“ஆபீஸ் டைம் ஆறு மணி வரைக்கும்தான்!...ஆனா எனக்கு மட்டும் வேலை முடியவே முடியாது!...உண்மையைச் சொல்லணும்ன்னா...இன்னிக்கு நான் சீக்கிரத்திலேயே வந்திட்டேன்!...இதுவே கோயமுத்தூராய் இருந்திருந்தால்...ராத்திரி பத்தரைக்கும் மேலே ஆகும்” என்றான்.
“சாப்பிட்டீங்களா?” கண்களில் காதலை ஏந்திக் கொண்டு கேட்டாள்.
“ம்...ஆபீஸ் பக்கத்துல ஒரு மெஸ் இருக்கு!...அங்கியே சாப்பிட்டுட்டு வந்திட்டேன்!...நீங்க இன்னும் தூங்கலையா?...ஆதேஷ் எங்கே?..அப்பா எங்கே?” வீட்டிற்குள் பார்த்தபடியே கேட்டான்.
“அப்பா...மாத்திரை சாப்பிட்டுட்டு எட்டு மணிக்கே படுத்திடுவார்!...ஆதேஷ் டி.வி.பார்த்திட்டிருக்கான்” என்றவள், “நீங்க போய்...ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க!...உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.
“என்ன விஷயம்?” நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு பயத்தோடு கேட்டான்.
“பயப்படாதீங்க...சாதாரண விஷயம்தான்” என்றாள் வத்சலா சிரித்துக் கொண்டே.
கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டைத் திறந்து கொண்டு அறைக்குள் சென்றவன், தோளிலிருந்த லாப்டாப் பேக்கை நாற்காலி மீது வைத்து விட்டு, சட்டையைக் கழற்றினான்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு, நிதானமாய் வாசலுக்கு வந்தவன், அங்கே வத்சலா அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் தர்மசங்கடமானான். “அடப்பாவமே...இவங்க வெய்ட் பண்ணிட்டிருப்பதை மறந்திட்டேனே?”
அவளைப் பார்த்துப் புன்னகைத்து தன் வீட்டு வாசற்படியில் அமர்ந்தான் ரவீந்தர்.
காம்பௌண்டிற்கு வெளியேயிருந்த வேப்ப மரம் அவர்களுக்காக தென்றலை அனுப்ப, கண்களை மூடி, “ஆஹா...காத்து சுகமாயிருக்கு” என்றான்.
“தேடும் கண் பார்வை தவித்தேன்!..துடித்தேன்!...சொன்ன வார்த்தை காற்றில் போனதோ...வெறும் மாயமானதோ?” பக்கத்து வீட்டு ரேடியோ இன்னும் பாடிக் கொண்டிருந்தது.
“ஆமாம்...கோயமுத்தூரில் இருந்தா ராத்திரி பத்தரைக்கும் மேலே ஆகும்!”ன்னு சொன்னீங்களே?...உங்க அப்பா உங்களைக் கேட்க மாட்டாரா?” வத்சலா கேட்க,
“ஓ...பொள்ளாச்சில இறந்து போனவங்க மறுபடியும் வந்து பேசுவாங்களா?” புன்னகையோடு கேட்டான்.
அவள் புரியாமல் பார்க்க,
“எனக்கு ஆறு வயசு இருக்கும் போது...எங்கப்பா ஒரு விபத்துல... “பாபா மர்கயா” ஆயிட்டார்” சிரித்துக் கொண்டே அவன் சொல்ல,
நெஞ்சு கனத்துப் போனாள் வத்சலா. கண்களில் இரக்கம் சொட்ட ரவீந்தரைப் பார்த்தாள்.