அமிர்தாஞ்சனையும் விக்சையும் ரம்யாவின் கை, கால்களில் சூடு பறக்கத் தேய்த்து விட்டாள். குளிர் நடுக்கம் சற்று தணியவும், ரொம்ப தேங்க்ஸ் தேவி என்றாள் ரம்யா. அதற்கு, “காதல் வயப்பட்டு கொஞ்சம் லூஸா இருக்கலாம் ரம்யா, ஆனால் அதுக்குன்னு நீ அளவுக்கு மீறி லூசா இருக்காத!” என்றாள். எந்நேரம் தூங்கினார்கள் என்றே தெரியவில்லை.
புதிய இடத்தில் ஆழ்ந்த தூக்கமில்லாத காரணத்தால் இருவருமே சீக்கிரம் எழுந்து விட, ரிசார்ட்டை சுற்றி நடந்து பார்ப்போம் என்று ஊட்டியின் அதிகாலை அழகையும் பனியையும் இளஞ்சூரியனின் கதிர்களையும் ரசிக்கப் புறப்பட்டார்கள். அவர்களின் வகுப்பு மாணவர்கள் தங்கியிருந்த இடத்தைக் கடக்கும் போது, யாரோ ஒருவர் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டதும், இருவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். தேவி, நான் சொன்னப்போ மேம் என்னவோ இவங்களை நல்லவங்க மாதிரி சப்போர்ட்டா பேசினாங்க. பார்த்தியா கேம்ப்பயர் கேன்சல் பண்ணிட்டு நைட்டு தண்ணி அடிச்சிருக்காங்க. எதிரில் அவள் வகுப்பு மாணவர்கள் இருவர் வர, ஒருவனின் நெற்றியில் பிளாஸ்டர், இன்னொருவனின் கையில் பேண்டேஜ் கட்டு. என்னாச்சு என்று ரம்யா கேட்க, நைட் கீழே விழுந்துட்டோம் என்றனர். இந்த புல்லில் விழுந்தா இப்படி அடிபட்டது என்று தேவி கேட்க, ஆ ஆமா என்று மழுப்பி விட்டு நகர்ந்தனர். அலபமா அந்த சிடிக்காக ஏ செக்சன் இருக்கிற ரிசார்ட்ட்டுக்குப் போய் வம்பிழுத்து அடி வேற வாங்கிருக்காங்க. நல்ல பசங்க தான்! என்று சொல்லிக் கொண்டே நடந்தாள் தேவி.
அறைக்குத் திரும்பி குளித்துத் தயாராகவும், ரம்யாவுக்கு தினேஷ் என்ன செய்து கொண்டிருப்பானோ என ஓர் யோசனை, சத்யாவும் அம்மாவும் திடீரென மனதில் வந்தார்கள். கிளம்புடி ஹேண்ட்பேக் எடுத்துக்கோ, என்று தேவி சொல்லவும் அறையைப் பூட்டி வெளியில் வந்தார்கள். காலை உணவை உண்டதும், சூட்டிங் ஸ்பாட் என்று ஓரிடத்துக்கு சென்றனர். பல திரைப்படங்களில் அந்த இடம் வந்ததால் அந்த பெயர். அங்கே பெண்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தேவியும் ரம்யாவும் ஒரு மரத்தின் அருகே நின்று புகைப்படம் எடுக்க, ஒரு மாணவன், ஏம்மா நீங்க ரெண்டு பெரும் ரெட்டைப் பிறவியா என்று கேலியாகக் கேட்க, ஆமா என்றாள் தேவி. ஹ்ம்க்கும் என்றவாறே அவன் சென்றான். பின்னர் ரோஜாப் பூங்காவிற்குச் சென்றனர். அழகான ரோஜா மலர்கள் கண்ணையும் மனதையும் கவர்ந்தன. மதிய உணவிற்குப் பின்னர், தொட்டபெட்டா மலையுச்சியைக் காண சென்றனர். எதிரில் ஒரு பேருந்து கடந்து செல்ல, அவர்கள் கல்லூரியின் பேருந்து தான், சிவில் பிரிவு மாணவர்கள் டூர் வந்த பேருந்து அது என்பதை பேனரில் பார்த்து மாணவர்கள் கூச்சல் எழுப்ப அந்த பேருந்தில் இருந்து பதில் கூச்சல் வந்தது. சிவில் என்ற வார்த்தைகள் காதில் விழவும், முதலில் நாமும் இங்கே வந்திருந்தால் தினேஷைப் பார்த்திருக்கலாமே என்று ரம்யா நினைத்தாள். தொட்டபெட்டா சிகரத்தின் அழகைக் கண்டபின் அறைக்குத் திரும்பினார்கள்.