தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 09 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
வந்தது வேறு யாருமில்லை, அவளே பார்க்கத் தேடிய தினேஷ் தான், அவள் சேலை கட்டி வந்த தகவல் எப்படியோ அவனுக்குத் தெரிந்துதான் அங்கு வந்திருக்க வேண்டும். லேசான புன்னகையோடு அவளைக் கடந்தவன், சேலையில் முதன்முறையாக அவளைப் பார்த்ததில் ஒரு வித்தியாசமான ஈர்ப்புடன், அங்கேயே சுற்றி வந்தான். அவன் செல்லுமிடமெல்லாம் அவ்வப்போது இயல்பாகக் கடப்பவன் போல் அவளையே பார்த்துக் கொண்டு சென்றான். அவன் பார்த்ததை ரம்யாவும் ஒரக்கண்ணில் கவனிக்கத்தான் செய்தாள். இவன் தன்னோட கிளாஸுக்கு போகாமல் இங்கேயே சுத்தி வர்றானே என்று அவள் நினைக்க, வகுப்புகளைக் கட்டடித்தது பற்றிய எண்ணம் துளியுமின்றி தினேஷ் அவளை மறைந்து மறைந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
வகுப்பில் இருந்து ஓய்வறைக்குச் சென்று, எல்லாம் தனக்கு சரியாக இருக்கிறதா என்று உடையைச் சரிசெய்து வெளிவந்தவளின், பின்னாலிருந்த தினேஷின் குரல் கேட்டது, “ரம்யா இனிமேல் காலேஜுக்கு சேலை உடுத்திட்டு வராத! நான் மட்டும் தான் உன்னைப் பார்க்கணும்! எல்லாரும் உன்னைக் கவனிச்சுப் பார்க்கிறது எனக்கு சுத்தமாப் புடிக்கல!” என்றவன் அவளின் பதிலை எல்லாம் எதிர்பாராமல் விறுவிறுவென்று அவளைக் கடந்து சென்றுவிட்டான். ரம்யா என்று அவன் கூப்பிட்ட நொடியில் படபடக்க ஆரம்பித்த அவளின் இதயம், அவன் கடந்து சென்ற பின்னரே இயல்பு நிலைக்கு வந்தது.
உள்ளே சென்று செமினார் ஹாலில் அமர்ந்தாள், தேனீர் இடைவேளை வந்தது. அவளின் வகுப்பு மாணவர்களில் அவனுக்கு நண்பர்கள் சிலர் இருந்ததால், அவர்களுடன் சேர்ந்து தினேஷ் தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். சிம்போசியம் நடந்த ஹாலில் கடைசி வரிசையில் அவன் அமர்ந்திருக்க, எதிர்பாராமல் ரம்யா பின்னால் திரும்பும் போதெல்லாம், தினேஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “என்ன இவன் இப்படி பார்த்துட்டே இருக்கான்? இவன் என்னை பார்க்கிறத வேற யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க? என்றும் பயந்தாள்.
ரம்யா உன்னைக் கவிதா மேம் கூப்பிடுறாங்க! என வகுப்பு மாணவன் ஒருவன் சொல்லவும், மேம் எதையாவது கவனிச்சிட்டாங்களோ என்ற பயத்துடன் எழுந்து சென்றாள். தன்னை மிகவும் மதிப்புடன் நினைக்கும் மேம், தன்னைப் பற்றி ஏதேனும் தவறாக எண்ணிவிடலாம் என்ற அச்சமும் எழ, அவரிடம் சென்று, “மேம்! நீங்க என்னைக் கூப்பிடீங்கன்னு?” என்றவளிடம்,
“உன்கிட்ட ஒரு சின்ன ஹெல்ப் கேக்கத்தான்!” என்றவர் தொடர்ந்து, “ரம்யா உங்கள் ஊரில் இருக்கிற பெருமாள் கோவிலுக்கு வரணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை, அதான் நாளைக்கு சிம்போசியம் முடிஞ்சதும் உன் கூட உங்க வீட்ல ஒரு நாள் தங்கி இருக்கலாமா.