சனிக்கிழமைல அதிகாலையில் கோவிலுக்குப் போயிட்டு நான் எங்க ஊருக்குக் கிளம்பிக்குவேன்!” என்றார். நீங்க தாராளமா என் வீட்டுக்கு வாங்க மேம். கண்டிப்பா உங்களைக் கோவிலுக்குக் கூட்டிட்டு போறேன் என்று சொன்னாள்.
சிம்போசியத்தின் முதல் நாள் நிகழ்வுகள் முடிந்து வீடு திரும்பியதும், சித்தி என்ன ரம்யா எப்படி சேலை கட்டுன அனுபவம் எனக் கேட்க, போங்க சித்தி, நீங்க அம்மாவெல்லாம் எப்படித் தான் இதையே நாள் முழுக்க கட்டியிருக்கீங்களோ! யப்பா! முடியல சாமி! என்றாள் சலிப்புடன். சேலையின் அழகே தனி! உடுத்த உடுத்தப் பழகிரும் என்று சித்தி சொல்ல, நான்லாம் இனிமே காலேஜுக்கு சேலையே கட்டற ஐடியால இல்ல என்றாள். தினேஷின் வார்த்தைகளும் நினைவுக்கு வர, அவளின் இதழோரம் மென்புன்னகை அரும்பியது. காலேஜுக்கு சேலை உடுத்தலேன்னா என்ன!எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் சேலை தான் கட்டப்போற, என்றவரிடம் “நோ சித்தி, நான் கல்யாணத்துக்கு அப்புறமும் சல்வார் தான் போடுவேன்!” என சொன்னாள். அம்மாவிடம் கவிதா மேம் அவர்கள் வீட்டில் வந்து தங்குவதைப் பற்றி சொல்ல, மகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியையே தங்கள் வீட்டுக்கு வருகிறார் என்று மகிழ்ச்சி. தனது அறையை அவருக்கு வசதியாக இருக்குமாறு ஒழுங்குபடுத்தினாள்.
மறுநாள் குவிஸ் போட்டியில், இரண்டாம் இடம் பெற்ற ரம்யாவிற்கு சான்றிதழ் வழங்கினார்கள். அன்றைய தினம் கண்மணியைக் காலையில் பார்த்ததோடு சரி, மாலையில் சிம்போசியம் முடிய நேரமாகிவிடும் என்பதால், கணினித்துறைக்குத் தனிப்பேருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். தினேஷின் நினைவும் அலைமோதியது. இரவு உணவு ஏழு மணிக்கு முடியவும், கவிதா மேமும் ஹாஸ்டலில் சென்று தனது பையை எடுத்துவிட்டு அவளுடன் பேருந்தில் வந்தார்கள். வீட்டில் வரவேற்ற அம்மாவும் அப்பாவும், கவிதா மேமை நன்கு உபசரித்தார்கள். “அம்மா, அப்பா! என்றே அவர்களை அழைத்துப் பேசி மிக இயல்பாக இருக்கும் கவிதா மேமை அவர்களுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. இருவரும் பாலை அருந்திவிட்டு தூங்கச் சென்றனர். சிம்போசிய வேலைகளில் களைப்பான மேம் படுக்கவும் தூங்கிவிட, சிறிது நேரம் புரண்ட ரம்யாவும் தூங்கினாள்.
காலையில் சீக்கிரமே எழுந்து விட்ட கவிதா மேமும், ரம்யாவும், குளித்துக் காலை உணவை உண்டு விட்டு கோவிலுக்குக் கிளம்பினார்கள். கோவிலின் ஒவ்வொரு பிரகாரம் சன்னதி என்று நிதானமாக சுற்றி விட்டு, பெருமாளையும் தரிசனம் செய்து முடித்தனர். ஒரு நிமிடமாவது கோவிலில் அமர்ந்து செல்ல வேண்டும் என்ற சாஸ்திரப்படி பிரகாரத்தில் ஒரு தூணருகில் அமர்ந்தனர். கவிதா மேம், வகுப்பில் எல்லாரும் எப்படி?ஒற்றுமையாக இருக்கிறார்களா, ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா என்று பொதுவாக பேசிக்கொண்டு வந்தவர். திடீரென்று, “ரம்யா! யூ ஹேவ் எ குட் லேர்னிங் பொடென்ஷியல்! கல்லூரி காலங்களில் வரும் சலனங்கள்