பிசகென்றால் அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்களும் போய்விடும். எனவே வகுப்பில் எடுத்த குறிப்புகள், நூலக புத்தகங்கள் என்று மும்முரமாகப் படித்துக் கொண்டு இருந்தாள் ரம்யா. மதியம் மணி ஒன்று, அந்நேரம் ரம்யா மட்டுமே வீட்டில் இருந்தாள். அம்மா ரேஷன்கடைக்குச் சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை. தொலைபேசி சிணுங்கியது. எடுக்கவா வேண்டாமா என்று யோசனை ஒரு விநாடி! ஆனால் பரபரத்த கைகள் தொலைபேசி ரிசீவரை எடுத்துத் தன்னிச்சையாக காதருகில் கொண்டு செல்லவும்,
“ஹலோ!” என்றாள்
பதிலில்லை. மௌனம்.
மறுபடியும், “ஹலோ!” என்றாள். அதற்கும், எதிர்முனையில் அமைதி மட்டுமே பதிலாக.
ஏனோ ரம்யாவின் கைகளில் நடுக்கம், கண்களில் நீர்த்துளி. இது என்ன புது உணர்வு என்று அவள் தடுமாற, போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதும் அவளும் ரிசீவரை வைத்துவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
இதெல்லாம் இப்போ எனக்கு ரொம்பத் தேவையா என்றுத் தன்னைத்தானே கடிந்துகொண்டு போனை எடுத்த தனது கையைக் கிள்ளிக் கொண்டாள். திரும்பவும் படிப்பில் நாட்டம் வரவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அம்மா வீட்டுக்குள் நுழைவதைக் கண்டதும், புத்தகத்தைக் கையில் எடுத்தாள்.
“ரம்யா? எதாச்சும் போன் வந்துச்சா?” முதல் கேள்வியைக் கேட்கவுமே அதிர்ந்தாள், இல்லையே என்றாள் பொய்யாக!
“சரி! சரி! பெரியம்மா தான் சீயக்காய் மொத்தமா திரிச்சுத் தர்றேன்னு சொன்னாங்க. ரெடியானதும் போன் பண்றேன்னு சொல்லியிருந்தாங்க! அதைத்தான் கேட்டேன்!”
“பெரியம்மா போன் பண்ணலையேம்மா!”
நீ படிக்குற மும்முரத்தில் கவனிக்காம விட்டுட்டியா? கேட்ருக்கும்ல உனக்கு!
நான் எங்கே படிச்சிட்டு இருந்தேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, போன்கால் எதுவும் வரவேயில்லை என்று சாதித்தாள். அம்மா, ஏன் இப்படிக் கேள்வியாக் கேட்டுக் குடையறாங்க என்றொரு பயம் வேறு வந்தது ரம்யாவுக்கு. மீண்டும் புத்தகத்துக்குள் தலையை நுழைத்துப் பாடங்களில் மூழ்கினாள்.
மறுநாள் காலையில், கொஸ்டீன் பேப்பர் ஈசியா இருக்கணும் என்று தன் செல்லப் பிள்ளையாருக்கு உத்தரவு போட்டபடி கல்லூரிக்குக் கிளம்பினாள். அவளின் கல்லூரியில் செமெஸ்டர் பரீட்சை சமயம் மட்டும் கல்லூரிப் பேருந்தில் எல்லா மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அதிக ட்ரிப்கள் அடிப்பார்கள். அரசுப் பேருந்தில் வரும் மாணவர்களும்,