தானே இருக்கு? உங்க வாழ்க்கையில எல்லாமே அவங்க முடிவெடுக்கிறது தான் சொல்லுவீங்க! ஏன் நான் உங்க வாழ்க்கையில வந்ததே அவங்க விருப்பம்னு சொன்னீங்க! அதையே அப்பா விஷயத்துல அவங்கப் பண்ணிருந்தா?" உறைந்துப் போனவனாய் அவளை நோக்கினான் அசோக்.
"எந்த ஒரு வேதனையில இருந்தோ, கோபத்துல இருந்தோ ஏன் துரோகமே நமக்கு நடந்திருந்தாலும் அதை செய்தவங்களை மன்னிக்கிறது மூலமா நாம அந்த வேதனையில இருந்து விடுப்படலாம்! உங்க மனசாட்சி..அது என்ன சொல்லுதோ அதைக் கேளுங்க..நம்ம அறிவோ, மனமோ இரண்டுமே நம்மை குழப்பத்தான் செய்யும்!" ஏதோ ஒரு ஞானியை போல் அவள் பேசிய வார்த்தைகள் அவன் மனதின் அடியாழம் வரையில் சென்றன.
"இன்னொரு விஷயம்..! பசியோட யோசித்தாலும் தப்பாத்தான் யோசிப்போம்! அதனால, சாப்பிட்டு வந்து சாவகாசமா யோசிங்க!" எவ்வளவு இன்னலான சூழலிலும் அவன் முகத்தில் எவ்வாறுப் புன்னகையை தறுவிப்பது என்பதனை அவள் அறியாதவள் இல்லை. அவளது அந்தக் குறும்புகள் அச்சமயமும் அவளுக்குக் கைக் கொடுத்தன. சட்டென அவ்வார்த்தைகளைக் கேட்டவனது இதழ் மலர்ந்தது சூரிய ஔிக்கண்ட செந்தாமரையாய்! எத்தனை ஆண்டுகளாய் அவன் வேதனை உற்றிருந்தானோ, அத்தனைக்குமாய் அவளை அளித்து ஒட்டுமொத்த பலனையும் நல்கிவிட்டான் அந்தப் பரம்பொருள்!
"எ...என்னங்க சாப்பிட வாங்க!" என்ற மனைவியின் முகத்தினைக் கூட ஏறெடுத்து நோக்கவில்லை உதயக்குமார்.
"எனக்கா பசித்தால் சாப்பிட தெரியும்!" என்று மீண்டும் புத்தகத்தில் மூழ்கிவிட்டார் அவர். இத்தனை ஆண்டுகளில் முகத்தில் அடித்தாற் போல அவர் பேசுவது அவரை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. அவ்வீட்டில் மீனாட்சியின் வாக்கே மேலோங்கி இருந்தது அந்த ஒரு நாள் வராத வரையில்!
அன்று...!
தன் பிடிவாதத்தின் உச்சத்தில் கர்வத்துடன் அமர்ந்திருந்தவர் மற்றும் இவள் மனமிறங்க மாட்டாளா என்று தவமிருந்தவர் இருவரின் கவனமும் கலைக்கப்பட்டது அவர் குரலில்!!
"உள்ளே வரலாமா?" சூர்ய நாராயணனின் திடீர் விஜயம் இருவரையும் குழப்பியது! உதயக்குமாருக்கு அவரைக் குறித்த சில குறிப்புகள் தெரியும்! ஆனால் அவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்ற குழப்பம் அவரையுமே பீடிக்காமல் இல்லை.
"வாங்க சார்! நீங்க..மிஸ்டர். சூர்ய நாராயணன் தானே!" தன்னைப் பற்றி அவருக்குத் தெரிந்திருந்ததால் தன் அறிமுகம் பற்றிய கவலையைத் துறந்தார் அவர்.