தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 05 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
என்னங்க ஏன் அவளைப் போக வேண்டாம்னு சொல்றீங்க? அம்மா கேட்கவும், ரம்யாவின் கையில் ஒரு தாளைத் தந்தார் அப்பா. என்ன பேப்பர் அது என்று லேசான பயத்துடன் கையில் ரம்யா வாங்கவும், அது ஒரு பிரபல புத்தகக் கடையின் ரசீது என்பதைப் பார்த்து அமைதியானாள். நல்லாப் படிக்கிற புள்ளைக்கு எதுக்கு பழைய புத்தகம் தேடி அலையற வேலைன்னு எல்லாமே புதுப்புத்தகமா வாங்கிவந்துட்டேன். மொத்தம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் ஆச்சு. இரண்டு நாளில் பார்சல்ல வந்திடும்மா. என்ன கனம் ஒவ்வொரு புத்தகமும். அதான் கையோடு கொண்டு வராமல் பார்சலில் அனுப்பசொல்லி பணம்கட்டிட்டு வந்துட்டேன்.
என்னமோ எதோ என்று பதறிய ரம்யாவின் மனம் அமைதியானாலும், தனது படிப்புக்காக சிரமம் பாராது உழைக்கும் அப்பாவின் முகமும், தன்னைத் தூங்கவிடாமல் துரத்தும் தினேஷின் முகமும் என்னவோ அவள் மனதை உறுத்த, செயலற்று நின்றவளை, அம்மாவின் குரல் உலுக்கியது. ரசீதைப் பத்திரமா வை ரம்யா! அப்பா பாரு எவ்வளவு செலவு பண்ணி எல்லாத்தையும் புது புத்தகங்களா வாங்கி வந்திருக்காங்க! அதை நினைவில் வச்சிட்டு நல்லாப் படி! வாங்க! உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று அம்மா சொல்ல, அப்பா உள்ளே சென்றுவிட்டார். ரம்யா சாப்பிட்டாளா? என்று அப்பா அம்மாவிடம் கேட்பது அவள் காதில் விழுந்தது. அம்மா, அப்பா, படிப்பு, லட்சியம் ஒரு புறம், பைத்தியமாய் மனதைத் திணறடிக்கும் தினேஷின் நினைவுகள் மறுபுறம் மனதை நிறைக்க, தூங்கிப் போனாள்.
புதிய செமெஸ்டர், புதிய வகுப்பு, புதிய சகவகுப்பினர் என்று துறைவாரியாக எல்லாரும் பிரிந்துவிட, காலையில் வகுப்பறை எது என்று பிரின்சிபால் ஆபிஸின் நோட்டிஸ் போர்டில் பார்க்க நின்றாள் ரம்யா. அவர்கள் கணினித்துறையில் வகுப்பறைகள் தயார் நிலையில் இல்லாத காரணத்தால் தற்காலிகமாக கல்லூரி வளாகத்தின் கடைசியில் இருந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது தெரிந்தது. தினேஷ் என்ன துறை என்று அவளுக்குத் தெரியவில்லை. கண்மணியிடம் கேட்கவும் தயக்கம். ஏமாற்றத்துடன் தனது வகுப்பறைக்குச் சென்றாள்.
அங்கு முதலாம் செமெஸ்டரில் வேறுவேறு செக்க்ஷனில் படித்த பலரும் இன்று துறைவாரியாக அமர்த்தப்பட்டு இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இருந்தமையால் அவர்களையும் இரு வகுப்புகளாகப் பிரித்தனர். ரம்யாவின் பெயர் வரிசைப்படி அவள் ‘பி’ செக்க்ஷனில் இருந்தாள். வகுப்புக்குப் புது ஆசிரியை, கவிதா மேம். எல்லாரிடமும் இனிமையாகப் பேசினார். நீங்கள் என்னுடைய மாணவ, மாணவிகள் அல்ல என்னுடைய சகோதர,சகோதரிகள் என்று சொல்லவும் அனைவரும் கைதட்டினர். குட்டித் தேர்தல் நடத்தி வகுப்புத்தலைவராக ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்தனர். மாணவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதியும், மாணவிகள் சார்பில் ஒரு பிரதிநிதியும் தேவை என கவிதா மேம் சொல்ல, ரம்யாவை இருக்குமாறு அவளின்