" நிரஞ்சன்! என்னிடம் பல நூறு கோடிகள் பணம் இருக்கலாம். ஆனால், என் நம்பிக்கைக்கு உரியவர்கள் யாருமேயில்லை......."
செட்டியார் கண்ணீர் விட்டார். அவரை சமாதானம் செய்தான் நிரஞ்சன்!
" ஐயா! உச்சிப்பிள்ளையார் இருக்கும்போது, வேற யாரும் தேவையில்லே! அவர் உங்கள் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் துணை இருப்பார்......"
" உண்மைதான்! அவர் தான் எனக்கு உங்களை இன்று காட்டியிருக்கிறார்.
நிரஞ்சன்! நான் ஒரு அனாதை! பெற்றவங்களோ உடன்பிறந்தவங்களோ யார் என்றே தெரியாது.
என்னை அந்தப் புண்ணியவான், மனிதாபிமான கருணை உள்ளத்தோடு தன் வளர்ப்பு மகனாக என்னை நேசித்து எல்லா செல்வமும் கொடுத்தார்.
அவர் எனக்கு நல்ல பெண்ணாகப் பார்த்து, திருமணமும் செய்வித்தார்.
எனக்கு ஒரு சிறந்த வாழ்க்கை அமைந்துவிட்ட திருப்தியுடன் கண்களை மூடினார்.
எல்லா செல்வங்கள் இருந்தும், எங்களுக்கு பிள்ளைச் செல்வம் இல்லை. என் மனைவியின் உறவினர் போட்டி போட்டு தங்கள் குழந்தைகளை எங்களுக்கு வளர்ப்புமகனாக தருவதற்கு துடிக்கின்றனர்.
அவர்களுக்கு எல்லாம் என் கோடிக்கணக்கான சொத்துக்களின்மீது குறி.
எந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தாலும், மற்ற உறவினர் பொறாமையில் அந்தக் குழந்தையையோ, எங்களையோ கொல்லவும் தயங்கமாட்டார்கள்.
பணம் பயங்கரமான சத்ரு! அதனால், தன்னந் தனியாக நான் சொத்துக்கள் அனைத்தையும் சுமக்கிறேன். சுமையை இறக்கிவைத்து சிறிது இளைப்பாற நம்பத் தகுந்தவர் எவருமே இதுவரை என் கண்ணில் படவில்லை, உங்களை சந்திக்கும்வரை!
நிரஞ்சன்! உங்களிடம் தற்போதைக்கு ஒரே ஒரு காரியத்தை ஒப்படைக்க நினைக்கிறேன்.
அது, உங்கள் மனையை வாங்கி அதில் கட்டிடம் கட்டி கடை துவக்குவதுதான்!
இதன் முழு பொறுப்பும் இனி உங்கள் பொறுப்பு. மறுப்புச் சொல்லாமல், ஏற்றுக்கொள்! பணத்தைப்பற்றி கவலைப் படாதே! நீங்கள் எப்போது எத்தனை பணம் கேட்டாலும் தருகிறேன்.
சாம்புவையும் என்னால் முழுவதும் நம்பமுடியவில்லை. அவனும் என் மனைவியின் உறவினர்களில் ஒருவன்.
என்ன சொல்றீங்க, நிரஞ்சன்?"
" ஐயா! உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. எந்த உதவி வேண்டுமானாலும், நான் செய்கிறேன். ஆனால், எங்கள் மனை வாங்கும் விஷயத்தில், நானும் ஒரு விற்பவனாக இருப்பதால், அது சரிவராது.