தொடர்கதை - நல்ல முடிவு - 11 - ரவை
நிரஞ்சன் குடும்பத்துடன் செட்டியாரின் விஜயத்தை நினைத்து நினைத்து மகிழ்ந்து பொழுதைக் கழித்த நேரத்தில், நிரஞ்சனின் போன் சிணுங்கியது.
" தலைவா! ஒரு சின்ன டவுட்! இந்த பிளாட்டை காலி பண்ணியபிறகு, மாற்று இடம் வாங்கப் பணம் வேணுமே! பணத்தைக் கொடுத்தபின் தானே வீட்டுக்கு குடி போக முடியும். கையிலே ரொக்கம் இல்லையே! செட்டியாரிடம் முன்பணம் வாங்கித் தாங்க!"
" பத்திரமெல்லாம் ரெடி யா? என்கம்ப்ரன்ஸ் சர்டிபிகேட் ரெடியா? அதை எடுத்துக்கிட்டு, செட்டியாரின் வக்கீலிடம் காட்டுங்க! அவர் சரிபார்த்து ஓ.கே. சொன்ன பிறகு, செட்டியாரிடம் கேட்டு வாங்கித் தரேன். அதுவும், தனித்தனியா வேற வேற நாளிலே இருபது பேரும் போவது சரிவராது. நாம் எல்லாரும் பத்திரங்களை ரெடி பண்ணினபிறகுதான் ஒரே நாளிலே, அட்வான்ஸ் கேட்டு வாங்கலாம்....."
" அதெப்படி தலைவா? சிலபேர் ரெடியா வச்சிருப்பா, சிலபேர் பத்துநாள் டயமாகும் ஒருத்தர் ரெண்டுபேர் மாசக் கணக்கிலே டிலே பண்ணி கழுத்தறுப்பாங்க, அதுவரை யிலும், பணம் கைக்கு வராம, மாற்று இடம் கிடைக்காம இருந்தால், பிளாட்டை எப்ப காலி பண்றது? ஊக்கத் தொகையை எப்படி வாங்குவது?"
" எடுத்த எடுப்பிலேயே நெகடிவா பேசாதீங்க! மாற்று வீடு எல்லாரும்தான் வாங்கணும், எல்லாருக்கும் தான் பணம் அவசரமா வேணும், அதனாலே நீங்க ஒருவருக்கொருவர் பேசி எல்லாரும் ரெடி பண்ணுங்க! நானும் சர்குலர் அனுப்பறேன். சரியா?"
" தலைவா! செட்டியார் தான் என் எதிரிலேயே, எல்லா அதிகாரத்தையும் உங்களிடம் கொடுத்திட்டார், நீங்க 'கொடு'ன்னு சொன்னா, கொடுப்பாரு...."
" நாம் நியாயமா நடந்து கொள்வோம்னு நம்பி பேசிய செட்டியாருக்கு நாம சரியா நடந்துக்கணும் இல்லையா? பதட்டப்படாம யோசியுங்க! வைச்சிடவா?"
" சரி, தலைவா!" நிரஞ்சன் உடனே இந்தக் காரணத்தை விரிவுபடுத்தி மற்ற ஓனர்களுக்கு சர்குலர் அனுப்பினார்.
உடனேயே ஓரிருவர் " நீங்க சொல்வது சரிதான். சீக்கிரமா ஏற்பாடு செய்து வக்கீலைப் பார்த்தபிறகு சொல்றோம்." என்றனர்.
மற்றவர்கள் பதிலே சொல்லவில்லை.
" அப்பா! நாம் என்ன செய்யப்போறோம்? நமக்கு அதிகபட்ச ஊக்கத்தொகை வேணுமே!"
" சேகர்! நானும் அதை யோசனை பண்ணறேன், அம்மா என்ன சொல்றான்னு கேள்!"
" அம்மா! இங்கே வா!"
" வந்துட்டேன், சொல்லு!"