(Reading time: 8 - 15 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 04 - முகில் தினகரன்

ரண்டு தினங்களுக்குப் பிறகு தேவநாதனைத் தேடி வந்த தரகர் கண்ணுசாமி, முகம் சுரத்தே இல்லாதிருந்தது. அவரது முக பாவத்திலேயே விஷயத்தை யூகித்து விட்ட தேவநாதன், “என்ன தரகு...வழக்கம் போல் இதுவும் புஸ்வானம்தானா?” கேட்டார். சோகத்திலும் ஒரு அங்கதம். வருத்தத்திலும் ஒரு எள்ளல். துயரத்திலும் ஒரு நையாண்டி.

“அய்யா...அது...வந்து” என்று ஆரம்பித்த தரகர், ஒரு சிறிய தயக்கத்திற்குப் பின், “வீட்டுல பொண்ணுக ரெண்டு பேரும் இருக்காங்களா?” என்று சன்னக் குரலில் கேட்டார். அப்போது அவர் பார்வை உள் அறையை நோட்டமிட்டது. அவருடைய அந்தச் செய்கையே அவர் ஒரு பெரிய வில்லங்கத்தைக் கொண்டு வந்திருக்கின்றார் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

குழப்பமான தேவநாதன், “வந்து...சின்னவ...எப்பவும் போல் ஆபீஸுக்குப் போயிட்டா!...பெரியவளும் அவ அம்மாவும் இப்பத்தான் “மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வர்றோம்!”னுட்டுக் கிளம்பிப் போனாங்க!...எதுக்குக் கேட்கறே?” என்று ஒருவித அச்சத்துடனே கேட்டார்.

“ஒண்ணுமில்லை...வந்து...” என்று தரகர் மறுபடியும் இழுக்க,

அவர் எதையோ சொல்ல வந்து, மிகவும் தர்மசங்கடமாய் நெளிகிறார் என்பதைப் புரிந்து கொண்ட தேவநாதன், மெல்ல முறுவலித்து, “யோவ் தரகு...மாப்பிள்ளைப் பையன் “பொண்ணைப் பிடிக்கலை!”ன்னு சொல்லிட்டான்!...அதானே?...அதைச் சொல்ல ஏன்யா இவ்வளவு தயங்கறே?...நாங்கெல்லாம் பல தடவை அந்த பதிலைக் கேட்டுக் கேட்டு உரமேறிப் போய்க் கிடக்கறோம்!” என்றார்.

“அய்யா...மாப்பிள்ளை அப்படிச் சொல்லியிருந்தாக் கூடப் பரவாயில்லையே!...ஆனா” என்று தரகர் மூக்கைச் சொறிய,

“என்னய்யா “ஆனா...ஆவன்னா” ன்னு இழுக்கறே?... சொல்ல வந்துட்டு “படக்!”குன்னு விஷயத்தைச் சொல்லுவியா!...அதை விட்டுட்டு ரொம்பத்தான் நெளியறியே?...” தேவநாதன் கோபமானார். அந்தக் கோபம், தன்னுடைய கையலாகாத்தனதின் வெளிப்பாடு என்பதும் அவருக்குத் தெரியும்.

 “வந்து...நம்ம பெரிய பொண்ணு சுலோச்சனாவை மாப்பிள்ளைக்குப் பிடிக்கலையாம்!.. சின்னப் பொண்ணு அர்ச்சனாவைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்காம்!...“வேணும்னா அதைக் கட்டிக்கறேன்...கேட்டுச் சொல்லுங்க!”ன்னு கேட்கிறார்!...அவங்க வீட்டுப் பெரியவங்களும்...“வாழப் போறவன் அவன்தானே அவன் விருப்பப்படியே சின்னவளைப் பண்ணிக்கட்டுமே!”ன்னு சொல்றாங்க!” ஒரு தூதுவனாய் வந்த தரகனுக்கே அதைச் சொல்ல மிகவும் மன உறுத்தலாயிருந்தது.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.