என் வாசஸ்தலம் உன் இதயமே என்ற வார்த்தை எத்தனைப் பேருக்குக் கிட்டிவிடும்! தன் உறுத்துணையின் இதயத்தினை விடவா ஒருவற்கு ஆனந்தம் பொங்கும், ஆடம்பரமான இடம் கிட்டிவிடும்?கண்ணீர் ததும்பிய கண்களோடு தன் கணவரிடத்தில் கரம் குவித்தார் தர்மா.
"மனசு உடைந்துப் போகாதீங்க! நான் உங்களைவிட்டு எங்கேயும் போகலை!" என்ற இறுதி வார்த்தை உதிர்த்து காற்றோடு கலைந்துப் போனார் தர்மா.கண்கள் மூடி சோபாவில் அமர்ந்திருந்த தமையனின் கண்கள் கண்ணீர் சிந்துவதைக் கண்டவர் தமையனை உலுக்கினார்.
"அண்ணா...அண்ணா...என்னாச்சுண்ணா?" இளவலின் உலுக்கலில்்கண்விழித்தவர் கண்கள் திறவியப்போது அனைத்தும் கனவென்ற உண்மைநிலை புரிந்தது.
"என்னண்ணா?" சில நொடிகள் பதிலேதும் கூறாமல் மௌனம் காத்தவர்,
"கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாடா!" என்ற ஆணையைப் பிறப்பிக்க உடனடியாய் எழுந்துச் சென்றார் அவர். இளவல் நகர்ந்ததும் தன் இதயத்தில் கரம் பொதித்தார் சூர்ய நாராயணன். அச்சமயம் அவர் இதயத்தினை வசிப்பிடமாய் கொண்ட யாரோ ஒருவர் அவர் இதயத்துடிப்பாய் உருமாறி, துடித்துக் கொண்டிருப்பதனை அவரால் நன்குணர முடிந்தது.
தந்தையின் இறுதி வார்த்தைகள் ஏனோ அசோக்கை சுக்கலாய் உடைத்துவிட்டிருந்தன. சிறுப்பிள்ளையாய் அன்றைய நாள் பணி முடிந்து இல்லம் திரும்பி இருந்தவன் உணவினைக் கூட ஏலாமல் அமர்ந்திருந்தவனிடம் என்னவென்று சொல்வது என்ற குழப்பம் சிவன்யாவிற்கு! அவன் அருகில் அவள் வந்து அமர்ந்ததுமே கண்களைத் துடைத்துக் கொண்டான் அசோக்.
"மதியம் நீங்க ஏன் சாப்பிடலை? நான் கொடுத்து அனுப்பினதைத் திரும்ப எடுத்துட்டு வந்திருக்கீங்க?"
"பசிக்கலைம்மா..! கொஞ்சம் வேலை வேற இருந்ததும்மா அதான்!" அவன் பொய்யுரைக்கிறான் என்பதுத் தெளிவாய் தெரிந்தது. அவளறிவாள் அவன் பொய் உரைக்கையில் அவள் விழிகளை அவன் நோக்கியதில்லை. மனம் கொண்டவரின் விழி நோக்கி எவரால் பொய்யுரைக்க இயலும்?
"என்னைப் பாருங்க..." அவ்வார்த்தைகளுக்கு மறுப்பினை மட்டுமே அவனால் நல்க முடிந்தது. அவனது முகத்தினை தன்பக்கமாய் திருப்பியவள், அவனது விழிகளை உற்று நோக்கினாள். அவ்விழிகளை அவனால் நோக்கவே இயலவில்லை, கட்டுப்படுத்தப்பட்ட கண்ணீர் கரைப்புரண்ட வெள்ளமாய் வெளியாவதை அவனால் உணர முடிந்தது. ஏதும் பேசாமல் அவனைத் தன்னுடன் சாய்த்துக் கொண்டாள் சிவன்யா. அச்செய்கையினை அவன் சற்றும் எதிர்நோக்கவில்லை. ஆயினும், அச்சமயம் அவனுக்குத் தேவையானது எல்லாம் ஆறுதல்கள் மட்டுமே!
"அழுதுவிடுங்க! மனசுக்குள்ளே எந்தக் கவலையும் இருக்கக் கூடாது! நான் தான் இருக்கேன்ல,