அறைக்குள் சென்று விட்டாள்.
அவன் வந்து விட்டான் என்பதை அவன் காரின் ஒலி உணர்த்த அவன் தானா என்பதை உறுதி செய்ய ஜன்னலின் வழியாக எட்டிப் பார்த்தாள். காரில் இருந்து இறங்கி தன்னிடம் இருந்த கீயால் திறப்பவனை கண்டதும் மனம் திக் திக் என்று அடித்து கொண்டது.
அவன் வந்து முகம் கை கால் அலம்பி விட்டு தனுவிடம் விளையாடிக் கொண்டு இருப்பது புரிந்தது. சிறு வயதில் அப்பா வரும் வரை காத்திருந்து அவருடன் விளையாடிய நினைவு வந்தது. மகிழ்ச்சியான நாட்கள் நினைவு வர அதோடு சேர்ந்த நினைக்க விரும்பாத நாட்களும் நினைவு வர கண்களில் நீர் நிறைந்து கொண்டது.
அதற்குள் அம்மா... வாங்க சாப்பிடலாம் என்ற தனுவின் குரல் ஜனனியை அமைதி படுத்தியது.
வெளியே வந்தவளிடம் அம்மா... டேடி ப்ரஸ் ஆகிவிட்டு இப்போ வருவாங்க... சாப்பாடு எடுத்து வைங்க என்றாள்.
சரி என்ற ஜனனி தட்டை எடுத்து வைத்தாள்.
சிறிது நேரத்தில் குளித்து விட்டு ஸ்லீவ் லெஸ் டீசர்ட் நைட் பேன்ட் உடன் வந்தான். மூவரும் அமர்வதற்கு ஏற்ற டைனிங் டேபிள் என்பதால் எப்படி பார்த்தாலும் ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்து தான் ஆக வேண்டும். இயல்பாக ஜனனியின் அருகில் அமர்ந்தவன் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
ஆனால் தனு விடுவதாக இல்லை. ஜனனி கேட்க நினைத்த கேள்விகளை கேட்டாள். உங்களுக்காக தான் அம்மா சப்பாத்தி செய்தாங்க... சூப்பரா இருக்குலப்பா என்ற மகளிடம் மறுத்து கூற மனமில்லாமல் ஆம் என்று தலையாட்டி விட்டு ஜனனியை பார்த்து முறைத்தான். தட்டில் இருந்த சப்பாத்தியை சாப்பிட்டு முடித்தவன் மேலும் இரண்டு சப்பாத்தி எடுத்து வைத்து கொள்ள தனு ஜனனியை பார்த்து அம்மா... உங்க சமையல் ரொம்ப சூப்பர்... அப்பாவே சொல்லிட்டாங்க என்றாள்.
இவன் எப்போது சொன்னான் என்று ஜனனி ஜனாவை பார்க்க அவனோ காதில் எதுவும் விழாதது போல சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
ஜனனி யோசனையாக தனுவை பார்க்க டேடி... அம்மாக்கு புரியல என்று சொல்லி சிரித்தவள் அப்பா சாப்பிட்டு முடித்து விட்டு திரும்ப எடுத்து வைத்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பர் என்று அர்த்தம்... முதலில் வைத்ததை மட்டும் சாப்பிட்டால் பரவாயில்லை என்று அர்த்தம். அதே நேரம் சாப்பிட்டு முடித்து விட்டு சாப்பாடு நல்லா இருக்கு என்று சொன்னாள் அடுத்த முறையாவது நன்றாக செய் என்று அர்த்தம்... அப்படி தானே... நான் சரியாக சொல்லி விட்டேன் தானே என்று அழகாக சிரித்தவளிடம் என் பொண்ணு ஆச்சே ... எல்லாத்தையும் சரியாக புரிந்து வைத்திருக்க என்றவன் தனுவிற்கு ஒரு வாய் ஊட்டி விட்டான்.