தினேஷின் வகுப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.
ஆமா, கார்த்திக் பயோடெக் ப்ளாக் போய்ட்டான். தினேஷ் என் கிளாஸ் தானே, ஆயுசு நூறு, அதோ வர்றான் பாரு.
சரி! நேரமாகுது! நான் என் கிளாஸுக்கு போறேன் என்று உடனே அங்கிருந்து கிளம்பினாள் ரம்யா.
அவள் செல்வதற்குள் ரம்யாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஓடி வந்தவனுக்கு முன்பாக சில மாடிப்படிகளில் ஏறி சற்று மறைந்தவாறு நின்றாள். அவள் அங்கே நின்றது கீழே தினேஷுக்கும் ராபினுக்கும் தெரியவில்லை.
“என்னடா சொல்றா என் ஆளு!” என்றான் தினேஷ்.
என்ன உன் ஆளு, அவ உன்னை ஒரு ஆளாவே மதிக்கல, உன் மூஞ்சில கூட முழிக்கக் கூடாதுன்னு வேகமா ஓடிட்டு இருக்கா, நீ தான் பைத்தியம் மாதிரி புலம்பிட்டு இருக்க என்று அவனுக்குக் கிண்டலாகவே பதில் சொன்னான் ராபின்.
அவர்கள் எந்நேரமும் படிகளில் ஏறி அவள் மறைந்து நின்ற இடத்துக்கு வந்து விடுவார்கள் என்ற பயத்தில் தனது வகுப்புக்கு விரைந்தாள் ரம்யா. வகுப்பில் நுழைந்து தனது இடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு, ராபின் தன்னைப் பற்றி சொல்லியதை தினேஷ் நம்பிவிடுவானோ என்று ஒரு பயம் ஒரு வினாடி எழ, அவனாவது நம்புறதாவது, உயிரே போனாலும் இவன் என்னை விடமாட்டான் என்று ஒரு எண்ணம் மறுவினாடியே அழுத்தமாகத் தோன்றவும், அவளின் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை. என்னடி தனியா சிரிக்கிற என்ற தேவியிடம், சும்மா தான்டி! என்றவாறே பேனாவையும் நோட்டையும் எடுத்துக் கொண்டு வகுப்புக்குத் தேவையான நோட்ஸ் எழுதத் தயாராகி விட்டாள்.
“நீ வர வர ஒன்னும் சரியில்ல!” என்ற தேவி அவளும் எழுதத் தொடங்கினாள்.
வகுப்புகள் முடிந்து பேருந்து ஏற சென்றனர். கண்மணியின் முகம் களையிழந்து காணப்பட்டது. ரம்யா கேட்காமலே ஜன்னல் சீட்டை விட்டுகொடுத்துவிட்டு, தலையைக் கவிழ்ந்து விட்டாள்.
அவளிடம் என்னவென்று கேட்கவும் தயக்கம். கேளாமல் இருக்கவும் மனமில்லை ரம்யாவிற்கு. “என்ன வேணும்னாலும் இந்த வாழ்க்கைல பண்ணலாம் ரம்யா. ஆனால் லவ் மட்டும் பண்ணவே கூடாது. நீயும் நான் பண்ண அந்த தப்பை மட்டும் என்னிக்கும் பண்ணிராதடி!” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு கண்ணோரம் இருந்த நீர்த்துளியைத் துடைத்தாள் அவள். கண்மணி அழுவது கஷ்டமாக இருந்தாலும் அவள் சொன்னது எதுவும் ரம்யாவின் மூளைக்குள் போகவேயில்லை. பஸ் ஸ்டாப்பில் தினேஷ் நின்றால் அவனைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே அவள் கவனம் இருந்தது. ஆவலோடு ரம்யா தேடினாள், அங்கு தினேஷ் நிற்கவில்லை, அவன் நண்பர்களும் இல்லை.