“ப்ச்!...ஏன்க்கா எப்பவும் இப்படியொரு தாழ்வு மனப்பான்மையோட...விரக்தியாகவே பேசறே?...” அக்காவை நெருங்கி வந்து அவள் தோள்களைத் தொட்டவாறே கேட்டாள் அர்ச்சனா.
“அடிப்போடி...என் கவலை எனக்கு!”
“அந்தக் கவலையை எல்லாம் தீர்க்கறதுக்குத்தான் நாளைக்கு அருமையான மாப்பிள்ளை ஒருத்தர் வர்றாரு!...வந்து உன்னைப் பார்த்ததும் “கட்டுனா இந்தப் பொண்ணைத்தான் கட்டுவேன்!”னு அடம் பிடிக்கப் போறாரு” பீடிகை போட்டாள் அர்ச்சனா.
“யாருடி அந்த அருமையான மாப்பிள்ளை..?...எந்த தேசத்து ராசா?” கிண்டலாய்க் கேட்டாள் சுலோச்சனா.
“தேசத்து ராசா இல்லை...பேங்குக்கு ராசா!...ஆமாம்டி...உன்னைப் பெண் பார்க்க பேங்க் ஆபீசர் வர்றாரு!...நீ வேணா பாரு...இந்த தடவை இந்த வரன் நிச்சயம் சக்சஸ் ஆகத்தான் போகுது!...அக்கா கழுத்துல தாலி ஏறத்தான் போகுது!...அடுத்த வருஷம் ஒரு குட்டி பொறக்கத்தான் போகுது!” தமாஷாய் சொல்லி விட்டு அர்ச்சனா முக மலர்ச்சியோடு சிரிக்க,
அதற்கு நேர் மாறாக சுலோச்சனாவின் முகம் வருத்தத்தின் விருத்தமாய் மாறியிருந்தது.
அதைக் கூர்ந்து பார்த்த அர்ச்சனா, “அக்கா...நீ ஏன் எப்பவும் இப்படியே இருக்கே?” தாள மாட்டாமல் கேட்டாள்.
“அந்த தரகனுக்கும் வேற வேலை இல்லை!...இந்த அப்பாவுக்கும் வேற வேலை இல்லை!...அவன் சும்மாவாது யாரையாவது கூட்டிட்டு வந்து பெரிசா படம் காட்டுவான்!...இவரும் அவனை நம்பிக்கிட்டு...ஏக எதிர்பார்ப்புக்களோட தடபுடலா விருந்து வைப்பார்!...வந்தவங்க வயிறு முட்டத் தின்னுப்புட்டு...ஹி...ஹி..ஹி..ன்னுட்டு போயிடுவாங்க!...கடைசில எல்லாமே புஸ்வானமாப் போயிடும்!...நானும் பார்த்திட்டுத்தானே இருக்கேன்!”
“சேச்சே...அப்பாவைத் திட்டாதேக்கா!...அவர் அவரோட கடமையைத்தான் செய்யறார்!...அந்தக் கடவுள்தான் கண் திறக்கவே மாட்டேங்குறார்!...எல்லாத்துக்கும் ஒரு நேரம் வர வேண்டாமா?” சொல்லி விட்டு பெரிய மனுஷி போல் மேலே பார்த்துக் கும்பிட்டாள் அர்ச்சனா.
“ஒருவேளை அந்தக் கடவுளுக்கு ஒன்றரைக் கண்ணாயிருக்குமோ?” சுலோச்சனா சோகத்திலும் நகைச்சுவையை வெளிப்படுத்தினாள்.
அப்போது,
“ஏய்...அர்ச்சனா...உனக்கு வேலைக்குப் போக டைம் ஆகலையா?...அங்க நின்னு இன்னும் என்னடி அரட்டை அடிச்சுக்கிட்டிருக்கே?” அறைக்கு வெளியிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.
“இதோ கிளம்பிட்டேன்மா!” சொல்லியவாறே வேக, வேகமாக வெளியே வந்து, வாசலுக்குச் சென்று செருப்பை தாறுமாறாய் மாட்டிக் கொண்டு, படிகளில் குதித்திறங்கி ஓடினாள்.