பாக்கெட்டினுள் வைத்துக் கொண்டு வெளியேறினார் தரகர்..
தரகர் சென்றதும், கணவரிடம் வந்து நின்ற பார்வதி, “த பாருங்க!...அர்ச்சனாவுக்கு இன்னிக்கு அரை நாள்தான் வேலையாம்!...அதே மாதிரி கைலாஷும் இன்னிக்கு எங்கேயும் வெளி வேலைக்குப் போகலையாம்!...அவங்க ரெண்டு பேரையும் வெச்சு க்ளீனிங் வேலையை நீங்க பாருங்க!...சமையல் வேலைகளையும்...பலகார வேலைகளையும் நான் பார்க்கறேன்!..ஆளுக்கொன்னா செஞ்சா சிரமமேயிருக்காது!” என்றாள்.
அப்போது உள் அறையிலிருந்து அலுவலகம் செல்லும் ஒப்பனையோடு வெளியே வந்த அர்ச்சனா வரும் போதே, “என்னப்பா காலங்காத்தாலேயே தரகர் வந்திட்டுப் போறார்...ஏதாவது சந்தோஷமான சமாச்சாரமா?” குனிந்து இடுப்புப் பகுதியில் சேலையின் மடிப்புக்களை சரி செய்து கொண்டே கேட்டாள்.
அவர் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு வந்த பார்வதி, “ஆமாம்டி...நாளைக்கு அக்காவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க!” என்றாள் சந்தோஷச் சிரிப்புடன்.
“ஓ”என்றபடி நெற்றியைச் சுருக்கிய அர்ச்சனா, அடுத்த கேள்வியைக் கேட்க வாயெடுக்கும் முன்,
பார்வதியே முந்திக் கொண்டு சொன்னாள். “அதாண்டி...அந்த பேங்க் ஆபீஸர் மாப்பிள்ளை!”
அப்போது அறைக்குள்ளிருந்து, “அர்ச்சனா...அர்ச்சனா!” என்று சுலோச்சனாவின் அழைப்புக் குரல் வர,
“என்னக்கா?” கேட்டவாறே திரும்பவும் அறைக்குள் சென்றாள் அர்ச்சனா.
“என்ன...அங்க ஒரே பேச்சும் சிரிப்புமா இருக்கு...ஏதாச்சும் விசேஷமா?” சுலோச்சனா தங்கையிடம் கேட்டாள்.
“ஆமாம்...விசேஷம்தான்...எங்களுக்கில்லை!...உனக்கு!” சொல்லி விட்டுக் கண்ணடித்தாள் அர்ச்சனா.
புரிந்தும் புரியாதவளாய் சுலோச்சனா தங்கையை கூர்ந்து நோக்க,
“இந்த மகாராணியைப் பெண் பார்க்க ஒரு மகாராசன் நாளைக்கு வரப் போறானாம்!”என்றவள் சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு, “இல்லை...இல்லை...வரப் போறாராம்!” என்றாள்.
“க்கும்...எனக்கு அது ஒண்ணுதான் குறைச்சல் இந்த ராசியில்லா ராணிக்கு!” சலித்துக் கொண்டாள் சுலோச்சனா.
“ஏன்க்கா அப்படிச் சொல்றே?...உனக்கு என்ன குறைச்சல்?...அழகில்லையா?...அறிவில்லையா?” எதிர்க் கேள்வியை எழுப்பினாள் அர்ச்சனா.
“ஒரு குறைச்சலும் இல்லாததினாலதான் இது வரைக்கும் பதினெட்டு மாப்பிள்ளைகள் வந்து பார்த்திட்டு பின்னங்கால் பிடரில அடிக்க ஓடிப் போனாங்களாக்கும்?” விரக்தியாய் சுலோச்சனா சொல்ல,