" என்ன சமாசாரம்?"
" பி.டபிள்யூ. டி. காண்ட்ராக்டர் முத்தழகன் தங்களுக்கு தந்த லஞ்சம் பத்து லட்ச ரூபாய் பற்றி, நேற்று நள்ளிரவே முதல் அமைச்சருக்கு தகவல் கிடைத்துவிட்டது..... எப்படி? தங்கள் பி.ஏ.வைத் தவிர, வேறு யார் சொல்லியிருக்க முடியும்?"
" ஏன்? அந்த கண்டிராக்டரே சொல்லியிருக்கலாமே!"
" அதற்கு சந்தர்ப்பமே இல்லை, அவர் இங்கிருந்து வீடு திரும்பும்போதே, அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து, சுயநினைவின்றி, மாருதி க்ளினிக்கில் படுத்திருக்கிறார்...."
" இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"
" அதைமட்டும் கேட்காதீர்கள்! நான், உங்கள் ஊர்க்காரன் மட்டுமல்ல, இருவரும் ஒரே சாதி! உங்கள் பி.ஏ.வும் முதல் அமைச்சரும் ஒரே ஊர்க்காரங்க, ஒரே சாதி! அவங்க ஒருவரை ஒருவர் நம்பறாங்க, நீங்கதான்......"
" சரி, கோவிச்சுக்காதே! முதல் அமைச்சருக்கு தெரிந்துவிட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?"
" எனது ஆட்கள் அவரைச் சுற்றியும் இருந்து கண்காணித்து எனக்கு தகவல் உடனுக்குடன் தெரிவிக்கிறார்கள்...."
" ஓ! நீ அவ்வளவு பெரிய ஆளா?"
" சரி, நீங்கள் என்னை நம்பவில்லை, பரவாயில்லை, நான் மறுபடியும் நாளை வருகிறேன், அதற்குள் நடப்பதிலிருந்து என்னை நம்புவதா, வேண்டாமா என தெரிந்துவிடும்...வருகிறேன்."
"இந்தா! எனது விசிட்டிங் கார்டு! இதைக் காட்டினால், செக்யூரிடியோ, பி.ஏ.வோ எந்த கேள்வியும் கேட்காமல் உள்ளே அனுமதிப்பார்கள். கட்டாயமா, நாளை வா! உன் உதவி எனக்கு நிறைய தேவைப்படுகிறது........"
சிரித்துக்கொண்டே, இங்கர்சால் வெளியே வந்தான்.
அடுத்து எங்கே போவது? என இங்கர்சால் யோசித்துக்கொண்டிருக்கையில், அவர் தோளில் கைவைத்து, நிறுத்தினார், ஒரு போலீஸ்காரன்.
" எங்கே போய்ட்டு வரே?"
"என்ன மிரட்டறியா? அமைச்சரை பார்த்துட்டு வரேன், இதோ பார்! அவரோட விசிட்டிங் கார்டு!"
" மன்னிச்சிடு அண்ணே! உங்களை நான் மிரட்டுவேனா? எங்க பொழைப்பு அப்படி! எங்க சாதாரண பேச்சே, மிரட்டறா மாதிரி இருக்கும், வீட்டிலே பெண்சாதி, பிள்ளைங்களும் குறை சொல்றாங்க, சரி, அதை விடு! எனக்கு ஒரு உதவி செய்வியா?