(Reading time: 5 - 10 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 06 - ரவை

காந்தி முதியோர் இல்லம் காப்பாளர் அறைக்குள், மூச்சிறைக்க நுழைந்த தர்மனை, காப்பாளர் நாற்காலியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்தினார்.

" என்னை பார்க்கணும்னா, உங்க ரூமிலே இருக்கிற பஸ்ஸரை அழுத்தினால் போதுமே! ஏன் இப்படி ஓடிவரீங்க? வயசான காலத்திலே, ஏதாவது ஒண்ணு ஆயிடுத்துன்னா, ஐயான்னா வருமா, அம்மான்னா வருமா? சொல்லுங்க!"

" ஐயா! அந்தப் பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சுட்டோம்....."

" எந்தப் பொண்ணு? தலையுமில்லாம, காலுமில்லாம, கதை சொல்றாமாதிரி இருக்கே!"

" அதான்யா, எங்க மகன் சகாதேவன், எங்கே போயிருப்பான்னு நேத்திக்கு கேட்டீங்களே, கண்டுபிடிச்சிட்டோம்! அந்தப் பொண்ணு யாருன்னு...."

"ஓ! கமிஷனர் சொன்னாரே, உங்க மகனை, யாரோ ஒரு பொண்ணு வந்து அழைச்சிட்டுப் போனாங்கன்னு, அந்தப் பொண்ணா.....? சொல்லுங்க!"

" பதினெட்டு வருஷம் முன்பு, என் மகன் அந்த ரௌடியிடமிருந்து காப்பாற்றினானே, அந்தப் பொண்ணுதான், அவனை வந்து அழைச்சிட்டுப் போயிருக்கணும், உங்க நண்பர், போலீஸ் கமிஷனர்கிட்ட சொல்லி, விசாரிக்கச் சொல்லுங்க! ப்ளீஸ்!!"

" சொல்றேனேன்னு, வருத்தப்படாதீங்க! பதினெட்டு வருஷம் முன்னாடி நடந்ததை சொல்லி, தேடச் சொன்னா, அதுவும் பெயர், விலாசம் எதுவுமில்லாம, அவர் என்ன செய்வார், சொல்லுங்க!

போதாக்குறைக்கு, இப்ப இந்த கொரோனாவுக்காக ஊரடங்கு சட்டம் அமுலாக்கத்திலே பிசியா இருப்பாரு, அவரை பார்க்கிறதே, கஷ்டம்! ஒருவாரம், பத்துநாள் போகட்டும், பார்ப்போம்!"

தர்மன் தள்ளாடியவாறே, மனமும் சோர்ந்து தன் அறைக்கு திரும்பினார்.

" சொன்னீங்களா? விசாரிக்கிறேன்னு சொன்னாரா?"

" பிரபா! அவரு சொல்றதும், நியாயமாத்தான் படுது, நடந்து பதினெட்டு வருஷம் ஆயிடுத்து, அந்தப் பொண்ணோட பெயர், விலாசம் எதுவுமில்லே, எப்படி தேடமுடியும்? போதாக்குறைக்கு இப்ப ஊரடங்கு சட்டம் வேறே...."

" ஏங்க, நம்ம மாப்பிள்ளை, வத்சலா புருஷன் ரஞ்சித்கூட, போலீஸிலேதானே இருக்கான், அவனை பார்க்கச் சொல்லுங்களேன்!"

"ஏன்டீ! அவருதான் கமிஷனரையே பார்த்துட்டாரு, ரஞ்சித்தைவிட பெரிய பதவி கமிஷனர் பதவி!"

" ஓ! அப்படியா! எதுக்கும் அவர் ரவுண்ட்ஸிலே வரபோது, ரஞ்சித் பெயரை சொல்லிப் பார்ப்போம், ....."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.