தொடர்கதை - நல்ல முடிவு - 14 - ரவை
வக்கீலை, மற்ற குடியிருப்போர், சூழ்ந்து கொண்டு கட்டியணைத்து முத்தம் தந்து திணறடித்தனர்
" இருங்க! மூச்சு முட்டுது நிறுத்துங்க!" என வக்கீல் அலறியபிறகே, மற்றவர்கள் அவரை விடுவித்தனர்.
" பிய்த்து உதறிட்டீங்க! இனிமேல் நீங்களே சிபாரிசு செய்தால்கூட, வேறெந்த தீர்ப்பையும் ஒத்துக்கொள்ள மாட்டோம். ஊக்கத்தொகை முழுவதும் நமக்கே!"
" வக்கீல் சார்! திடீர்னு எங்கிருந்து அந்த யோசனை உங்களுக்கு கிடைத்தது? நாம் பேசிக்கொண்டது அதிக பட்சமா, பத்து லட்சம்தானே?"
" சத்தியமா சொல்றேன், எனக்கே அந்த வாதம் அந்த நிமிடத்தில்தான் தோன்றியது எல்லாம் மேலே உள்ள சக்தி செய்கிற அதிசயங்கள்!"
" உண்மை! உங்களுக்கு என்ன ஃபீஸ் உண்டோ, அதை நீங்க எடுத்துண்டு மீதியை எங்களுக்கு வாங்கித் தந்தா போதும்!"
" சேச்சே! இதை நான் வக்கீலா செய்யலே! உங்களைப்போல ஒரு குடி இருப்பவனாகத்தான் பேசி வாதாடினேன். பார்ப்போம், போகப் போக என்ன முடிவு என்று!"
அதே நேரத்தில், இருபது ஓனர்களும் கூடி தங்கள் கடுங்கோபத்தை வெளிப்படுத்தினர்.
" இது ரொம்ப ஷாக்கிங்! ஓனருக்கு ஒரு பைசாகூட கிடையாது, ஐம்பது லட்சமும் எங்களுக்கே என்று வக்கீல் முழங்கறான்! பாவிங்களா! வீடே எங்களுதுன்னுகூட சொல்லுடுவீங்க போல இருக்கே......."
" மிரட்டல் வேறே! அவங்க ஒத்துழைப்பு இல்லாம நாம விற்கவே முடியாதாமே! பிளாக்மெயில் பண்றாங்களா?"
" தலைவரே! இதுக்கா ஊர்விட்டு ஊர் ஓடிவந்தோம்? ஆமாம், அவங்களுக்கு யார் நாம செட்டியாருடன் பேசின விவரங்களை சொல்லி இருப்பாங்க, துரோகி!"
" அது ஒண்ணும் பெரிய விஷயமில்லே! இங்கேயே வசிக்கிற ஓனர்கள், தங்கள் குடும்பத்தாருடன் விவரங்களை பகிர்ந்து கொண்டிருப்பாங்க! அதிலே ஒரு ரெண்டுங்கெட்டான் சிறுவன்கூட, தன்கூட பழகற குடியிருப்பவர் மகனிடம் தெரிவித்திருப்பான்......"
" சரி, இப்ப என்ன செய்வது?"
" விற்கிற யோசனையை கைவிட்டு, முதல்லே குடி இருப்போரை விரட்டிடுவோம் பிறகு செட்டியாரை அழைத்து பேசுவோம்......."
" செட்டியார் அதற்கு ஒத்துக்கணுமே! தவிர, குடி இருக்கிறவங்களை விரட்டும் வேலை அத்தனை சுலபமல்ல! அவங்க முரண்டு பிடித்தால், கோர்ட்டு, கேஸ்னு பல வருஷம் ஆகுமே.....!"
" இதப் பாருங்க! ஒரு பத்து ஓனர்களுக்காக, மறு பத்து ஓனர்கள் நஷ்டப்பட வேண்டுமா?