தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி
இது அவளோடு வாழ்ந்த இல்லம்! அவள் முழுதுமாய் எனதான இல்லம்! உள்ளே நுழைந்த மாத்திரமே தன் இளமைப்பருவம் திரும்பியதாய் ஓர் உணர்வு சூர்ய நாராயணனுக்குள்! தமையனாரின் பாவனைகள் அவர் தன் கடந்த காலத்தை நினைவுப்படுத்தி கொண்டு இருக்கிறார் என்று கூறாமல் கூறியது இளவலுக்கு! அச்சமயம் அவருக்கு தேவையெல்லாம் தனிமை மட்டுமே என்பதனை அவர் உணராமல் இல்லை. அவர் வேண்டி வேண்டாமல் நின்ற தனிமையை நல்கிவிட்டு முன்னேறி சென்றார் நவீன் குமார்! அவர் பாதங்கள் தன்னிச்சையாய் அவர் தாய் தந்தை புகைப்படத்தின் அருகே சென்றது.
"எனக்கு இவங்க தான் கடவுள்! இவங்க சாட்சியா சொல்றேன், நீ தான் என்னுடைய மனைவி!" அவ்வார்த்தைகள் மறக்கவில்லை. கண்ணீரை துடைத்தப்படி நிமிர்ந்தவர் எதிர், அவர் தாய் தந்தை புகைப்படத்தின் அருகே கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்தார் தர்மா. ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது சூர்ய நாராயணனுக்கு! அனைத்தும் மாயை என்பதனை உணர்ந்தப்போதும் நிகழ்வுகள் யாவும் தத்ரூபமாய் போக, திடுக்கிட்டுப் போனார் அவர். இமைக்காமல் அவளையே நோக்கிக் கொண்டிருந்தவர் கவனம் கையில் மாங்கல்யத்துடன் வந்த இளம்வயது சூர்ய நாராரணனிடம் சென்றது. அவள் எதிர்நோக்கா வண்ணம் அவள் கழுத்தில் அவர் மாங்கல்ய முடிகளைப் போட்ட விதம்! அதைக் கண்டவள் செய்வதறியாது திகைத்து அவர் மார்பில் கண்ணீருடன் சாய்ந்தது! ஆம்...! அவர் எதையும் மறவவில்லை. அனைத்தும் மீண்டும் ஒருமுறை அவர் கண் எதிரே காவியமாய் நடந்தேறியது. தன்னையே அறியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார் அவர். நடந்த நிகழ்வுகளில் வெற்றிப் பெற்றது தான் யார்? சிலையாகி நின்றிருந்தவரின் தோள்களில் யாரோ கரம் பதித்த உணர்வு மேலோங்க மெல்லத் திரும்பி பார்த்தார் நாராயணன்.
"வாங்க! இத்தனை வருடம் கழித்து இப்போ தான் வர தோணுச்சா?" புன்சிரிப்புடன் எதிர் நின்றவள் கண்ட மாத்திரம் ஆடிப்போய் விலகினார் அவர். இ...இவள்...இவள்...இவள் தர்மாவா?
"என்னங்க?என்னைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? நியாயப்படி நான் தான் உங்க மேலே கோபப்படணும்!" என்றதும் உடலெல்லாம் நடுங்கிப்போய் கண்ணீர் திரண்டது அவருக்கு! கண்களில் இருந்து விழுந்த கண்ணீரை ஆறுதலாய் களைந்தா் அவர்.
"எனக்கு உங்க மேலே எந்தக் கோபமும் இல்லை. ஒருவழியா நம்ம வாழ்ந்த இடத்துக்கு நீங்க மறுபடியும் வந்ததே போதும்!" என்றார் புன்னகையோடு!
"தர்மா..?" அவரால் ஏதும் பேச இயலவில்லை. ஏதுமே பேச இயலவில்லை. தவமிருக்கும் யோகியானவன் தன் இறைவனின் தரிசனம் பெற்ற நிலையிலே அவரும் இருந்தார். வார்த்தைகளற்று, உணர்வுகளற்று, செயல்களற்று!