மூவரும் அவளின் நடவடிக்கையின் அர்த்தம் புரியாமல் மிரட்சியுடன் நின்றிருந்தனர்.
சில நிமிடங்களில் அந்த அறைக்கு வந்தவளின் கையில் இரண்டு பைகள் இருந்தது. அதில் ஒன்றை கொண்டு வந்து அந்த டேபிளின் மேல் வைத்தவள் அதை திறந்து அதில் இருந்து அவளின் அம்மா நகைகள், மற்றும் சில பேப்பர்களை எடுத்து வைத்தாள்.
"இதெல்லாம் அம்மா எனக்காக விட்டுட்டு போனது. இதெல்லாம் சேர்த்தா ஒரு ரெண்டு மூணு கோடி வருமாப்பா??" தமிழ்செல்வி கேட்க,
"அதுக்கு மேலே வரும்மா" இதையும் சேர்த்து கொடுக்க சொல்கிறாள் போல என்று எண்ணியவர் ஒரு வகையில் சற்றே நிம்மதியுடன் பதில் சொல்ல, அந்த இருபத்தி ஐந்து லட்சம் பணம், இந்த நகைகள் மற்றும் பேப்பர்களை எடுத்து அந்த பையில் வைத்தவள் அதை ராமநாதனிடம் நீட்டினாள். அவள் அதை அவரிடம் நீட்டவும் அவர் கேள்வியாக அவளை நோக்க, "என்னப்பா பாக்கறீங்க? ஒரு சாதாரண குடும்ப பையன் செத்தா இருபத்தியஞ்சு லட்சம் போதும். அதே ஒரு கோடிஸ்வரருடைய பொண்ணு செத்தா குறைஞ்சது ஒரு மூணு நாலு கோடியாவது தரனும்ல. அதான். இதுல இருக்கறது எல்லாம் உங்களுக்கு தான். எடுத்துக்கோங்க. உங்க பொண்ணு செத்து போய்ட்டா.அதுக்கு நஷ்ட ஈடா இதை வெச்சுக்கோங்க" தமிழ்செல்வியின் வார்த்தைகளில் ஆடிப்போனார் ராமநாதன்.
"அம்மாடி....ஐயோ...நான் பண்ணுனது தப்பு தான் ஆனா அதுக்காக இப்படி ஒரு வார்த்தையை சொல்லிட்டியேம்மா" அவர் தலையில் அடித்து கொண்டு அழ "ஏன்பா உங்க பொண்ணு செத்துட்டான்னு வாய்வார்த்தையா சொன்னதுக்கே உங்களுக்கு இவ்ளோ வலிக்குதே...அவங்க பையன் செத்து போய்ட்டான்பா. அதுவும் நீங்க கொன்னுட்டீங்க....அவங்களுக்கு எவ்ளோ வலிக்கும்??? என் பிரென்ட் என் மடியில செத்ததை விட அவன் சாக நீங்க காரணம்னு நினைக்கும் போது என் உடம்பெல்லாம் எரியுதுப்பா. அதை கேட்ட அந்த நிமிஷமே நான் செத்துட்டேன் பா. அவங்களுக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடு இந்த பணம் இல்லை. அவங்களுக்கான நஷ்ட ஈடு நான் தான்...இனி அவங்க தான் என் குடும்பம். உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது நான் தர்மப்படி உங்களுக்கு கொடுக்கற ஆயுள் தண்டனை" என்றவள் அங்கிருந்த மற்றும் ஒரு பேகை கையில் எடுத்தாள்.
"அம்மாடி...அம்மாடி அப்படி சொல்லாதடா....போகாத தமிழ்..." ராமநாதன் பின்னாலேயே செல்ல,ஒரு நிமிடம் நின்றவள் "என்னை தேடி யாரவது வந்தா அந்த நிமிஷம் நான் என் உயிரை விட்ருவேன். எங்கயாவது உங்க பொண்ணு உயிரோட இருக்கட்டும்னு நெனைச்சா இதுக்கு மேல என் பின்னாடி வராதீங்க" என்றவள் அந்த வீட்டை விட்டு வெளியேற அந்த நாளோடு ராமநாதனின் வாழ்க்கை இருள் சூழ்ந்த மயான பூமியாகி போனது.