அவளின் ஏமாற்றத்தைக் கவனித்தது போல கண்மணி சொல்லத் தொடங்கினாள்,"காதலிச்சாலே எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தான்!" என்ன கண்மணி சொல்ற ஒன்னும் புரியல எனக்கு என்ற ரம்யாவிடம், தனது துறை மாணவன் ஒருவனுக்கு லேபில் உதவியதையும், அவன் அதைப் பற்றி அவன் நண்பர்களிடம் சொல்ல, அது கார்த்திக்கின் காதுக்கு எட்டியதும் உடனே அவன் ரொம்ப பொசசிவ்வாக சண்டை பிடித்ததையும், வகுப்பு மாணவர்கள் யாரிடமும் பேசக்கூடாது என்றும் சொல்லவும், இருவருக்குள் இதைப் பற்றியே வாக்குவாதம் வந்ததையும் சொன்னாள்.
அன்றொரு நாள், பிசிக்ஸ் லேபில் தனது வகுப்பு மாணவனுடன் எக்ஸ்பரிமென்ட் செய்கையில் தினேஷ் கடுகடுவென்று நின்றுகொண்டிருந்தது ஞாபகம் வந்தது. "சரி விடு கண்மணி! எப்படி கிளாஸ்மேட்ஸ் கிட்ட பேசாமல் இருக்க முடியும். எல்லாம் இந்த பாய்ஸ் பண்ற வேலை. நம்ம சின்னதா ஒரு ஹெல்ப் பண்ணிட்டாலும், எனக்காக அந்த பொண்ணு அந்த ஹெல்ப் பண்ணிட்டா, இந்த ஹெல்ப் பண்ணிட்டான்னு மத்த பசங்ககிட்ட போய் ரொம்ப பில்டப் கொடுப்பானுங்க. நீ எக்ஸ்பரிமென்ட்டுக்கு தானே ஹெல்ப் பண்ண. இதில என்ன இருக்கு. எவனாச்சும் எதாச்சும் பேசிருப்பான், அதான் கார்த்திக் டென்ஷன் ஆகியிருப்பாங்க. நீ இதையே யோசிச்சிட்டு இருக்காமல் அதைப் பத்தின கவலைய விடு. நாளைக்கு அவங்களே உன்கிட்ட நார்மலா பேசுவாங்க பாரேன்!" என்று கண்மணிக்கு ஆறுதல் சொன்னாள்.
மறுநாள் காலையில் நான்காம் ஆண்டு மாணவர்கள் பரபரப்பில் இருந்தனர். அண்ணா பல்கலைக் கழகத்துடன் அவர்களின் கல்லூரி இணைக்கப் பட்டதும் அவர்கள் எழுதி இருந்த செமெஸ்டர் தேர்வின் முடிவுகள் வெளியாகின. எப்போதும் வாங்கும் மதிப்பெண்களை விடக் குறைவாக வாங்கி இருந்தனர். இதற்கு முன் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் அவர்களின் தேர்வுகளை நடத்தி வந்தது. டிகிரி முடிக்கிற நேரத்தில் இப்படி வந்து இவர்களிடம் சிக்கிட்டோமே என்றும் கடினமான கேள்வித்தாள்கள் என்றும் மதிப்பெண்கள் குறித்து பலவித பேச்சுக்கள் வந்தன.
லெக்சரர்களும் துணைப்புரபசர்களும் துறைத்தலைவருடன் மீட்டிங்கில் இருப்பதால், வகுப்பு மாணவர்கள் அமைதி காக்குமாறு டிபார்ட்மெண்ட் பியூன் அண்ணா வந்து சொல்லவும், அனைவரும் கிசுகிசுப்பான குரலில் பேசத் தொடங்கினர். வகுப்பின் பரபரப்பைக் குறைக்க அவளுக்கு ஒரு யோசனை தோன்றவும், நமது வகுப்பைத் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணியவள், மேடையில் ஏறி தான் ஒரு செமினார் எடுக்கப் போவதாகக் கூறினாள். வகுப்பு மாணவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு அம்மா தாயே உக்காரு என்பது போல பாவனை காட்ட, ரஞ்சன் என்னும் ஒரு மாணவன் எழுந்து நின்று, வாயில் விரலை வைத்து அமைதியாக அவள் சொல்வதை கவனிக்குமாறு சைகை காட்டினான். ஏனோ அவன் சொல்லவும், அனைவரும் அமைதியாக கவனிக்கத் தொடங்கினர்.