"உட்காருங்க!" கணவனுக்கு அறிந்தவர் என்பதாய் உபசரிக்க சமையல் அறைக்குள் சென்றார் மீனாட்சி. எனினும் ஒரு செவியினை கூடத்தில் அவர் வைக்காமல் இல்லை. இருவரின் றஉரையாடலும் தெளிவாய் கேட்டது அவருக்கு!
"நான் உங்க மகளை என் மகனுக்காக பொண்ணுக் கேட்டு வந்தேன்!" என்றதும் தூக்கிவாரிப் போட்டது இருவருக்கும்! இது என்ன சங்கடமான சூழல்? இறைவன் எப்போதும் போல விளையாட்டுக் காட்டுகிறான்.
"ஆனா...எங்க...மகளுக்கு வேற ஒரு இடத்துல பேசி முடித்துவிட்டோம்! கொஞ்ச நாளில் கல்யாணம் ஆகப்போகுது!" என்ற வார்த்தைகள் மீனாட்சியின் உட்சபட்ச கோபத்தினைத் தூண்டியது. கணவனை முறைத்தப்படி அவரிடத்தில் தேநீரை கொண்டு வந்து நீட்டினார் மீனாட்சி. அவ்வாக்கியத்தை கேட்டப்போது தான் தான் உண்மையில் யார் என்பதை சிவன்யா இங்கு கூறவே இல்லை என்பதனை உணர்ந்துக் கொண்டார் சூர்ய நாராயணன்.
"சிவன்யா அப்போ எதையும் சொல்லலையா?" என்றார் புரியாமல்.!
"இல்லையே..! ஏங்க?" தந்தையின் மனம் தவித்துப்போனது.
"நான்தான் அசோக் குமாருடைய அப்பா!" என்றதும் உறைந்துப் போனார் உதயக்குமார். சமையலறையில் பொங்கிய பாலையும் கவனிக்க இயலாத அளவுக்கு அதிர்ச்சிக்கு உள்ளானார் மீனாட்சி!
"சில சூழ்நிலைகளால நானும், மனைவியும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்! விதி வசத்தால பிரிந்து வாழ வேண்டிய சூழலும் உருவானது..! அசோக் என்னுடைய பையன்! என் மனைவி இருந்திருந்தால் சம்பிரதாயப்படி எல்லாம் பண்ணிருப்பாங்க! அவங்க இல்லை...அதான் எல்லாம் இவ்வளவு தாமதமாகிடுச்சு! அவங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறேன்.! ஊர், உலகம் அவங்களை தப்பா பேச கூடாது இல்லையா! அசோக் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்! சிவன்யா இல்லாமல் அவனால இருக்க முடியாது..! நீங்க சீக்கிரம் ஒரு நல்ல முடிவா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!"
என்றார் சிறுப் புன்னகையுடன்!
"நானே தம்பிக்கிட்ட இதைப் பற்றி பேசணும்னு முடிவுப் பண்ணிருந்தேன். நான் என் மக விருப்பத்துல குறுக்கே நின்றதில்லை. சீக்கிரம் அவங்களுக்கு நிச்சயம் முடித்து, கல்யாணம் பண்ணாத்தான் எனக்கும் நிம்மதியாய் இருக்கும்!" தன் முடிவினை கலந்து ஆலோசிக்காமல் அவர் நிறைவாக பேசியத் தோரணை மீனாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.