“சரி...அப்படியொரு முயற்சியும் செஞ்சு பார்ப்போம்!...ஏன்னா பார்வதி எதையும் என்னை விட தெளிவா செய்யக் கூடியவ!” என்றார் தேவநாதன்.
“அப்ப...நான் கிளம்பறேனுங்கய்யா!...போயிட்டு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்றேன்!...நல்ல பதிலாய்ச் சொல்லுங்க!..காலம் ஓடுற ஓட்டத்துல நாமளும் கொஞ்சம் புத்திசாலித்தனமா இருந்தாத்தான் பொழைக்க முடியும்!” போகிற போகில் ஒரு வசனத்தை வீசி விட்டுச் சென்றார் தரகர்.
ஏனோ இந்த முறை தரகர் தலையைச் சொறிந்து காசு எதுவும் கேட்காமலேயே சென்றது தேவநாதனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
****
மறுநாள், சுலோச்சனாவும், அர்ச்சனாவும் பிரதோஷ வழிபாட்டிற்காக கோவிலுக்குச் சென்றிருந்த நேரத்தில் தன் மனைவி பார்வதியிடம் தரகர் சொல்லி விட்டுச் சென்ற விஷயத்தை நிதானமாய்ச் சொன்னார் தேவநாதன்.
அவளும் எடுத்த எடுப்பில், “இதென்ன விசித்திரமா இருக்கு?..பெரியவளைப் பார்க்க வந்திட்டு சின்னவதா வேணும்னு கேட்கறதுக்கு வெட்கமாயில்லையா அந்த மனுசனுக்கு!...” என்று தடாலடியாய்க் கோபத்தைக் கொட்டி விட்டு, பிறகு ஆற அமர யோசித்து விட்டு, “சரி...நம்மால என்ன பண்ண முடியும்?...மாப்பிள்ளையே வாய் விட்டுக் கேட்டுட்டார்!... ஒண்ணு... “அதெல்லாம் முடியாது...அதுக்கு வேற ஆளைப் பாருங்க!”ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடலாம்!...இல்லேன்னா...நிதானமா யோசிச்சு...அவரு கேட்டபடியே செய்ய முடியுமா?ன்னு பார்க்கலாம்!” என்றாள்.
“எனக்கும் அப்படித்தான் பார்வதி தோணுது!... “வலிய வர்ற வரனை வாய்ச் சவடாலுக்கு உதறித் தள்ளினா...அப்புறம் வாசல் தேடி வரன்களே வராது!”ன்னு பெரியவங்க சொல்லுவாங்க!...இது வலிய வர்ற வரன்!...மாப்பிள்ளை பேங்க் ஆபீஸர் வேற!...நம்ம அர்ச்சனாவும் நல்ல கம்பெனில...கௌரம்வமான உத்தியோகத்துல இருக்கா!...ரெண்டும் சேர்ந்தா கன ஜோரா இருக்கும்!”
பார்வதி அதை ஆமோதிப்பது போல் தலையாட்ட,
“ஆக...இதுல உனக்குச் சம்மதம்!...அதே மாதிரி எனக்கும் சம்மதம்!...ஆனா...நம்ம பொண்ணுக ரெண்டும் சம்மதிக்கணுமே?” தேவநாதன் கவலையுடன் சொன்னார்.
“பேசுவோம்!...பேசற விதத்துல பேசிப் பார்ப்போம்!...நாம ஒண்ணும் அதுகளுக்கு கெடுதலான எதையும் செய்யலையே?” என்றாள் பார்வதி.
“இல்லை பார்வதி!...இதைப் பத்தி பொண்ணுக கிட்ட நான் பேசறதை விட நீ பேசுவதுதான்