சொல்லி விட்டு தன் தோள் துண்டை எடுத்து வாயோரம் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார் பெரியவர்.
“அவனுக இருபது பேரு...உன்னோட முப்பாட்டன் கொம்பேறித்துரை ஒத்தை ஆளு!...ஆனாலும் கொஞ்சமும் பயப்படலை...வெறும் தடிக்கம்பை வெச்சே அத்தனை பேர் கூடவும் சண்டை போட்டார்!...சொன்னா நம்ம மாட்டீங்க!...அந்த இருபது பேர்ல பத்து பேரை அடிச்சே சாவடிச்சிட்டார்...அதைக் கண்டு மத்தவனுக பயந்து ஓடியே ஓடிட்டானுக!...போற போக்குல ஒருத்தன் விஷம் தடவிய கத்தியை கொம்பேறித்துரை முதுகுல பாய்ச்சிட்டு ஓடிட்டான்...இவரு அதைக் கொஞ்சமும் கண்டுக்காம...முதுகுல செருகின கத்தியோட பூட்டிய கோயில் கதவுல காவலாளி மாதிரி சாய்ஞ்சு நின்னுக்கிட்டு..அப்படியே உயிரை விட்டுட்டார்!...காலைல வந்து பார்த்த நம்ம ஜனங்க அப்படியே வாயடைச்சுப் போயிட்டாங்க!...கோயிலுக்குள்ளிருந்து ஒரு எரிஞ்ச திரியைக் கூட அவனுக எடுத்திட்டுப் போக முடியலை!...அப்படி உயிரைக் கொடுத்து கோயில் சிலையையும்...நகைகளையும் காப்பாத்திய அந்தக் கொம்பேறித்துரை குடும்பத்துக்கே கோயில் பூஜை உரிமை!ன்னு அன்னிக்குப் போட்ட தீர்மானம்தான் இன்னிக்கு வரைக்கும் ஓடிக்கிட்டிருக்கு!”
சுதாகரின் பங்காளி, “என்ன சுதாகரு கேட்டுக்கிட்டியா?...இதுக்கு மேலேயும் நீ அந்த உரிமையை விட்டுக் குடுத்துடலாம்!னு நினைக்கறியா?...இந்த நாட்டுக்கு எப்படி சுதந்திரம் வாங்கினோமோ...அதே மாதிரித்தான் இந்த உரிமையையும் வாங்கியிருக்கோம்!...சுந்த்திரத்தை விட்டுக் கொடுப்போமா?...சொல்லு!” கேட்டார்.
என்ன பதில் சொல்வதென்றே புரியாத நிலையில் சுதாகர் நிற்க, அவர்களே தீர்மானமும் நிறைவேற்றினர். “வேதாச்சலம் மனம் சுதாகர் அவங்க அப்பா இடத்துல இருந்து இனிமே கோயில் பூஜை காரியங்களைச் செய்வார்”
*****
“இப்படியொரு தர்ம சங்கடமான சூழ்நிலைல...வேற வழியே இல்லாம நான்...கோயில்ல பூஜை செய்ய ஒத்துக்கிட்டேன்!...இந்த வருஷத்தோட பதிமூணு வருஷம் ஆச்சு...ஆனா...பத்து ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியலை...கூலிக்காரனா இருந்திருந்தா கூட...நிரந்தரமா ஒரு கூலி வரும்....சேர்த்து வைக்கலாம்!...ஆனா இங்க அப்படியில்லை...ஒரு நாளைக்கு தட்டில் நிறைய விழும்...ஒரு நாளைக்கு கொஞ்சமாய் விழும்!...நிறைய விழும் நாளில் நல்ல சாப்பாடு கிடைக்கும்...குறைவா விழற நாளில் உபவாசம்தான்!” வருத்தமாய்ச் சொன்னார் சுதாகர்ஜி.
“ஏன்...கோயிலுக்கு கூட்டம் வர்றதில்லையா?” யோசனையுடன் கேடான் ரவீந்தர்.
“ம்ஹும்...ஏன்னா...இது ஒரு பொதுக் கோயில் அல்ல!...ஒரு குலத்துக்கான குல தெய்வம்!...அந்தக் குலத்துக்காரங்க மட்டும்தான் வருவாங்க!..மத்தவங்க வர மாட்டாங்க!...அவங்களுக்கெல்லாம்