அமையட்டும்!...அந்த ஆண்டவன் அவள் மீதாவது கொஞ்சம் கருணை காட்டறானே அதுவே போதும்!” என்றாள் எங்கோ முகத்தைத் திருப்பிக் கொண்டு.
“த பாரும்மா!...அந்த ஆண்டவன் யாருக்கு யாரை முடிச்சுப் போட்டிருக்கான்னு யாருக்கும்மா தெரியும்?...ஒரு வேளை ஆண்டவன் அந்த மாப்பிள்ளைக்கும்...நம்ம அர்ச்சனாவுக்கும்தான் முடிச்சுப் போட்டு வெச்சிருக்கானோ என்னவோ?...அதனால்தான் மனுஷங்களான நாங்க அதை மாத்த முயன்றும் மாத்த முடியாதபடிக்கு அவன் தடுக்கறானோ என்னவோ?!” இறைவன் மீது பழியைப் போட்டு, அவன் முதுகிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தங்கள் செயல்பாட்டுக்கு சமாளிப்புக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தாள் பார்வதி.
“ஹா...ஹா...ஹா..”என்று வாய் விட்டே சிரித்து விட்டாள் சுலோச்சனா. “பரவாயில்லைம்மா...எது நடந்தாலும் அதுக்கொரு காரணத்தைக் கற்பிச்சுக்கிட்டு, அந்தக் காரணத்தின் மூலம் தனக்குத் தானே ஆறுதல்படுத்திக்கற சூத்திரத்தை மனித இனத்துக்கு அந்த ஆண்டவன் மறக்காமல் குடுத்திருக்கான்!...அதை மட்டும் அவன் குடுக்கலைன்னா...இங்க பல பேரு நெஞ்சு வெடிச்சே செத்துப் போயிருப்பாங்க!...என்னைய மாதிரி!” என்றாள் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு.
“சரி..சரி..இந்த விஷயத்தை பற்றி நீ எதுவும் நம்ம அர்ச்சனாகிட்டப் பேசாதே!.. “பொசுக்”குன்னு கோபப்பட்டு வானத்துக்கும் பூமிக்குமா குதிப்பா!...அதனால நானே பேசி...நானே அவளைச் சம்மதிக்க வைக்கறேன்!...என்ன புரிஞ்சுதா?”
“ம்ம்” என்று கண்களை மூடிக் கொண்டு சொன்ன சுலோச்சனா, கண்களை மூடியபடியே கை ஜாடையால் தன் தாயை அறையை விட்டு வெளியே போகச் சொன்னாள்.
முனகியபடியே வெளியேறினாள் பார்வதி. கூடத்தில் அமர்ந்து அவள் வருகைக்காகவே காத்திருந்த தேவநாதன், பார்வதியைப் பார்த்து கண்களால், “என்னாச்சு?” என்று வினவ,
தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டிப் புன்னகைத்தாள் பார்வதி.
****
தன் பேச்சுத் திறத்தாலும், நா வன்மையாலும், தன் மூத்த மகளை வாயடைக்கச் செய்த பார்வதி இளைய மகள் அர்ச்சனாவையும் அதே அஸ்திரத்தால் வீழ்த்தி விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் வந்து சுனாமியில் சிக்கிய சருகாய்ச் சிதறடிக்கப்பட்டாள். செம்பரம்பாக்க வெள்ளத்தில் சிக்கிய சென்னையைப் போல் சின்னா பின்னமானாள்.
தாய் சொன்ன அந்த்த் தகவலைக் கேட்டதும் அர்ச்சனா ஒரு ருத்ர தாண்டவமே ஆடி விட்டாள். “ராஸ்கல்!...ஆம்பளைன்னா என்ன வேணாலும் செய்யலாம்!...எது வேணாலும் பேசலாம்!ங்கறது அவனோட எண்ணமா?..எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தா அவன் அக்காவைப் பெண் பார்க்க வந்திட்டு தங்கச்சியைக் கட்டிக்கறேன்!னு சொல்லுவான்?” பேசும் போது அர்ச்சனாவின் மொத்த உடம்பும் நடுங்கியது. அவன் மட்டும் அந்த நிமிடத்தில் அவள் எதிரில் இருந்திருந்தான் என்றால்