குடும்மா!” என்றார்.
அதுதான் சாக்கு என்று அவசர அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.
கடந்த சில நிமிடங்களில் எல்லோருடைய பார்வையும் சுலோச்சனாவின் மீதே ஆர்வமாய்ப் படர்ந்திருந்த போது, மாப்பிள்ளைப் பையனின் பார்வை மட்டும் அடிக்கடி தடம் மாறி....இடம் மாறி...சுலோச்சனாவுடன் வந்திருந்த அர்ச்சனாவையும் ஆர்வமுடன் பார்த்தது.
உள்ளே சென்ற சுலோச்சனா ஒரு டிரேயில் காஃபி டம்ளர்களை எடுத்துக் கொண்டு மீண்டும் கூடத்திற்கு வர, அவளுடன் வந்த அர்ச்சனா அக்கா தடுமாற்றமில்லாமல் எல்லோருக்கும் காஃபி வினியோகம் பண்ண உதவினாள்.
வேலை முடிந்ததும் சுலோச்சனா காலி டிரேயுடன் அறைக்குள் செல்லத் திரும்ப,
“நீ இங்கியே உட்காரும்மா!” என்றார் மாப்பிள்ளையின் தாயார். தன் கையிலிருந்த டிரேயை அர்ச்சனாவிடம் கொடுத்து விட்டு, ஜமுக்காளத்தில் அவர்களுடன் தானும் அமர்ந்து கொண்டாள் சுலோச்சனா.
தொடர்ந்து அவர்கள் மூத்த உறவுக்காரர்களைப் பற்றியும், சொந்த ஊர், குலம், கோத்திரம், குல தெய்வம், பற்றியெல்லாம் பேசி முடித்த பின், கொடுக்கல் வாங்கல் பேச்சு ஆரம்பமானது. அந்தப் பேச்சு நிகழும் சூழ்நிலையில் தன் மகள் அங்கே அமர்ந்திருப்பது அவ்வளவு நாகரீகமில்லை என்பதைப் புரிந்து கொண்ட தேவநாதன், “அம்மா...சுலோச்சனா..நீ வேணா எந்திரிச்சு உள்ளார போம்மா!” என்றார்.
அவள் எழுந்து போய் உள் அறைக்குள் புகுந்து கொள்ள, அர்ச்சனா மட்டும் சற்றுத் தள்ளி நின்று நடப்பவைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரம், அவளை ஒரு ஜோடிக் கண்கள் நிலைக் குத்திப் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் அறியாமல் போனது அவளது துரதிர்ஷ்டமே,
தொடரும்...
Next episode will be published on 21st Nov. This series is updated weekly on Saturdays.