செட்டியார் எழுந்து உள்ளே போய்விட்டார்.
தலையை தொங்கப் போட்டுக்கொண்டு, பிரபாவும் நிரஞ்சனும் வெளியே வந்தனர்.
கையில் பணத்துடன் சாம்பு தயாராக இருந்தார். காரும்தான்! பணத்தைப் பெற்றுக்கொண்டு, நிரஞ்சன் சாம்புவை ஏமாற்றத்துடன் ஏறிட்டுப் பார்த்ததும், சாம்பு நிரஞ்சனை தனியே அழைத்துப் போய், நிரஞ்சனின் போன் நம்பரைப் பெற்றுக் கொண்டு, "பத்து கோடியை குறைச்சிக்க சம்மதம்னா, செட்டியாரிடம் மெதுவா பேசிப் பார்க்கிறேன், கடவுள் நம்ம பக்கம் இருந்தா நல்லது நடக்கலாம், ஒரு பத்து நாள் கழிச்சு பேசுவோம், போய்ட்டு வாங்க!"
காரில் ஏறிக்கொண்டு இருவரும் சென்னை திரும்பி வந்ததும், நிரஞ்சன் பிரபாவை ஏறிட்டு நோக்கினார்.
" வருத்தப்படாதீங்க! சாம்பு சொல்றதெல்லாம், கண் துடைப்பு! இந்த டீலை மறந்துடுங்க! வேற யாராவது கேட்டால், நான் அவங்களை அழைத்துவரேன்,....."
" அப்ப, மற்ற ஓனர்கள் அத்தனை பேருக்கும் டீல் கேன்சல் ஆனதை சொல்லி விடலாமா? நமக்குத்தான் அஞ்சு கோடி ரூபாய் நஷ்டம்! எல்லாத்துக்கும் கொடுத்து வைத்திருக்கணும், உனக்கும் ராசியில்லே, எனக்கும் ராசி இல்லே, ......."
பிரபா போனதும், வீட்டில் நுழைந்த நிரஞ்சனை மகன் சேகரும் மனைவி கலாவும் எதிர்கொண்டனர்.
நிரஞ்சனின் வாடிய முகத்தை பார்த்ததுமே, இருவருக்கும் தெரிந்துவிட்டது, போன காரியம் தோல்வி என்று!
" அப்பா! என்னாச்சு? ஏன் வருத்தமாயிருக்கே?"
நிரஞ்சன் மெதுவாக நடந்ததை சொன்னார்.
" சரிப்பா! கவலை விடு! நாம கோடீஸ்வரனாக டயம் வரலே, வரும் கட்டாயம் சீக்கிரமா!"
" எனக்கு இப்பத்தான் நிம்மதியாச்சு....." என்ற கலாவை இருவரும் பார்த்து திகைத்தனர்.
" அந்த புரோக்கருடன் கூட்டு சேர்ந்து பொய்யும் புரட்டும் செய்து கள்ளத்தனமா ஐந்துகோடி ரூபாய் சுருட்டப்பார்த்தீங்க, தெய்வம் உங்களை அந்த தவறிலிருந்து காப்பாற்றி யிருக்கு! பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன்."
கலா சொன்னது சரி தானோ என நிரஞ்சன் யோசித்தார்.
எந்த நேரமும் பிரபா தன்னை மற்ற ஓனர்களிடம் காட்டிக் கொடுத்துவிடுவான் என்ற பயத்தோடு சிறுகச் சிறுக செத்துப்போவதில் இருந்து இறைவன் தன்னை காப்பாற்றிவிட்டானோ! என நிரஞ்சன் நினைத்தான்.
தொடரும்
Next episode will be published on 20th October. This series is updated weekly on Tuesday mornings.