க யாரு? யாரைப் பார்க்கணும்? உங்க பேரென்ன?"
" என் பேரு இங்கர்சால்! அமைச்சரை பார்க்கணும்........"
" என்ன விஷயமா?"
" எங்க ஊரிலே புகுந்திருக்கிற சில பயங்கரவாதிகளைப் பற்றி அவரிடம் ரகசியமா சில தகவல் சொல்லணும், ரொம்ப அவசரம்!"
" சரி, உள்ளே போய் முதல்லே அமைச்சரோட பி.ஏ.வை பாருங்க! இந்த ரிஜிஸ்டரிலே உங்க பேரு, விலாசம், தொடர்பு எண், எழுதி கையெழுத்து போட்டுட்டு போங்க!"
ரிஜிஸ்டரில், இங்கர்சால், 38, பெரியார் சாலை, வீராநல்லூர், தென் ஆற்காடு மாவட்டம், தொடர்பு எண் 990xxxxxxx என எழுதி இங்கர்சால்னு கையெழுத்திட்டுவிட்டு, உள்ளே சென்று பி.ஏ.வை பார்த்தான்.
அவரிடமும் வந்த காரணத்தை சொல்லி, அமைச்சரை அவசரமாக பார்க்கவேண்டும் என்றான்.
பி.ஏ. உள்ளே சென்று அமைச்சரிடம் தெரிவித்ததும், அவரும் "சரி, உள்ளே அனுப்புங்க!" என்றார்.
இங்கர்சால் உள்ளே சென்று அமைச்சருக்கு வணக்கம் சொன்னதும், அவர் விசாரித்தார்.
" ஐயா! நான் சொல்லப் போகிற விஷயம், நம்ம ரெண்டு பேரைத் தவிர, வேற யாருக்கும் தெரியக்கூடாது! பரம ரகசியம்! அதனால், அறையின் கதவை தாளிட்டு விடுகிறேன், சரியா?"
அமைச்சர் தலையசைத்ததும், கதவை தாளிட்டுவிட்டு வந்து, அமைச்சரின் காதருகே சென்று " ஐயா! உங்க பி.ஏ.வே, உங்களுக்கு விரோதமா, முதல் அமைச்சரிடம் போட்டுத் தருகிறார், உஷாரா இருங்க!"
" நீ யாரு? உனக்கெப்படி தெரியும்?"
" அதை போகப் போக தெரிஞ்சிப்பீங்க, இப்ப, நான் சொல்கிற விஷயத்தை வைத்து என்னை நம்புவதா இல்லையான்னு முடிவு பண்ணுங்க!
நேற்று இரவு நடந்த ஒரு விஷயம், உங்களுக்கும் உங்க பி.ஏ.வுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு சமாசாரம், அதற்குள்ளே முதல் அமைச்சருக்கு போயிடுத்து!"