தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 01 - முகில் தினகரன்
அன்றைய விடியல் மற்றவர்களுக்கு எப்படியோ தேவநாதனுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விடியல். அதை அவ்வாறு ஆக்கித் தந்த பெருமை கல்யாணத் தரகர் கண்ணுசாமியையே சாரும்.
“அய்யா...நானும் ஒரு தடவை ரெண்டு தடவையல்ல...கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து தடவை நேரிலேயே போய்ப் பேசிட்டு வந்திருக்கேன்!...அப்போதெல்லாம் பிடி கொடுத்தே பேசாதவங்க திடீர்னு நேத்திக்கு அவங்களாகவே கூப்பிட்டு நம்ம சுலோச்சனாவை பொண்ணுப் பார்க்க வர்றோம்!னுட்டாங்க!...” வெற்றிலைக் காவிப்பல் மொத்தமும் தெரியும்படி சிரித்தார் தரகர் கண்ணுசாமி.
“அப்படியா?...ரொம்பச் சந்தோஷம் தரகு!...எப்படியும் ரெண்டு மூணு நாளு கழிச்சுத்தானே வருவாங்க?...அதற்குள் வீட்டையெல்லாம் கொஞ்சம் ஒழுங்கு படுத்திடறோம்!” என்றார் தேவநாதன், பார்வையை அங்கிருந்த “கச...கசப்பு”க்களின் மீது செலுத்தியவாறு.
“அய்யய்ய...அதான் கிடையாது...நாளைக்குக் காத்தால வர்றேங்கறாங்க!” தரகர் “வெடுக்”கென்று சொன்னார்.
“அடப்பாவமே!” என்ற தேவநாதன் யோசனையுடன் மேவாயைத் தேய்க்க,
இடையில் புகுந்த அவர் மனைவி பார்வதி, “அதனாலென்ன?...தாராளமா நாளைக்குக் காத்தாலேயே வரட்டும்!...க்ளீன் பண்ற வேலை ஒரு பெரிய விஷயமில்லை!...ஒரு மணி நேரம் போதும்..கச்சிதமாய்ப் பண்ணிடலாம்!” என்றாள். பாவம், கிட்டத்தட்ட முப்பது வயதை நெருங்கி விட்ட தன் மூத்த மகளை எப்படியாவது அனுப்பினால் போதும் என்பது அவள் நிலை. மூத்தவளுக்கே நீண்ட காலம் இழுத்துக் கொண்டிருந்தால் அடுத்து நிற்கும் சின்னவள் அர்ச்சனாவிற்கு எப்போது ஆரம்பிப்பது?...எப்போது முடிப்பது?...தொடர்ந்து மகன் வேறு இருக்கிறான் அவனுக்கும் காலாகாலத்தில் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிக்க வேண்டுமல்லவா?
“சரி தரகு...மேலிடமே சொல்லியாச்சு...அப்புறமென்ன?...நாளைக்குக் காத்தாலேயே அவங்களை வரச் சொல்லிடு!” என்றார் தேவநாதன்.
“அப்ப நான் கிள்ம்பறேனுங்கய்யா!...இப்பவே போய் அவங்களுக்கு தகவல் சொன்னாத்தான் அவங்களும் தயாராவாங்க!”என்றவாறே வாசல் வரை நடந்த தரகர் கண்ணுசாமி, நிதானமாய்த் திரும்பி வந்து, “ஹி...ஹி..”என்று மீண்டும் தன் காவிப்பற்களைக் கண்காட்சியாக்க,
“பார்வதி!...தரகர் கைல ஒரு இருநூறு ரூபாய் குடுத்தனுப்பும்மா!” என்றார் தேவநாதன்.
தலையாட்டியபடியே உள் அறைக்குள் சென்றவள், திரும்பி வரும் போது கையில் பர்ஸுடன் வந்தாள். அதிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து தரகரிடம் அவள் நீட்ட,
முக மலர்ச்சியுடன் வாங்கி, அதைத் தன் இரு கண்களிலும் ஒத்திக் கொண்டு, சட்டைப்