தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 07 - முகில் தினகரன்
அன்று இரவு, படுக்கையில் விழுந்ததும் சுதாகர்ஜியின் காதுகளில் ரவீந்தரின் குரல் ஒலித்தது.
“கடவுள் வரமெல்லாம் தர மாட்டார்!...சந்தர்ப்பம்தான் தருவார்!...அதை வரம் ஆக்குவதும்...சாபம் ஆக்குவதும்...நம் கையில்தான் உள்ளது!”
“அவன் சொல்வதும் உண்மைதான்!...நானும் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு இங்க வந்து கடந்த பதிமூணு வருஷமா இந்தக் கோயில்ல பூஜை பண்ணிட்டிருக்கேன்...பொருளாதார ரீதியில் என்ன சாதிச்சிட்டேன்?...இது ஒரு வினாயகர் கோவிலாகவோ...அல்லது மாரியம்ம்ன் கோயிலாகவோ இருந்திருந்தால் மக்கள் நிறைய பேர் வருவார்கள்..தட்டில் தட்சணைகள் விழும்....இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் குல தெய்வமான “உப்பாயம்மன்” கோயில் என்பதால் அந்தச் சமூகத்தினர் மட்டுமே வருகிறார்கள்...போகிறார்கள்...அதன் காரணமாய் தட்டு வசூலும் கம்மி!...ஹும்..இந்த லட்ட்சணத்துல எனக்கொரு சம்சாரம் வேற....ஒரு குழந்தை வேற...எல்லம் காலக் கொடுமை”
உறக்கம் வெகு தூரம் சென்று விட, மேலே சுழலும் மின் விசிறியையே வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தார் சுதாகர்ஜி. அவர் மனத்திரையில் பதிமூன்று வருடங்களுக்கு முன் தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தின் நிகழ்வுகள் திரைப்படமாய் ஓடின.
****
அன்று ஞாயிற்றுக்கிழமை.
விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் வெளியில் சென்று வர அனுமதிக்கப்பட்ட நாள். காலை பத்து மணி முதல் மாலை ஏழு மணி வரை, என்ற கட்டுப்பாடும் உண்டு. ஹாஸ்டல் மாணவனான சுதாகருக்கு, வீட்டிலிருந்து வந்து பயிலும் ரவீந்தர் மட்டுமே நெருங்கிய நண்பன். ஆகையால் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் ரவீந்தர் வீட்டில்தான் இருப்பான். ரவீந்தரின் தாயார் அலமேலுவின் சமையலுக்கு அவன் அடிமை.
“ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போய்க் கிடக்கற எனக்கு...உங்க சமையல் அமிர்தம்!” என்றான் உச்சுக் கொட்டிச் சாப்பிட்டுக் கொண்டே,
“நீ “சரி”ன்னு சொல்லு தெனமும் சமைச்சு இவன் கிட்டக் குடுத்தனுப்பறேன்...நீ சந்தோஷமா சாப்பிடு” என்று அலமேலு சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம் அம்மா!..இந்த மாதிரி ஞாயிற்றுக் கிழமைகள்ல வந்து சாப்பிடறேனே?...அதுவே போதும்” என்றான் சுதாகர்.
அப்போது டைனிங் டேபிளின் மீது வைத்திருந்த சுதாகரின் மொபைல் அதிர,
“டேய்...உன் மொபைல்ல கால் வருது”என்றான் ரவீந்தர்.
“வரட்டும்...வரட்டும்...சாப்பிடும் போது கால் வந்தா எடுக்கக் கூடாது” என்பது என் பாலிஸி”