நெனச்சிட்டேன்!...அதனால கரண்ட் வந்ததும் மோட்டார் ஓடியதை நான் கவனிக்கலைம்மா!...மன்னிச்சிடுங்கம்மா...தப்பு என்னோடதுதான்!” மொத்தமாய்ச் சரண்டர் ஆனாள் பார்வதி.
அவளாகவே வந்து தவறை ஒப்புக் கொண்டதோடு மன்னிப்பும் கேட்டு விட்டபின் தொடர்ந்து அவளைத் திட்ட முடியாமல் போனதால் சம்பூர்ணம், சட்டென்று தன் குரலைத் தணித்துக் கொண்டு, “சரி...சரி...இனியாச்சும் கவனமா இரு!” என்று சொல்லி விட்டு, “அது சரி...என்ன விசேஷம் வீட்டுல?...வாசலெல்லாம் சாணி போட்டு மெழுகியிருக்கு...கோலமெல்லாம் அசத்தலாய்ப் போட்டிருக்கு!” கேட்டாள்.
“அது...வந்து...”என்று தர்மசங்கடமாய் மென்று விழுங்கிய பார்வதி, கடைசியில் வேறு வழியில்லாம, “நம்ம சுலோச்சனாவைப் பொண்ணுப் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க...அதான்!”
“ஓ...அதான் பார்த்தேன்!...அந்த வீட்டிலிருந்து பிளாஸ்டிக் சேரெல்லாம் உங்க வீட்டுக்குள்ளார போகும் போதே நெனச்சேன்!..சரி...சரி...எப்படியோ நல்ல விதமா முடிஞ்சா சரி!”
அவள் பேச்சில் இருந்தது உண்மையான ஆசியா?...இல்லை கடுப்பில் வெளி வந்த பொறாமை ஆசியா? என்பது புரியாமல் யோசனையுடன் வீட்டிற்குள் திரும்பினாள் பார்வதி.
“என்னாச்சு?...என்ன சொன்னே?” தேவநாதன் பரபரப்பாய்க் கேட்க,
“கரண்ட் போன உண்மையைச் சொன்னேன்!...கரண்ட் வந்தது தெரியலை!ங்கற உண்மையையும் சொன்னேன்!...ஆனா மோட்டார் போட்டதும்...அதை ஆஃப் பண்ண மறந்ததும்..நான்தான்னு கூடவே ஒரு பொய்யையும் சேர்த்துச் சொல்லிட்டேன்!...அவ்வளவுதான் எதுவும் பேசாம அமைதியாய்ப் போயிட்டா!”
“அப்பாடா...இதே அமைதியை அவள் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திட்டுத் திரும்பிப் போற வரைக்கும் கடைப்பிடிச்சா போதும்!” என்று நெஞ்சைத் தொட்டுக் கொண்டு சொன்னார் தேவநாதன்.
தன் தாயும், தந்தையும் அந்த சம்பூர்ணத்தைக் கண்டு இந்த அளவிற்கு பயப்படுவது அர்ச்சனாவிற்கு ஒரு ஆங்காரத்தை ஏற்படுத்த, “ஹூம்...அது திருந்தாத ஜென்மம்!...இதுக திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
****
சரியாக காலை பத்தே கால் மணிக்கு தரகர் தனது டி.வி.எஸ்-50ல் முன்னால் வந்திறங்க, அவருக்குப் பின்னால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் இரண்டு கார்களில் வந்து சேர்ந்தனர் மாப்பிள்ளை வீட்டார்கள். முதல் காரிலிருந்து முழுவதும் ஆண்களாகவே இறங்க, இரண்டாவது காரிலிருந்து பட்டுச் சேலைகள் சரசரக்க பெண்கள் இறங்கினர்.