அறைக்குள் சென்ற ஷீலா ரேச்சலை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். ரஞ்சனை பார்த்து புன்னகைத்த ரேச்சல் மிக கவனமாக சத்யனை தவிர்த்து விட்டு நடந்தாள்.அவளுடைய முகம் தெரியவில்லை எனினும் காது மடலை கவனிக்க முடிந்தது.
'ரொம்ப கோபம் போலியே… ஒரு நொடியில் காது மடல் சிவந்து போய் விட்டதே' கண்பார்வையிலிருந்து மறையும்வரை சத்யன் அவளை ஊன்றி கவனித்தான்.
அவர்கள் கல்பனா இருந்த அறைக்குள் சென்றனர். அங்கு கல்பனாவுடன் அவளுடைய மாமன் மாரப்பனும் இருந்தான்.
அவர்களைப் பார்க்கவும் மரியாதையுடன் எழுந்து நின்றான். அவனிடம் ஷீலா,
"கல்பி எப்படி இருக்கிறாள்?. டாக்டர் என்ன சொன்னார்?" என்று கேட்டார். அதற்கு அவன்...
"அவளுக்கு தீக்காயம் அதிகம்தான். ஆனால் ஆழமாக இல்லை. அதனால் விரைவில் ஆறி விடும்னு சொன்னாங்கம்மா. எரியுதுனு அழுகிறாள். அதனால் மயக்க மருந்து தந்திருக்கின்றனர்." என்றான்.
"அவள் பாவம் ஏற்கனவே ஒரு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இப்பொழுது இப்படி ஆகிவிட்டது. ஆனால் மாரப்பன், நீ கொஞ்சம் பொறுப்பாக இருந்திருந்தால் இது எல்லாம் நடந்திருக்குமா? அவள் உன்னை திருமணம் முடித்து இருந்தால் அவளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கும். கார்மேகம் போன்ற பொறுக்கிகள் அவளை நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நீ குடித்து விட்டு ஊர் சுற்றி அவளுடைய வாழ்க்கையையும் கெடுத்து விட்டாய்" என்று குற்றம் கூறினார்.
"இல்லம்மா. இனி அதுபோல நடந்துக்க மாட்டேன். என் அக்கா பொண்ணும்மா… அது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்குன்னு இப்ப தெரியுது. அவனோட தொல்லையை எங்கிட்ட சொல்ல முடியாம தவிச்சிருக்கு. அப்பவும் என்னை கட்டிக்கறேன்னுதான் சொல்லி இருக்கு. என்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கு. சத்தியமா அதை காப்பாத்துவேன்மா" என்றான்.
"எப்ப டிஸ்சார்ஜ் பண்றாங்களாம்"
"இரண்டு நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் பண்றதா சொல்லி இருக்காங்கம்மா"
"அவள் கண்ணு முழிச்சா நாங்க வந்தோம்னு சொல்லு"
"உங்க பொண்ணுக்குதான் நன்றி சொல்லனும். அவங்க மட்டும் வரலைன்னா என்னோட கல்பி இன்னேரம் செத்துப் போயிருப்பா... அவங்க எவ்வளவு தைரியமா நெருப்புக்குள் பாய்ஞ்சு காப்பாத்தி இருக்காங்க " என்று பேசியவன் ரேச்சல் பக்கம் திரும்பி,
" ரொம்ப நன்றிம்மா. உங்களுக்கு நான் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கிறேன்" என்று சொன்னான்.