அழுது கொண்டே சொன்னான் சுதாகர்.
மறுநாள் கல்லூரி நிர்வாகத்திற்கு அந்த தகவலைத் தெரியப்படுத்தி விட்டு, சக நண்பர்களுடன் பொள்ளாச்சி புறப்பட்டுச் சென்றான் ரவீந்தர்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் அவர்கள் இறங்கும் போதே, சுதாகரின் தந்தை சடலம் சுடுகாட்டை அடைந்து விட்ட தகவல் வர, அவர்கள் அனைவரும் ஒரு ஆட்டோ பிடித்து நேரே சுடுகாட்டிற்கே சென்றனர்.
*****
“என்னங்க...நீங்க இன்னும் தூங்கலையா?” அறைக்குள் வந்த சுதாகரின் மனைவி சரண்யா கேட்க,
சிந்தனை கலைந்த சுதாகர்ஜி, “இல்லைம்மா....” என்றார்.
“என்ன உங்க காலேஜ் ஃபிரெண்ட் வந்தாரா?...அவரைக் கஸ்தூரி அய்யா விட்டுக்குக் கூட்டிட்டுப் போனீங்களா?” கட்டிலில் அவர் அருகில் அமர்ந்தவாறே அவள் கேட்டாள்.
“ம்..வந்திட்டான்...நான் அவனைக் கொண்டு போய் கஸ்தூரி அய்யா வீட்டில் குடியும் வைத்து விட்டேன்” என்றார் சுதாகர்ஜி.
“ஆமாம்...உங்க ஃப்ரெண்ட் என்ன வேலை பார்க்கிறார்?” புடவைத் தலைப்பால் முகத்தில் அரும்பியிருந்த வியர்வை மொட்டுக்களைத் துடைத்தவாறே கேட்டாள்.
“கோயமுத்தூர்ல ஜூபிடர் எண்டர்பிரைசஸ் என்கிற கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராய் இருக்கான்!...நல்ல சம்பளம்!...பயல் மார்க்கெட்டிங்ல புலி!...சாதூர்யமாய்ப் பேசி பொருட்களை விற்பதில் மன்னன்!...“இந்த மாசத்துக்கு இவ்வளவு வித்திருக்கணும்”னு மேனேஜ்மெண்ட் குடுக்கற டார்கெட்டை பதினஞ்சு நாள்ல முடிப்பான்!...அந்த அளவுக்கு பிரில்லியண்ட்” என்று தன் நண்பனின் பெருமைகளை சுதாகர்ஜி சொல்லிக் கொண்டே போக,
“பேசாம நீங்களும் படிச்சு முடிச்சிருந்தா...அவர் மாதிரியே வந்திருக்கலாம்!...“பெரியவங்க விதிச்ச நியதி!...வம்சத்துக்கு கிடைச்ச வரம்”னு டயலாக்கெல்லாம் பேசி கோயில் பூசாரி ஆகி...பூஜ்யமாய் நிக்கறீங்க!...சாமியே ஆனாலும்...சில கோயில்களுக்கு மட்டும்தானுங்க வருமானம் குவியுது!...சில கோயில்கள் ஏழையாகவே இருக்குது!” என்றாள் சரண்யா.
“அதெல்லாம் நம்ம கைல இல்லைடி!...ஆண்டவன் நிர்ணயிக்கற கோட்பாடு”
“மண்ணாங்கட்டி கோட்பாடு!...இதே உங்க ஃப்ரெண்ட் உங்க இடத்துல இருந்திருந்தா...புத்திசாலித்தனமா செயல்பட்டு...இங்கேயும் சாதிச்சிருப்பார்...சம்பாதிச்சிருப்பார்” முகத்தை அஷ்ட கோணலாகிச் சொன்னாள் சரண்யா.
“அடிப்போடி!...கோயில்ல பூஜை பண்றதுல என்ன சாதிக்க முடியும்?...எத்தனை சம்பாதிச்சிட முடியும்?...அதே மந்திரத்தை ஓதிட்டு...அதே மணியை அடிச்சிட்டிருக்க வேண்டியதுதான்!” சுதாகர்ஜி சொல்ல,