தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 18 - ஜெபமலர்
கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்து இருந்தாள். இதுவரை மனதில் பதிய வைத்து இருந்த அனைத்து உணர்வுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஆரம்பத்தில் அதாவது ஸ்வீனாவை சந்தித்த நாளில் இருந்து ஒவ்வொன்றையும் மீண்டும் கண் முன்னே நிறுத்தினாள்.
ஆரம்பத்தில் ஆபிஸ் விஷயத்தில் நம்பிக்கையோடு பல பொறுப்புகளை கொடுத்த ஸ்வீனா ஓரளவு நன்றாக பேசி பழகி புரிந்த பிறகு தான் தோழியாக சில குடும்ப நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தாள்.
மிகவும் நெருங்கி பழகிய பிறகுதான் தனுவை அறிமுகம் செய்தது ஜனனிக்கு நினைவிற்கு வந்தது.
தனுவுடன் பழகிய பிறகுதான் ஜனார்த்தனனைப் பற்றி பேசினாள். அவனைப் பற்றி நல்ல விஷயமாக பேசிக் கொண்டதை விட அவனைப் பற்றி சலிப்பாக பேசிய நாட்கள் தான் அதிகம்.
அப்போது ஸ்வீனாவின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை கவனிக்க தவறி இருந்தாலும் இப்போது நினைத்து பார்க்கும் போது அவளின் உணர்வுகளை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு முறையும் ஜனாவை பற்றி பேசியது எல்லாம் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பேசியிருக்கிறாள் என்பதை இப்பொழுது உணரமுடிந்தது. அப்படி என்றால் இந்தத் திருமணம் கூட அவள் விரும்பியது தான். அப்படி என்றால் தனுவை என்னுடன் பேச அனுப்பியது கூட அவளது விருப்பமும் ஒரு அழகான திட்டமும் தான் என்பதை புரிந்து கொண்டாள் ஜனனி.
ஜனாவிற்கும் ஸ்வீனாவிற்கும் இடையே முரண்பாடான ஒரு உறவு இருக்கிறது என்று அந்தப் பெண்மணி கூறியது சரியாக இருக்குமா என்று யோசிக்க ஆரம்பித்த அவளுக்கு இல்லை... நிச்சயம் இல்லை என்று அவளது மனம் தெளிவாக பதில் உரைத்தது.
ஆம்... தனா அண்ணா தனா அண்ணா... என்று ஸ்வீனா உருகி உருகி பேசுவது போல தெரிந்தாலும் ஒருமுறைகூட அவனை தொட்டு பேசியது இல்லை... அது மட்டும் இல்லை. அவன் அருகில் சிறிது இடைவெளிவிட்டு நின்று பேசுவதையும் ஜனனியால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஸ்வீனா அண்ணா அண்ணா அண்ணா என்று ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அன்பொழுக பேசும் ஒவ்வொரு முறையும் அஸ்விட் முகத்தில் சிறு கோபமோ வருத்தமோ எதுவுமே தெரிந்ததில்லை... மாறாக அவன் முகத்தில் ஒரு பெருமிதம் மட்டுமே உண்டாயிருக்கும். எப்போதும் கடுகடுவென இருக்கும் ஜனாவின் முகத்தில் கூட ஸ்வீனாவைப் பார்க்கும் பொழுது ஒரு நன்றி உணர்வு மட்டுமே கலந்து இருக்கும்.