அந்தக் கூடத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேருமே ஒரு தெளிவான உற்சாகத்தில் மிதந்திருக்க, சம்பூர்ணம் மட்டும் எந்த வித எக்ஸ்பிரஸனும் இல்லாமல் கட்டை போல் அமர்ந்திருந்தாள்.
உள் அறையின் ஜன்னல் பக்கம் நின்று கொண்டிருந்த அர்ச்சனா, சுலோச்சனாவிடம் அவசரமாய் சென்று, அவள் கையைப் பற்றி படு வேகமாய்க் குலுக்கினாள். “கன்கிராஜுலேஷன்ஸ் கல்யாணப் பொண்ணு!...ஐப்பசி ரெண்டு...அக்காவுக்கு முகூர்த்தம்!...அடுத்த ஏழாவது மாசம் வளைகாப்பு!...ம்ம்..ஜமாய்!...இனி என்ன?...கனவுதான்...டூயட்தான்!” என்றாள்.
“போடி...பெரிய மனுஷி!” என்று தங்கையை செல்லமாய்க் கோபித்த சுலோச்சனா, இப்போதே கனவு காண ஆரம்பித்தாள்.
“அக்கா...நான் சொன்னா எல்லோரும் என் மேலே அனாவசியமாய்க் கோபப்படறீங்களே!...இப்ப...அங்க என்ன நடந்தது தெரியுமா?....தரகர் பஞ்சாங்கத்தைப் பர்த்து முகூர்த்த தேதி குறிச்சு சொன்னதும் எல்லோர் முகத்திலும் கொள்ளை கொள்ளையா சந்தோஷமும்...மகிழ்ச்சியும் கொப்பளிச்சுது!...ஆனா...அந்த சம்பூர்ணம் முகத்துல மட்டும் எள்ளும் கொள்ளும் ஏகமாய் வெடிச்சுது!...எதுக்கு அந்தச் சனியன் பிடிச்சவளுக்கு இத்தனை பொறாமை?...நம்ம மாதிரி ஏழைக வீட்டிலெல்லாம் நல்ல காரியங்களோ...விசேஷங்களோ நடக்கவே கூடாதுன்னு நெனச்சிட்டிருக்காளா அவ?”
“விடுடி...விடுடி!...ஏதோ இந்த மட்டிலும் அவ வாய் திறந்து பேசி குழப்பம் எதுவும் உண்டாக்காம இருக்காளே?...அதுவே பெரிய விஷயம்!” என்றாள் சுலோச்சனா.
“இரு...இரு...இப்ப அந்தச் சனியன் என்ன பண்ணுது?ன்னு பார்த்திட்டு வர்றேன்!” என்று சொல்லி விட்டு தன் அக்காவிடமிருந்து நகர்ந்து மீண்டும் அந்தச் சிறிய ஜன்னலருகே சென்று எட்டிப் பார்த்தாள் அர்ச்சனா.
“அக்கா....அதைக் காணோம்!...எந்திரிச்சுப் போயிடுச்சு போலிருக்கு!” என்றாள் அவள் உற்சாகமாய்.
“போயிடுச்சல்ல?...சரி விட்டது சனியன்னு நெனச்சிட்டு பேசாம இரு!...என்ன?”
“அக்கா...அது என்ன நெனச்சிட்டு இன்னிக்கு இங்க வந்து உட்கார்ந்திட்டிருந்திச்சு தெரியுமா?...வழக்கம் போல் இந்த தடவையும் இந்த வரன் அமையாமப் போயிடும்...நாம நல்லா கை கொட்டிச் சிரிக்கலாம்னு நெனச்சு வந்திருக்கு!...ஆனா எல்லாம் சுமுகமா நடந்து முடிஞ்சதைத் தாங்க முடியாம...எந்திரிச்சு ஓடியே போயிடுச்சு!” சொல்லிவிட்டுச் சிரித்தாள் அர்ச்சனா.