தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 10 - முகில் தினகரன்
அன்று ஞாயிற்றுக் கிழமையானதால் சற்றுத் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த அர்ச்சனா, வாஷிங் மெஷினில் போட வேண்டிய சேலைகளையும், இதர துணிமணிகளையும் எடுத்துக் கொண்டு புழற்கடைப் பக்கம் சென்றாள்.
சில நிமிடங்களில், “அர்ச்சனா...அர்ச்சனா” என்று அம்மா பார்வதி அழைக்கும் குரல் கேட்க, தன் வேலையை நிறுத்திக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள் அர்ச்சனா.
“உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க!” என்று எங்கோ பார்த்துச் சொல்லி விட்டு, அம்மா சமையலறைக்குள் செல்ல, யோசனையுடன் ஹாலுக்கு வந்து பார்த்தாள்.
அங்கே!
சவிதாவும், அந்த மைதிலியும் தேவநாதனிடம் அர்ச்சனாவை விசாரித்துக் கொண்டிருந்தனர்.
“வா...சவிதா!”என்றவள், குழப்பத்துடன் அந்த மைதிலி பக்கம் திரும்பி, சன்னக் குரலில், “வாம்மா!” என்றாள். மனம் “இவ எதுக்கு இங்க வந்திருக்கா?” என்ற யோசனையில் தவித்தது.
தேவநாதன் அவர்களிருவரையும் நாற்காலியைக் காட்டி அமரச் சொல்ல,
அமர்ந்தனர்.
“அப்பா...இவ சவிதா!...என் கூட ஆபீஸ்ல வேலை பார்க்கறா!...இவ மைதிலி!...பேங்க்ல...” என்றவள் அதைத் திருத்திக் கொண்டு, “அன்னிக்கு வந்து அக்காவைப் பார்த்திட்டுப் போனாரே ஒரு மாப்பிள்ளை...அவர் வேலை பார்க்கற அந்த பேங்க்ல...அவர் கூட வேலை செய்யுற பொண்ணு!” என்று அறிமுகப்படுத்தினாள்.
அதைக் கேட்டதும் தேவநாதன் முகமெங்கும் கேள்விக் குறிகளைத் தாங்கிக் கொண்டு பார்க்க,
சமையலறைக்குள்ளிருந்து கைகளைத் துடைத்தபடியே வெளியே வந்து நின்றாள் பார்வதி.
சில நிமிடங்கள் அங்கு ஒரு இறுக்கமான அமைதி நிலவ, அதை உடைக்கும் வண்ணம் அர்ச்சனா கேட்டாள், “காஃபி சாப்பிடலாமா சவிதா?”
“அதை அப்புறம் சாப்பிடலாம்...முதல்ல நாங்க வந்த விஷயத்தைச் சொல்லி முடிச்சிடறோம்!” என்ற சவிதா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “அர்ச்சனா எங்கே உன் அக்கா?” கேட்டாள்.
உள் அறையைப் பார்த்து, “அக்கா....அக்கா!” என்று அர்ச்சனா அழைக்க, நிதானமாய், இறுகிப் போன முகத்தோடு, இஷ்டமேயில்லாமல் வந்து நின்றாள் சுலோச்சனா.
“மைதிலி...சொல்லு!...அன்னிக்கு ரெஸ்டாரெண்ட்டுல எங்க கிட்ட வந்து சொன்னியே?...அந்த உண்மைகளை அப்படியே இவங்க கிட்டேயும் சொல்லு!” என்றாள் சவிதா மைதிலியைப் பார்த்து.
அப்பெண் சற்றும் தாமதிக்காமல், அந்த பிரபாகர் தன்னை நான்கு வருடங்களாக காதலித்துக் கொண்டிருப்பதையும், தனக்கே தெரியாமல் ரகசியமாய் சுலோச்சனாவைப் பெண் பார்க்க வந்த விஷயத்தையும், அவர்களிடம் சொல்லி முடித்து விட்டு, இறுதியாய், “அய்யா...சத்தியமய்ச்