“ஷியாமளா பணத்தை பத்தி கேட்டியா....”, காமாட்சி பாட்டி கேட்க, ஷியாமளாவும் மருத்துவர் கூறியதை சொன்னார்....
“முப்பதாயிரம் வரை தேவைப்படும்ன்னு நினைக்கறேன்ம்மா.... ஆபரேஷன் முடிஞ்சாலும் அவரால இன்னும் குறைஞ்சது ஆறு மாசத்துலேர்ந்து ஒரு வருஷம் வரைக்கும் வேலைக்கு போக முடியாது... அவர் நன்னா நடக்க ஆரம்பிக்கவே குறைஞ்சது ஆறுலேர்ந்து எட்டு மாசம் ஆகும்ன்னு சொல்றா.... கால், கைல உடைஞ்ச எலும்பு சேர அத்தனை நாள் ஆகுமாம்... சேர்ந்த பிறகு அதுக்கு தனியா பயிற்சி எல்லாம் கொடுப்பாளாம்.... இதுல முதுகுல பட்ட அடி ரொம்ப சீரியஸ்ஸா இருக்கக்கூடாதுன்னு சொல்றா... இல்லைனா எழுந்து நடக்கவே கஷ்டமா போய்டும்ன்னு பயமுறுத்தறா.... அவரோட முழு உடல் நலம் பத்தியும் அந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வந்து பார்த்த பிறகுதான் தெரியும்.... ஆனா கண்டிப்பா ஆபரேஷன் பண்ணிதான் ஆகணும்ன்னு சொல்லிட்டா....”, ஷியாமளா சொல்ல, அனைவருமே பெரிய அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் சரியாக வேண்டுமே என்று கவலை கொண்டனர்....
“பணத்துக்கு என்ன ஷியாமளா பண்றது.... என்னோட வளையலைத் தரேன்... அதை வித்துடு....”
“பத்தாயிரம் வரை கைல இருக்கும்மா... மீதிக்குதான் பார்க்கணும்... உங்களண்ட இருக்கறதே அது ஒண்ணுதான்... அதையும் விக்க சொல்றேளே.... கஷ்டமா இருக்கும்மா....”, ஷியாமளா கண்ணீருடன் கூறினார்...
“நான் எங்கடி அதையெல்லாம் போட்டுக்கறேன்.... மைத்திக்காகத்தான் எடுத்து வச்சேன்..... அதனால அதை உபயோகப்படுத்திக்கோ....”
“ஏண்டி ஷியாமளா நாங்க அண்ணாக்கள் மூணு பேர் மலை மாதிரி இருக்கோம்... நீ ஏன் இப்படி கவலைப்பட்டுண்டு இருக்க.... எதையும் விக்க வேண்டாம்.... நாங்க பணத்தை தேத்த பாக்கறோம்....”, அவளின் பெரியண்ணா வேணு சொல்ல சுப்பிரமணியம் தாத்தா இடைபுகுந்தார்...
“சாமளா கண்ணைத் துடை.... நீ இத்தனை வருஷமா எனக்கு கொடுத்துண்டு வந்த வாடகை தனியாத்தான் போட்டு வச்சிருக்கேன்.... அது ஒரு பத்தாயிரம் கிட்ட இருக்கு.... மேல்கொண்டு இருக்கற பணத்தை நாங்க தர்றோம்... எதுக்கும் கவலைப்படாம இரு....”, பெரியவர் கூற, பணக் கவலை அகன்று சற்று நிம்மதி பெருமூச்சு விட்டார் ஷியாமளா....
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அனந்துவின் விபத்து பற்றி கேள்விப்பட்டு அதை பற்றி விசாரிக்க கண்ணனும், அகாடமியின் பயிற்சியாளர் பாஸ்கரும் வந்தனர்...
“என்னாச்சுங்க.... சார்க்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டோம்.... இப்போ எப்படி இருக்கார்....”, பாஸ்கர் கேட்க கிருஷ்ணனும் நடந்தவற்றை அவரிடம் கூறினார்....