தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 09 - முகில் தினகரன்
இரவு எட்டே கால் மணிக்கு கோயிலுக்குள் நுழைந்தான் ரவீந்தர். கோவிலுக்குள் சுதாகர்ஜியைத் தவிர வேறு யாருமேயில்லை. அவரும் கருவறைக் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தார்.
“கும்பிடறேன் ஸ்வாமி” என்றான் ரவீந்தர் தமாஷாய்.
திரும்பிப் பார்த்த சுதாகர்ஜி, “வாப்பா...சாமி கும்பிடறியா?...கருவறைத் திறக்கவா?” கேட்டார்.
“வேண்டாம்....வேண்டாம்...பூட்டிய கருவறையை ஏன் ஜி திறக்கறீங்க?...விடுங்க...கடவுளும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்!...இன்னிக்கு ஒரு பகல் ஷிப்ட்...ஒரு ஒரு ஓவர்டைம் ஷிப்ட் வேலை பார்த்திருக்கார்!” என்ற ரவீந்தர் கோயிலை நிதானமாய் நோட்டமிட்டான்.
வெள்ளையடித்து பல வருஷங்களாகி விட்ட சுவர்களில் ஆங்காங்கே விபூதி மற்றும் குங்குமத் தீற்றல்கள். சில இடங்களில் சுவர்கள் மீதே நிறைய குட்டி மரங்கள் முளைத்திருந்தன. தரை ஆங்காங்கே சிமெண்ட் பெயர்ந்து சொத்தை சொத்தையாய் இருந்தது. பக்தர்கள் கால் கழுவ என போடப்பட்டிருந்த பைப் கடைசிக் கட்டத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அதற்கு நேர் கீழே ஏமாந்தால் வழுக்கு விடும் போல் தரைத்தளம்.
சுதாகர்ஜி எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்ததும், “போவோமா?” ரவீந்தர் கேட்டான்.
“இல்லை...இங்கேயே உட்கார்ந்து பேசுவோம்”என்றார் சுதாகர்ஜி.
இருவரும் கோயிலின் பக்கவாட்டிலிருந்த மண்டபத்தில் அமர்ந்தனர். “ம்...சொல்லுங்க ஸ்வாமிஜி...என் கிட்டே ஏதோ ஆலோசனை கேட்கணும்!னு சொன்னீங்களே?” என்றான் ரவீந்தர்.
“ரவீந்தர்!...பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி...எங்கப்பா சீரியஸ்ன்னு தகவல் வந்தப்ப...நீதான் என்னை பஸ் ஸ்டாண்டுக்குக் கூட்டிட்டு வந்து பஸ் ஏத்தி அனுப்பி விட்டே!...நான் ஊர் வந்து சேருவதற்கு முன்னாடியே எங்கப்பா போய்ச் சேர்ந்திட்டார்!...நானும் அழுதுக்கிட்டே ஒரு மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய காரியங்களை செஞ்சு முடிச்சேன்!...அதுக்கப்புறம்...எங்க குலத்தைச் சேர்ந்த மக்களெல்லாம்...ஒரு சின்ன கூட்டம் போட்டாங்க!...அந்தக் கூட்டத்துக்கு என்னையும் வரச் சொல்லியிருந்தாங்க...நானும் போனேன்...!...அங்கே....” சொல்லி விட்டு நிறுத்தினார் சுதாகர்ஜி.
“சொல்லுங்க ஜீ...அந்தக் கூட்டத்துல என்ன நடந்திச்சு?”
*****
“த பாருங்க....இந்த “உப்பாயம்மன்” நம்ம குல தெய்வம்!...இந்த அம்மனோட சன்னதில பூஜை செய்யற உரிமை காலகாலமா செத்துப் போன வேதாச்சலம் குடும்பத்தார்கள் கிட்டத்தான் இருக்கு!...இப்ப...அந்தக் குடும்பத்துல இருக்கற ஒரே ஆண் வாரிசு...தம்பி சுதாகர்தான்!...ஆனா அவரு இந்த ஊர்ல இல்லாம டவுன்ல படிச்சிட்டிருக்காரு!...அதனால...இனிமேலும் அந்த உரிமையை அந்தக் குடும்பமே தொடருமா?...இல்லை...இந்தக் கால கட்டத்திலிருந்து அந்த